Quantcast
Channel: அய்யனார் விஸ்வநாத்
Viewing all articles
Browse latest Browse all 133

அத்தியாயம்- ஏழு

$
0
0
என்னை கிட்டத்தட்ட எல்லோருமே பைத்தியம் என்கிறார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும் ஆனால் என் தலையைத் தொலைவில் பார்த்த உடனேயே நைசாக நழுவி கண்ணுக்குப் புலப்படாத இடத்தில் மறைந்து கொள்கிறார்கள் என்பதுதான் ஆற்றாமையாக இருக்கிறது. இதே இவர்கள் ஒரு காலத்தில் என் பேச்சைக் கேட்க கியூவில் நின்றார்கள். அந்தி சாய்வதற்கு முன்னமே ரம் புட்டிகளை இடுப்பில் மறைவாய் சொருகிக்கொண்டு வந்துவிடுவார்கள். மலையடிவாரம், வயல்வெளி, சந்தடியில்லாத ரயில்வே கேட் என தினம் ஒரு இடம். ஆறு மணிக்கு பேச ஆரம்பித்தால் முடிய பத்து பதினோரு மணி ஆகும். நடுநாயகமாய் உட்கார்ந்திருப்பேன். வருபவர்கள் கையிருப்பிற்கேற்ப ஸரக்கை வாங்கி வந்துவிடுவார்கள். கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள். அசராமல் பதில் சொல்லிக் கொண்டிருப்பேன். முப்பத்தைந்தைக் கடந்தவர்களின் கேள்விகளில் செக்ஸ் அல்லது ஆன்மீகம் தாண்டி வேறெதுவும் இருக்காது. கூட்டுக் கலவி, நிர்வாணம், சுதந்திரம் பற்றியெல்லாம் அசராமல் பேசுவேன். எதையாவது அச்சுபிச்சுவென்று சொல்லிவிட்டாலும் இறுதியில் ஓஷோ இப்படித்தான் சொல்றார் என முடிப்பேன். "இண்டலக்ட்ஸ் ஆர் காம்ளிகேடட் யு "நோ என்பேன். கூட்டம் வாயைப் பிளக்கும். எந்த மாதிரியான கேள்வியையும் ஓஷோ, ரமணர், வாத்சாயனர், கொக்கொகே சாஸ்திரம் என்பதில் போய் முடித்தால்தான் கேட்டவர்களுக்கு நிம்மதி.

 மதங்கள்- குறிப்பாய் இந்து மதம், திராவிடம், பெரியார், தமிழக அரசியலின் இன்னொரு பக்கம், சினிமா கிளுகிளுப்பு,நடிகை நியூஸ்கள் இதெல்லாம் முப்பதைத் தொடுபவர்களின் தளம். நடிகைகளைப் பற்றி பேசும்போது மட்டும் ஒரு செயற்கையான உற்சாகத்தை பேச்சில் வரவழைத்துக் கொள்வேன். அட்டு பீசான நடிகையை பேரழகி என சிலாகிப்பேன். உச்ச நட்சத்திரங்களும் இயக்குனர்களும் அவள் காலில் விழுந்து கிடந்தார்கள் என்பேன். இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார பிசினெஸ்மேன் அவளுக்குத் தங்கத்தில் ப்ரா செய்து கொண்டு போனான் என்பேன். அந்த கணத்திலேயே அந்த நடிகைக்கு ஓரிருவர் திடீர் தீவிர ரசிகர்களாகிவிடுவார்கள். அந்த நடிகை நடித்த மகா த்ராபையான படங்களின் டிவிடி க்களைத் தேடி அலைவார்கள். காவியத்தைப் பார்ப்பதுபோல் அப்படத்தைப் பார்த்துவிட்டு அடுத்தநாள் சிலாகிப்பார்கள். "உங்கள் கண் வழியே அவளைப் பார்த்தேன் அவள் பிரபஞ்சத்தின் பேரழகி" என வாரமலருக்கு கவிதை அனுப்புபவன் அடித்துவிடுவான்.

  புதிதாக குடிக்க ஆரம்பிக்கும் பயல்களுக்கு உரை கொடுப்பதுதாம் இருப்பதிலேயே சுலபம். குடியின் பெருமை பற்றிப் பேசினாலே போதுமானது. விஞ்ஞானப் பூர்வமாய் குடியின் பலன்கள், குடி உடலுக்கு செய்யும் நன்மை, குடிகாரப் பிரபலங்கள், குடித்துவிட்டு அவர்கள் செய்த கூத்து. பெண் குடிகாரர்கள், பெருங்குடிகார நடிகைகள் என தகவல்களாய் அள்ளி விட்டாலே போதும். பயல்களுக்கு போதை பன்மடங்காகி காசை ஸரக்கில் விசிறுவார்கள். பெரிய குடி என்பது சிறுபயல்களோடுதான் சாத்தியப்படும். அவர்களுக்கு நானொரு மகாபுருஷனாகத் தெரிந்த காலமும் உண்டு. இந்தக் கூட்டம் தன்னிச்சையாக அமையும். பொதுவாக மாலை எந்தக் குழு சீக்கிரம் வருகிறதோ அவர்களோடு இணைந்து கொள்வேன். என்னைப் போன்ற கலைஞர்கள், சிந்தனையாளர்கள், வாசிப்பாளர்கள் உழைப்பிற்கு எதிரானவர்களாக இருக்க வேண்டும். உழைத்தால் செக்கு மாட்டு வாழ்கைக்கு மூளை பழகிவிடும். என்னால் சுதந்திரமாக சிந்திக்க முடியாது என்பது போன்ற வாசகங்களால் இந்த கூட்டத்தைக் கட்டிப் போட்டும் வைத்திருந்தேன். புதுப்பயல்களில் ஓரிருவர் என் மொத்த செலவையுமே ஏற்றுக் கொண்டனர். உணவு, ஆடைகள், நல்ல இருப்பிடம் என எல்லாமும் கிடைத்தது. பல தடிதடியான புத்தகங்களையும் ஓரிருவர் வாங்கிக் கொண்டு வந்து கர்ம சிரத்தையோடு கொடுத்துவிட்டுப் போவார்கள். அந்த நாவல் குறித்த விமர்சனத்தை மறக்காமல் கேட்பார்கள். அதிரடியாக சொல்வேன். அதில் ஒரு பக்கத்திற்கு மேல் என்னால் வாசிக்க முடியவில்லை. எழுதினவனின் மூளை கிட்டத்தட்ட பத்தாம் நூற்றாண்டிலேயே செத்துப் போய்விட்டது. கையிருப்பை எல்லாம் போட்டு புத்தகம் வாங்கிக் கொடுத்தவன் புளங்காகிதமடைந்து இதல்லவா விமர்சனம் என்று விட்டு முழுத் திருப்தியாகப் போவான்.

  எல்லாம் சரியாகத்தான் போய்கொண்டிருந்தது. முப்பத்தைந்து வயது கும்பலில் ஒருவனால் வந்த வினை. ஒருநாள் அவன் நீங்கள் ஏன் நாவல் எழுதக் கூடாது எனக் கேட்டுவிட்டான். திக் கென்றானாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல். நான் சிந்தனையாளன் மட்டுமேதான். அதை நாவல் எனும் செயலாக்கி அதன் மூலம் கிடைக்கும் பலனை அனுபவிக்க தயாராக இல்லை என்றேன். ஒருவருக்கும் அப்பதில் உவப்பில்லாமல் போய்விட்டது. நாவல் எழுதுங்கள் என்பதை அந்தக் குழுவே சொல்ல ஆரம்பித்துவிட்டது. ஒரு கட்டத்தில் அவர்களின் நச்சரிப்புத் தாளாமல் மெல்ல முப்பத்தைந்து வயது கும்பலை கைகழுவிவிட்டு முப்பது கும்பலிலும் இருபது கும்பலிலும் மட்டும் தலைகாட்டிக் கொண்டிருந்தேன். எப்படியோ இந்த நாவல் பேச்சு மற்றவர்களுக்கும் பரவி நாவல் எழுதுங்கள் நாவல் எழுதுங்கள் என பார்க்கும் இடத்தில் எல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.இவர்களின் தொல்லை தாங்க முடியாது போன ஒரு கட்டத்தில் நாவல் எழுதுவது பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன்.

  எதை எழுதலாம் என்பது குறித்த சிந்தனைதான் இருப்பதிலேயே நெருக்கடியானது. எப்படி உட்கார்ந்து யோசித்தாலும் ஒரு மண்ணும் மூளையில் உதிக்கவில்லை. சில நாட்கள் எழுத்து குறித்த சிந்தையில் இருப்பதாகச் சொல்லி குடிக்க கூப்பிட்டவர்களை கழற்றிவிட்டேன். ஆனாலும் பக்கிகள் "நாவல் என்னாச்சு சார்?" என்பதைக் கேட்டுவிட்டுத்தான் நகர்ந்தனர். நாளையடைவில் நாவல் என்னாச்சு சார் என்ற கேள்வியின் மூலமாய் என்னை கேலிசெய்கிறார்களோ என்ற சந்தேகம் வலுப்பெற ஆரம்பித்தது. இந்த நாவல் என்னாச்சு என்பதை ஒரு வித நமுட்டுச் சிரிப்போடு எல்லாக் குழுவினரும் கேட்கப் பழக ஆரம்பித்த பிறகு அவமானம் தாங்காமல் சரி வருவதை எழுதுவோம் என உட்கார்ந்து எழுத ஆரம்பித்தேன். ஒரு பத்தி எழுதுவதற்குள் மூச்சு வாங்குகிறது. ஒரு பத்தியிலும் ஏராளமான எழுத்துப் பிழைகள். சின்ன ர வா? பெரிய ற வா சின்ன ன வா பெரிய ணா வா என்பது குறித்த சந்தேகமே நள்ளிரவு வரை ஓடும்.

  சரி இனி நாவலை வாயால் எழுதுவோம் என பழைய ஃபார்முக்கு வந்தேன். மாலை குடிசந்திப்புகளில் உற்சாகமாய் கலந்துகொண்டேன் உலகத்தின் எந்த மூலையிலும் எழுதப்படாத நாவலை எழுதப்போவதாக சொன்னதும் ஆர்வமானார்கள். கிட்டத்தட்ட ஒரு மாதம் இந்த எவராலும் எழுதப்படாத நாவல் தான் ஓடிக் கொண்டிருந்தது. அப்படி என்ன நாவல் என்றதற்கும் தயாராய்தான் இருந்தேன். "ஒரே நாவல் ஆனால் பல அடுக்குகள். ஒரு அடுக்கு க்ரைம். ஒரு அடுக்கு இலக்கியம். இன்னொரு அடுக்கு இதை இரண்டையும் எழுதும் நான். அதாவது எழுத்தாளர்களை எழுதும் எழுத்தாளன். எப்படி இருக்கு?" என ஆர்ப்பாட்டமாய் சிரித்தேன்.

  முப்பத்தைந்துகளிடம் "இந்த நாவல் ஒரு அடல்ட்ரி. அதாவது க்ரைம் நாவல் எழுதுபவனின் அடல்ட்ரி. ப்ளஸ் இலக்கிய எழுத்தாளினியின் அடல்ட்ரி ப்ளஸ் க்ரைம் நாவலுக்குள் வரும் ஏராளமான அடல்ட்ரி ப்ளஸ் இலக்கிய நாவலில் வரும் அடல்ட்ரி .. அடல்ட்ரி அடல்ட்ரி அடல்ட்ரி "எனச் சொல்லிவிட்டு மூச்சு வாங்கினேன்.

  முப்பதுகளிடம். "இந்த நாவல் ஒரு புதிர். அதாவது maze அதாவது லாப்ரிந்த். அதாவது ஒரு நாவலுக்குள் ஏராளமான புதிரடுக்குகள். ஒவ்வொரு அடுக்கிலேயும் ஒவ்வொரு பரவசம். புதிர்தன்மை பரவசம் என்லைட்மெண்ட். யா என்லைட்டண்டு" என்றேன்.

  இருபதுகளிடம் "இந்த நாவல் ஒரு கொண்டாட்டம் பரவசம், குடி, பெண், காமம், மேலும் குடி காமம் உடல் அவ்ளோதான் உடலுக்கு பேதம் கிடையாது. ஆணும் ஆணுமான உடல் பெண்ணும் பெண்ணுமான உடல் அல்லது க்ராஸ்ஃப்ங்க்சனல் உடல்" என்றேன்

  ஒரு மாதம் பிழைப்பு ஓடியது. அடுத்த மாதமே ஆரம்பித்துவிட்டார்கள். "எத்தன பக்கம் சார் எழுதி இருக்கீங்க. படிச்சு பாக்கலாமா?"

  "அப்படிலாம் எடுத்த உடனேயே எழுதுற முடியாதுப்பா. ஐரோப்பால ஒரு நாவல பத்து வருஷமா எழுதுவாங்க. ஏன் ஆயுள் முழுக்க ஒரே ஒரு நாவல் எழுதினவங்கலாம் இருக்காங்க. இது என் கனவு நாவல். மெதுவாத்தான் எழுதனும். தவிர அதுக்கான மனநிலை வேணாமா"? கேள்வி கேட்ட கூட்டம் சரியெனப் போய்விடும். இப்படியாக ஒரு மாதம் ஓடியது.

  அதற்கு அடுத்தது நேர்ந்தவைகளை பிறகு சொல்லும் மனநிலை இருந்தால் சொல்லுகிறேன். ஆனால் முதல் பத்தியில் சொல்லியிருப்பதுபோல இவர்கள் என்னைப் பார்த்தாலே ஓடிக் குதித்து தப்பி தலைமறைவாகிவிடுகிறார்கள் அவ்வளவுதான் சொல்ல வந்தது.

  மேலும்

Viewing all articles
Browse latest Browse all 133

Latest Images

Trending Articles


ஆஸ்திரேலியாவில் ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் ஆலயம் - குகையில் இருக்கும் அதிசய...


சித்தன் அருள் - 1002 - அன்புடன் அகத்தியர் - கோடகநல்லூரில் கொங்கணவர் பொதுவாக்கு!


எவடே சுப்பிரமணியம்?


சித்தன் அருள் - 768 - தாமிரபரணி புஷ்கரம், அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர்!


சென்ற வார பாக்யா ஜனவரி 20-26 இதழில் என் ஜோக்ஸ்!


புதுக்கோட்டையில் வலைப்பதிவு பயிற்சி


ஜோதிடம் -கரணங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்


சித்தன் அருள் - 1907 - அன்புடன் அகத்தியர் - தென்குடித்திட்டை வாக்கு!


என் உறவில் செக்ஸ்


போரும் அமைதியும் மொழியாக்கங்கள்



Latest Images