Quantcast
Channel: அய்யனார் விஸ்வநாத்
Viewing all 133 articles
Browse latest View live

சாடிசத்திலிருந்து காதலுக்கு

$
0
0




ஆஸ்திரிய இயக்குனரான Michael Haneke ன் Funny Gamesஐ சமீபமாய் பார்க்க முயன்று தோற்றேன். Sadist வகைப் படங்களை மிக அலட்சியமாய் பார்க்கும் மனநிலை உண்டெனக்கு. ஸ்டேன்லி குப்ரிக்கின் A Clockwork Orange துவங்கி உலகின் பல இயக்குனரால் கையாளப்பட்ட இவ் வகைப் படங்களை ஒரு வித ஆர்வத்துடன் பார்த்துமிருக்கிறேன். irreversible, Antichrist போன்றவை சில உதாரணங்கள். செர்பிய சினிமாவின் மகாமட்டமான A serbian film ஐயும் எரிச்சலோடு பார்த்து முடித்தேன். ஆனால் ஆனால் இந்த Funny Games படத்தை என்னால் முழுவதுமாகப் பார்க்க முடியவில்லை. மனதைப் பிசைந்து ஒரு மாதிரி இறுக்கமும் பயமும் சூழ ஆரம்பித்துவிட்டது. Haneke யின் பியானோ டீச்சரை பல முறை பார்த்திருக்கிறேன். ஒருவகையில் பியானோ டீச்சர் என் புரிதலின் பல சன்னல்களை திறந்து வைத்தது. ஏன் இந்தப் படம் என்னை மிரட்டியது எனதான் புரிந்து கொள்ள முடியவில்லை.மெல்ல நானொரு லேசானவனாக, திடத்தன்மை இல்லாதவனாக மாறிக் கொண்டிருக்கிறேனோ? 


பாதியில் நிறுத்திவிட்டு கொரியன் காதல் படமான My Girl and Iஐப் பார்க்க ஆரம்பித்தேன். பள்ளியில் படிக்கும் பதின்மர்களின் காதல் கதை. ஒரு சின்னஞ்சிறு கிராமம்,பிரமாதமான இயற்கைப் பின்னணி, எப்போதும் பெய்யும் மழை, வழிந்தோடும் அருவியாய் பின்னணி இசை இப்படியாய் காதல் சொட்ட சொட்ட ஒரு படம். லட்சக்கணக்கான படங்கள் இதே கதையைக் கொண்டு எடுக்கப்பட்டுவிட்டனதாம் என்றாலும் இளமையும் அன்பும் வழிந்தோடும் படங்களைப் பார்ப்பதில் ஒருபோதும் சலிப்பேற்படுவதில்லை. மேலும் உலகின் இருண்ட பாகத்திலிருந்து வெறும் சமிக்ஞை மொழியில் காதல் படம் எடுத்தாலும் அதனோடும் தன் சொந்தக் காதலை இணைத்துப் பார்க்கும் அபூர்வ மனம் நிறைவேறாக் காதல் மனங்களைக் கொண்டவர்களுக்கு உண்டு.



அரவான் - சில குறிப்புகள்

$
0
0
அரவான் திரைப்படம் பார்த்துவிட்டு கூகுல் ப்ளஸில் சில குறிப்புகள் எழுதினேன். வலைப்பூவில் சேமித்து வைக்கும் பொருட்டு மீண்டும் இங்கே பதிகிறேன். இரண்டு வருடங்களாக கூகுல் பஸ்ஸில் எழுதிய, முக்கியமானவையாக நான் எண்ணும் சில குறிப்புகளையும் மீண்டும் இங்கே பதியும் எண்ணம் இருக்கிறது. நேரம் கிடைக்கும்போது பதிகிறேன்.

ரவான் படத்திற்கு தனியாகப் போக நேர்ந்தது. படம் முடிந்து வெளியே வரும்போது தலைவலி மண்டையைப் பிளந்தது.படம் முழுக்க பயங்கர இரைச்சல். நிச்சயமாக மோசமான படம் கிடையாது ஆனால் முழுமையான படமாகவும் வந்திருக்கவில்லை. முதல் குறையாக இசையை சொல்ல வேண்டும். Period படம் பார்க்கிறோம் என்கிற உணர்வே எழா வண்ணம் இசை பார்வையாளர்களை கட்டிப் போடுகிறது.இரண்டரை மணிநேரத்தில் இப்படியொரு விலாவரியான கதையை விஸ்தாரமாய் சொல்ல முடிந்திருக்கிறது. எடிட்டிங்கின் ஒத்துழைப்பு அபாரம். சமீபமாய் இவ்வளவு திறமையான எடிட்டிங்கும் கதை சொல்லலும் தமிழ் படத்தில் நிகழ்ந்திருக்கவில்லை.முதற்பாதியின் கச்சிதத்தோடு ஒப்பிடுகையில் இரண்டாம் பாதியின் லாஜிக் மீறல்கள் சற்று சோர்வடைய வைத்தன. ஆனாலும் புதிரின் முடிச்சை மெல்ல மெல்ல அவிழ்க்கும் திரைக்கதை சுவாரசியத்திற்கு வலு சேர்க்கிறது. விவரணைகளின் நுட்பமும் குழப்பமில்லாத திரைக்கதையும் படத்தோடு ஒன்றிப்போக உதவின. தாசிக் கதாபாத்திரத்தை (அதுவும் ஸ்வேதா மேனன் போன்ற கருங்கற் சிலை நடிக்க ஒப்புக் கொண்ட பின்பும்) அநியாயத்திற்கு வீணடித்திருப்பதை நினைத்துத்தான் ஆற்றாமைப் பட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. இருப்பினும் வசந்தபாலன் ஒரு நல்ல கதைசொல்லி என்பதை ஆல்பத்திலிருந்து அரவான் வரைக்குமான படங்கள் நமக்குச் சொல்கின்றன.

அரவான் படத்தின் நொட்டைகளை பட்டியிடலாம் எனத் தோன்றியது. இந்தப் பட்டியலுக்கான அவசியம் கிடையாதுதான் என்றாலும் வரலாற்று/ காலகட்டப் படங்களில் எதையெல்லாம் தவறவிடுகிறோம் அல்லது தவறவிடக்கூடாது என்பது பற்றின யோசனையாக வாசிப்பவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

1. அத்தர் வியாபாரியான பரத்தின் வீடு குடியானவர்களின் வீடாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பரத் உள்ளூரைச் சேர்ந்தவர். பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்த அத்தர் வியாபாரம்/வியாபாரிகள் பற்றி நாம் படித்திருந்த வரலாற்றுச் சித்திரம் முழுக்க வேறானவை. எஸ்.ராமகிருஷ்ணனின் யாமத்தை வாசித்திருப்பவர்களுக்கு அத்தர் பின்புலம் ஓரளவிற்கு பிடிபட்டிருக்கலாம்.

2. வீடுகளில் புழக்கத்திலிருக்கும் பொருட்கள், பெண்களின் ஆடைகள், வழக்கத்திலிருக்கும் மொழி இவை குறித்து சற்று கவனத்தைக் செலுத்தியிருக்கலாம்.

3. படத் துவக்கத்திலேயே அலுப்பூட்டும் அளவிற்கு close-up shot களை தவிர்த்திருக்கலாம். காட்டின் பின்னணியில் கள்வர்களின் முகங்கள் வெவ்வேறு கோணங்களில் திரையை நிறைக்கின்றன.

4. ஆதி அரவானாவதற்கான காரணத்தை கச்சிதமாக யோசித்துவிட்டு காரணத்தின் வேரை கோட்டை விட்டிருக்கிறார்கள். முதிர் வயது ராஜா தனியாய் வந்து ராணியுடன் கள்ள உறவு வைத்தவனை கழுத்தறுப்பதெல்லாம் லாஜிக் இல்லாத கற்பனை. போலவே ராஜா அறைக்குள் நுழைந்து கட்டித் தூக்கி வண்டியில் போட்டு விரைந்து வருவதெல்லாம் பூச்சுற்றல்கள். திறமை நிறைந்த கள்வனின் சாகசம் என்கிற சமாதானத்தோடு பார்த்தாலும் அருவி மரணம் என்றெல்லாம் அதை நீட்டித்திருப்பது அபத்தமான கற்பனை.

5. மறைந்து வாழும் பலியாள் கள்வனாவதற்கான காரணம் சொல்லப்படவில்லை. காவலனாக இருந்தவன் கள்வனாவது எளிதுதான் என்றாலும் காரணம்? தவிர மறைந்து வாழவேண்டிய நிர்பந்தத்திலிருப்பவன் வேம்பூர்காரன் எனச் சொல்லி துப்பு கேட்பானா?

6. பாம்பு, காளை என எல்லாவற்றையும் கிராபிக்ஸ் செய்திருப்பது படு செயற்கை.

7. Star Casting களை வீணடித்திருப்பது

8. பாடல் காட்சிகள் மற்றும் இசை

9. கதை நிகழும் காலத்தில்((9 வருடம்) இருந்திருக்க வேண்டிய மாறுதல்கள் பற்றிய கவனமின்மை.

இக் குறிப்புகளில் அரசியல் பிரக்ஞை கிடையாது. இரசனை மன நிலையில் மட்டுமே எழுதப்பட்டன. அரசியல் விமர்சனங்களுக்கு Facebook இல் ராஜன் குறை மற்றும் நண்பர்களின் உரையாடலைத் தேடிப் படிக்கலாம். சுவாரசியமான வாசிப்பு உத்திரவாதம்.

அ.முத்து கிருஷ்ணனுடன் ஒரு சந்திப்பு

$
0
0
நண்பர்களுக்கு,

எழுத்தாளரும், செயற்பாட்டாளருமான அ.முத்து கிருஷ்ணன் துபாய் வருகிறார். சமூகம், சுற்றுப்புறச்சுழல், மனித உரிமைகள், விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், உலகமயமாக்கல் என பல்வேறு தளங்களில் எழுதியும், பேசியும் வரும் அ.முத்துகிருஷ்ணன் ஒரு தீவிரமான சமூக செயல்பாட்டாளராக தொடர்ந்து இந்தியாவெங்கும் சுற்றிவருபவர். கடந்த ஆண்டு இவர் புதுதில்லியில் இருந்து தரை வழியாக 10 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து பாலஸ்தீனத்தின் நிலையை நேரில் கண்டு பதிவு செய்திருக்கிறார். அவருடனான கலந்துரையாடல் ஒன்றை துபாயில் ஏற்பாடு செய்திருக்கிறோம். நண்பர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க அழைக்கிறேன்.

இடம் : சிவ் ஸ்டார் பவன் உணவம், கராமா, துபாய்

நேரம் : ஏப்ரல் 03 ஆம் தேதி செவ்வாய்கிழமை மாலை 7 மணி


தங்களுடைய வருகையை கீழ்காணும் அலைபேசி எண்ணுக்கு உறுதிபடுத்தினால் இரவு உணவு ஏற்பாடு செய்ய உதவியாக இருக்கும்.

அசோக் 050 9142203
அய்யனார் 055 4216250





புத்துணர்வு

$
0
0
பிறந்தநாளுக்கு தொலைபேசி,மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளைப் பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி. ஃபேஸ் புக் மூலம் வந்து குவிந்த எண்ணூற்றுக்கும் மேற்பட்ட மடல்கள் சற்றுத் திகைப்பூட்டுவதாய் இருந்தன. பொதுவாகவே நான் பரவலான மனிதர்களின் கவனத்தையும் நட்புகளையும் பெற்றிராதவன் என்கிற நம்பிக்கைகள் உள்ளூர உண்டு, அவை பொய்க்கும் தருணங்கள் மிகுந்த உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் தருகின்றன. நானும் என்னைச் சுற்றியுள்ள சமூகமும் சேர்ந்தேதான் பயணிக்கிறோம், யாரும் என்னை விலக்கிவைத்துவிட வில்லை என்பது நிம்மதியையும் ஆசுவாசத்தையும் தருகிறது. இந்த நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்த அனைத்து நண்பர்களுக்கும் கடமைப்பட்ட வனாகிறேன்.

வியாழன் மாலை கராமா வில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பில் வெகுநாட்களாக சந்திக்க வேண்டும் என நினைத்திருந்த எழுத்தாளர்கள் ஜெயமோகனையும் நாஞ்சில் நாடனையும் சந்தித்து விட முடிந்தது. கூடுதல் மகிழ்ச்சியாக எழுத்தாளர் ஆபிதீனும் நிகழ்விற்கு வந்திருந்தார். மூவரையும் சந்தித்து உரையாடியது என்னுடைய ஒரே மாதிரியான இந்நாட்களின் ஒரே மாதிரியான எண்ண ஓட்டங்களை சற்று மாற்றியமைப்பதாய் அமைந்தது. ஜெவை முதன்முதலாக சந்திப்பது போன்ற எண்ணமே வரவில்லை. ஒரே பார்வையில் ஒரே புன்னகையில் பனிரெண்டு வருடங்களுக்கு மேலாய் தொடரும் வாசக- எழுத்தாள உறவு தன்னை உயிர்ப்பித்துக் கொண்டது. நான் அதிகம் மறுத்த ,முரண்பட்ட, எழுத்தின் பிரம்மாண்டம் கண்டு திகைத்த, அவரைப் பற்றியே தொடர்ந்து பேசவைத்த ஆளுமை ஜெயமோகன். அவருடனான சந்திப்பை துபாயில் எதிர்பார்த்திருக்கவில்லையெனினும் சந்திக்க நேர்ந்ததை மிக முக்கியமான தருணமாகவே நினைக்கிறேன். 

நாஞ்சில் நாடனின் பேச்சு கச்சிதமாக இருந்தது. சொற்களை நான் எந்த அளவு பயன்படுத்துகிறேன், எழுதுபவனுக்கு சொற்களோடு இருக்க வேண்டிய உறவின் அவசியம் குறித்தெல்லாம் சுய பரிசோதனை செய்து கொண்டேன். சில காலம் ஆங்கில வாசிப்பை தள்ளி வைத்துவிட்டு சிலப்பதிகாரத்தை வாசித்துப் பார்க்க வேண்டும். கம்பனையும் வார்த்தைகளாக சொற்களாக படித்துப் பார்க்க வேண்டும். ஜெயமோகனின் மைய உரையை அவரது தளத்தில் முழுமையாக வாசித்துவிடலாம். உரைக்கு முன்பு திருவண்ணாமலை குறித்தும் பவா.செல்லதுரை குறித்தும் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். எண்பதுகளில் பவாவின் வீடு எத்தகைய முக்கியமான இடமாக இருந்தது என அவர் சொன்னதையெல்லாம் விலாவரியாக பவா என்னிடம் ஏற்கனவே பேசியிருக்கிறார். ஜெயமோகன் உரையில் நண்பர்களோடு பேசிய அந்தப் பொழுதுகள் தன்னுடைய வாழ்வின் மிக முக்கியமான இடம் வகிப்பதாக சொன்னார்.

ஆபிதீன் அவரது எழுத்தைப் போலவே நேர் பேச்சிலும் அசரடித்தார். இன்னொரு முறை அவரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து நிறையப் பேச வேண்டும். என்னை தொடர்ந்து வாசிப்பதாக சொன்னார். சற்று நெகிழ்ச்சியாக இருந்தது. எழுதுபவனுக்கு இதை விட வேறென்ன வேண்டும்?

எங்களின் குறும்படமான Road Song அதன் செய்நேர்த்திக்காக பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. பினு மிகுந்த உற்சாகத்தில் திளைக்கிறான். தயாரிப்பாளரான சஜித்திற்கும் படத்தின் நேர்த்தி மிகவும் பிடித்திருக்கிறது. பினு சென்ற மாதம் இங்கு வந்திருந்தபோது தன்னுடைய அடுத்த முழுநீள திரைப்படத்திற்கான ஆயத்தங்களில் சில கதைக் கருக்களை யோசித்து வைத்திருந்தான். நான் எல்லாக் கருவையும் கேட்டுவிட்டு எதற்கும் இருக்கட்டுமே என இருபது வெள்ளைக்காரர்கள் கதையை விலாவரியாக சொன்னேன். கதையை முழுமையாய் கேட்டவன் தரையிலிருந்து ஒரு அடி எம்பிக்குதித்துவிட்டு என்னைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டான். நம்முடைய அடுத்த படம் இதுதான் என்றான். உடனடியாய் சஜித்திற்கும் கதையை சொல்லிவிட்டேன். இந்த வருடக் கடைசியில் திருவண்ணாமலையில் வைத்தே படப்பிடிப்பை துவங்கி விடுவதாய் திட்டமிட்டிருக்கிறான். ஆனால் இருபது வெள்ளைக்காரர்களை படமாக்குவது எளிதான விஷயமாகத் தோன்றவில்லை. பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.

இருபது வெள்ளைக்காரர்களை இன்னும் துல்லியமாய் விரிவான ஸ்கிரிப்டாய் எழுதிக் கொண்டிருக்கிறேன். முதல் காபியை பினு கையிலேயே கொடுத்துவிட்டேன்தான் என்றாலும் எனக்குத் திருப்தியில்லாமல் மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன். புதிர்தன்மை, காமம், வன்மம், அழகியல், கொண்டாட்டம் என எல்லாம் இருந்தாலும் அரசியலையும் பதிவாக்க வேண்டும் என்பது சஜித்தின் விருப்பம். இந்தக் கதையில் இயங்கும் அரசியலின் நாடியை சில படிமங்களாக எழுதி சேர்க்க வேண்டிய வேலையும் இருக்கிறது.

இந்த வருடத்தின் துவக்கத்தில் இரண்டு குறுநாவல்களுக்கான முடிச்சு மனதில் விழுந்தது. முதல் குறுநாவலுக்கு ஓரிதழ்பூ என்ற பெயரையும் தேர்வு செய்துவிட்டேன். சாக்தம் குறித்து இந்நாவலில் எழுதிப் பார்க்கும் ஆசை வந்திருக்கிறது ஆனால் அதற்கான வாசிப்பும் அனுபவமும் என்னிடம் கிடையாது. அனுபவங்கள் இப்போது சாத்தியமில்லை என்றாலும் குறைந்த பட்சம் சாக்தம் குறித்து இன்னும் விரிவாகப் படித்த பின்புதான் நாவலைத் தொடர வேண்டும். இன்னொரு குறுநாவலை சுவாரசியத்தை மட்டும் பிரதானமாக வைத்து எழுதிப் பார்க்க நினைத்திருக்கிறேன். க்ரைம் கதை - இலக்கியப் பிரதி இவ்விரண்டிற்கு இடையிலேயும் நிகழும் விளையாட்டை லேசான கிண்டல் தொணியில் எழுதும் எண்ணம். ஏராளமான க்ரைம் கதைகளும் ஒரு முழு நீள இலக்கிய நாவலும் இந்தக் குறுநாவலில் வரும். இந்தக் குறுநாவலுக்கான வடிவத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறேன். இரு வேறு மொழிநடையை, எழுத்து நடையை கொண்டு வர வேண்டிய சவாலும் கண் முன் நிற்கிறது. இரண்டு குறுநாவல்களிலும் சில அத்தியாயங்களை எழுதிப் பார்த்தேன். அவற்றை இவ்வருட இறுதிக்குள்ளாவது முடித்துவிட வேண்டும். இதற்கு நடுவில் மனைவியின் தொடர் நிர்பந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கிடப்பில் கிடக்கும் எம்பிஏ வை முடிக்க வேண்டும்.

எழுத விரும்புபவன் ஏன் எழுத மட்டுமே செய்யக் கூடாது? என்ற பதில் வேண்டாத தொடர் கேள்வியை ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு கிளம்பி காரின் எஞ்ஜினை உயிர்ப்பிக்கும் போது கேட்டுக்கொள்கிறேன். கூடவே இன்று காலை, இலக்கிய சந்திப்பிற்குப் பிறகு, நள்ளிரவிற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, ஜெயமோகனிடம் விடைபெறும் போது அவர் சொன்ன இரண்டு விஷயங்கள் நினைவிற்கு வந்தன. ஒன்று, எழுத்தாளன் வசிக்க கூடாத இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் எழுதுபவனுக்கு எழுதும் மொழி எப்போதும் காதில் விழுந்து கொண்டே இருக்க வேண்டும். இரண்டாவதை விரைவில் நீங்களே அனுபவிக்க நேரிடலாம் அது “இப்போதைக்கு நிறைய எழுதுங்கள் நாற்பது வயதிற்கு மேல் வேண்டுமானால் குவாண்டிட்டியை குறைத்துக் கொள்ளலாம்”

இருபது வெள்ளைக்காரர்கள் - முன்னுரை

$
0
0
18 டிசம்பர் 2011 துபாய் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு வித சாகஸ மன நிலையில் திளைத்துக் கொண்டிருந்தேன். மனம் எப்போதும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. மிகவதிக உணர்வெழுச்சி என்னை முழுவதுமாய் ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. ஒரு நாளின் வரிசைக் கிரமத்தில் ஒரு நொடியைக் கூட முன் பின் மாற்ற அனுமதிக்காத என்னுடைய நிகழ், மிகுந்த இயலாமையோடு அத்தனை எழுச்சியையும் கொண்டு போய் எழுத்தில் கொட்ட வழிவகுத்தது. அந்தப் பேரெழுச்சியில் எழுதப்பட்டதுதான் ‘பழி’. இரண்டு பக்கங்கள் எழுதினாலே இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தூண்டும் மனதின் அரிப்புகளையெல்லாம் கட்டுப்படுத்திக் கொண்டு நூறு பக்கங்கள் எழுதி முடித்தேன். ஆறு மாத மகனும் மனைவியும் ஊரிலிருந்து வந்த பின்னர் மனதின் பரபரப்பு சற்று அடங்கியது. நானும் எழுதியதை தூக்கிப் போட்டுவிட்டு மிக சந்தோஷமாய் மகனின் உலகத்திற்குள் நுழைந்து கொண்டேன். பாதியில் விட்ட பழியை எடுத்துப் படித்த என் மனைவி, அதன் காமத்தையும் வன்மத்தையும் கண்டு மிரட்சியடைந்து இதைப் பிரசுரித்தால் படிப்பவர்கள் உன்னைக் கெட்டவனாக நினைத்துக் கொள்ளப் போகிறார்கள் என பயந்தாள். எழுதியதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதே எனவும் அறிவுறுத்தினாள்.

இடையில் மழைக்காலம் கதைக்கான முடிச்சு மனதில் விழுந்தது. அம்முடிச்சை அப்படியே கொண்டுபோய் பாண்டிச்சேரியில், நான் கடந்து வந்த சூழலில் பொருத்திக் கொண்டு எழுத ஆரம்பித்தேன். ஆனால் அந்தக் கதைக்கு தேவையான மென்மையையும் காதலையும் என்னால் எழுத்தில் கொண்டு வரவே முடியவில்லை. முழுக்க வன்மத்திலும் காமத்திலும் மனம் தகித்துக் கொண்டிருந்தது. எழுதாமல் தீராதிது என உணர்ந்ததும் மழைக்காலத்தை அழித்து விட்டு மீண்டும் பழியை தூசி தட்டி, உத்திகளைப் புகுத்தி, அத்தியாயங்களாய் பிரித்து வலைப்பக்கத்தில் வெளியிட்டேன். சாகஸம், காமம்,வன்மம், பரபரப்பு என வெகுசன வாசிப்பிற்கு தேவையான எல்லா விஷயங்களும் பழியில் இருந்ததால் இணையத்தில் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பல புதிய வாசகர்களின் அறிமுகமும் கிடைத்தது. என் வலைப் பக்கத்தைப் பார்த்தாலே விழுந்தடித்துக் கொண்டு ஓடும் பலரையும் இந்நாவல் கட்டிப் போட்டது. போலவே பல விமர்சனங்களையும் எதிர்கொண்டேன். இலக்கிய வாசகர்களிடமிருந்தும், பெரும்பாலான வாசகிகளிடமிருந்தும் கடுமையான விமர்சனங்களையும் பெற்றுக் கொண்டேன். ஆனால் எல்லாத் தரப்பு வாசகர்களும் ஒரு விஷயத்தை ஒத்துக் கொண்டார்கள். அது பழியின் சுவாரசியம். ஒரே மூச்சில் படித்தேன் என்பதுதான் எல்லோருடைய பகிர்வாகவும் இருந்தது.

பழிக்கு கிடைத்த வரவேற்பு தந்த உற்சாகம் அடுத்தடுத்து மழைக்காலத்தையும் இருபது வெள்ளைக்காரர்களையும் எழுத வைத்தது. மழைக்காலம் குறுநாவலில் வரும் மையப் பாத்திரங்களைத் தவிர்த்து பிற எல்லாப் பாத்திரங்களும் நிஜமானவை. இடம்,சூழல், பெயர் என எதையும் மாற்றவில்லை. எழுதித் தீரா சில விஷயங்களின் வரிசையில் காதலுணர்வும், இளமையும்தான் முதலிடத்தைப் பிடிக்கும் போல. என்னால் விட்டு வெளியேறவே முடியாத பொறிதான் மழைக்காலமாக வடிவம் பெற்றது. சில மென் உணர்வுகளை இந்தக் குறுநாவல் அசைத்துப் பார்க்கலாம்.

என்ன எழுதினாலும் அதாகவே, அந்த எழுத்தின் உணர்வாகவே கிடப்பதுதான் என்னுடைய மாபெரும் சிக்கல். இந்த சிக்கல் பிற படைப்புகள் மூலமும் அவ்வப்போது ஏற்படுவதுதான். பழி எழுச்சியையும், மழைக்காலம் காதலுணர்வையும், இருபது வெள்ளைக்காரர்கள் நடுவாந்திரமாக ஒரு மன உணர்வையும் தந்தது. ஒரே நேரத்தில் நெருங்கியும், விலகியும் சஞ்சரிக்கும் மனதை இருபது வெள்ளைக்காரர்கள் உருவாக்கியது. திருவண்ணாமலை சமுத்திர ஏரிக்கரை, இரமணாசிரமம், மலை சுற்றும் பாதை, ஜவ்வாதுமலை அடிவாரம், வனம்,மலை ஓடை, என இடங்களின் மீது புனையப்பட்ட கதைதான் இருபது வெள்ளைக்காரர்கள். இந்தக் கதைக்கான ஆதாரப் புள்ளி நிலப் பிரதேசங்கள்தாம். இந்த இடங்களெல்லாம் என் மனதின் அடியாழத்தில் தங்கிப் போனவை. ஒரு வகையில் இப்பிரதேசங்களில் அலைந்து திரிய முடியாமல் போன ஏக்கத்தின் வடிகாலாகவும் இக் குறுநாவலை அனுக முடியும். மற்றபடி எழுத்தின் மூலம் எழுதுபவனுக்கு கிடைக்க வேண்டிய எல்லாமும் எனக்கு ஏற்கனவே கிடைத்து விட்டது. இனி கிட்டுபவை எல்லாம் மிகுதியே.

என்னுடன் எப்போதுமிருக்கும் பவா, பார்த்துப் பார்த்து புத்தகத்தை நேர்த்தியாய் கொண்டு வர மெனக்கெடும் ஷைலஜாக்கா, மூன்று நாவல்களையும் சிரத்தையாய் வாசித்துத் தொகுத்த ஜெயஸ்ரீ, நெருக்கடியான பணிகளுடைக்கிடையிலும் அட்டைப் படம் தந்த பினு, வடிமைத்த வம்சி நண்பர்கள் என எல்லோருக்கும் நன்றி சொல்லி மாளாது. என்றென்றைக்குமான என் ப்ரியங்களும் அன்பும்.


அய்யனார் விஸ்வநாத்
ayyanar.v@gmail.com
ayyanaarv.blogspot.com
00971554216250

பழி - சில கடிதங்கள்

$
0
0
“விஜி நான் அன்னிக்குப் போனது நீ இன்னொருத்தரோட படுத்திருந்தேன்னு இல்ல. எங்க நான் உன் வாழ்க்கைய பாழாக்கிடுவனோன்னு நினைச்சிதான் போனேன்” விஜி சத்தமாய் சிரிக்க ஆரம்பித்தாள். “நல்ல ஜோக் இது. நான் இன்னொருத்தன் பொண்டாட்டின்னு தெரிஞ்சிதானே என்கிட்ட பழகின? ஆரம்பத்துல இருந்தே நான் இன்னொருத்தன் பொண்டாட்டிதானே, அன்னிக்கு ராத்திரி மட்டும் என்ன உனக்கு திடீர் ஞானோதயம்?”

- இது பழி நாவலின் ஒரு பகுதி. ஆனால், பாண்டியில் விஜியை பிரிகையில்,

  “விஜி” என்றேன். மூக்கை உறிஞ்சியபடி நிமிர்ந்தாள். ”நான் போறேன்” ”நீங்க எதுக்கு போகனும்? அது தூங்கி எந்திரிச்சதும், நாங்க கிளம்பிடுறோம்” என்றாள் அதில் தெறித்த விலகலை, சடாரென என்னை யாரோவாய் சித்தரித்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ”எப்படி உன்னால முடிஞ்சது விஜி?” ”தெரில. திடீர்னு எனக்கு எல்லாம் தப்பா நடக்கிறா மாதிரி பட்டது.. ஒருவேளை நீங்க ஊருக்குப் போகாம இருந்திருந்தா இது நடந்திருக்காதோ என்னவோ.. நீங்க இல்லாத முத நாள் இரவு என்னால தூங்க முடியல. ஏதோ ஒரு மயக்கம் உங்க மேல இருந்தது போல. அது அன்னிக்கு தீர்ந்தா மாதிரி இருந்தது… நான் என்ன பண்ணிட்டிருக்கேன்னு யோசிச்சப்ப பயமா இருந்தது… என் மனசாட்சி உறுத்த ஆரம்பிச்சிருச்சி… என் வீட்டுக்காரர் எனக்காகதான் ஒரு கொல பண்ணிட்டு போலிசுக்கு மாட்டாம தலமறைவா சுத்திட்டிருக்கார். நான் என்னடான்னா இன்னொருத்தரோட எந்த குத்த உணர்வுமே இல்லாம ரொம்ப சந்தோஷமா வாழ்ந்திட்டிருக்கேன்னு ஏதோதோ தோண ஆரம்பிச்சிருச்சி… சரியா விடியற்காலைல இந்த மனுசன் கண்ணு முன்னால நிக்குறார்… -

விஜி தானே விலகி போனாள். நான் "பழியை" கிட்ட தட்ட நூறாவது முறை வாசிக்கிறேன். சின்ன உறுத்தல்.

  போதி ராஜா – ஃபேஸ்புக்கில்


அன்புள்ள போதி ராஜா,

எல்லாப் படைப்புகளுக்குமே ஆன்மா என்ற ஒன்று இருப்பதாக நினைக்கிறேன். தேர்ந்த/ ஆத்மார்த்தமான வாசிப்பின் மூலம் எளிதில் அதை நெருங்கிவிட முடியும் என்பது என் நம்பிக்கை. உங்கள் வாசிப்பும் சுட்டி இருக்கும் விஷயமும் எனக்கு மீண்டும் கதையின் ஆன்மா குறித்தான நம்பிக்கையை வலுப்பெற வைக்கிறது. பழியின் மையமென நான் நினைப்பது இப் பகுதியைத்தான். அடல்டரி யில் ஆணுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்ணுக்கு கிடையாது. ஒரு பெண் இரு துணைகளோடு வெளிப்படையாக வாழும் சூழல் இங்கு கிடையாது. விஜி கதாபாத்திரம் அப்படி ஒரு சூழலின் தேவையை முன் வைக்கிறது.

தானாக விலகிப் போகும் விஜி எப்படி அய்யனார் மீது பழி போட முடியும்? என்பது உங்கள் கேள்வி. விஜியை நாகராஜூடன் பார்த்தவுடனேயே இவனுக்கு விலகிப் போகும் எண்ணம் வந்துவிடுகிறது. நான் போறேன் என முதலில் முடிவெடுப்பது அய்யனார்தான். தவிர மிடில் க்ளாஸ் பின்னணியில் இருந்து வரும் விஜியிடம் இருவருடன் வாழ்வதற்கான மன தைரியத்தையும் நாம் எதிர்பார்க்க முடியாது. நாகராஜின் சதியில், காலம் தலைகீழாகப் புரட்டிப் போட்ட பின்பு மிகவும் இறுக்கமான/ பக்குவமான விஜி தன் நிலைக்கான காரணங்களாக நாகராஜையும் அய்யனாரையும் பார்க்கிறாள். அவர்களின் மீது வன்மம் கொள்கிறாள். அதிகாரம் கைக்கு வந்தவுடன் முத]லடியாக நாகராஜை அடிமையாக்குகிறாள். எதிர்பாரா விதமாக அய்யனாரை சந்திக்கும்போது அவனையும் கடுமையாக வசைகிறாள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவனுக்காய் மடிந்தும் போகிறாள். என் நண்பர் ஒருவர் அரசியல் பிரக்ஞையோடு இந்நாவலை ஆண் மையப் பிரதி என விமர்சித்தார். ஒரு புன்னகையோடு ஏற்றுக் கொண்டேன். ஆனால் இதில் பெண்ணிற்கான அக்கறையும் இருக்கிறது என்பதை சற்று நெருங்கி வாசித்தால் அறிந்து கொள்ள முடியும். வரலாறாய் தொடரும் பெண்ணின் துயரங்களுக்கான மீறலை, புதிய திறப்பை பழியில் பதிவு செய்திருப்பதாகவே நினைக்கிறேன். 

உங்களின் தொடர் வாசிப்பிற்கும் அன்பிற்கும் நன்றி


எல்லா நாளும் கார்த்திகை - பவா.செல்லதுரை

$
0
0
பவா வின் சமீபத்திய எல்லா நாளும் கார்த்திகை தொகுப்பிற்கு என் முன்னுரை

  நாடோடியின் பாடல்

 “நான் மீடியாவாய்ஸ்ல எழுதிட்டிருந்த தொடர நிறுத்திட்டேன் அய்யனார்” “ஏன் பவா?”
“எழுதனுமேன்னு கமிட்மெண்டோட எழுத பிடிக்கல. மறுபடியும் எப்ப தோணுதோ அப்ப எழுதிக்கலாம்”

இதுதான் பவா. தன்னை ஒருபோதும் எழுத்தைச் செய்பவனாக மாற்றிக் கொள்ள விரும்பாத கலைஞன். எந்த ஒன்றிலும் ஆத்மார்த்தமாக மட்டுமே ஈடுபடவிரும்பும் எளிய மனம்தான் பவாவினுடையது . ஏன் அதிகம் எழுதுவதில்லை? என்கிற வழக்கமான நுண்ணுணர்வற்ற கேள்விக்கு பவாவின் பதில் மிகவும் சுவாரசியமானது

நான் ஏன் எழுதவேண்டும்? 

ஆனால் ஒன்றை மட்டும் எல்லோரும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். எழுதும் காலம்தான் எழுத்தாளருக்கு மிகவும் கொண்டாட்டமானது. அதிலும் எழுத்தைப் பிறருக்காகச் செய்யாமல் ஆழ்ந்த நேசத்தோடும் தனக்கே தனக்கான நெகிழ்வோடும் எழுதுபவர்களுக்கு எழுதும் காலத்தின் மகிழ்வை எளிதில் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. பவா இந்தத் தொடரை எழுத ஆரம்பித்த நாளிலிருந்து முடிக்கும்வரை எழுத்தின் வசீகரப் பிடிக்குத் தன்னைத் தந்திருந்தார். இதை நேரில் பார்த்தும், கட்டுரைகளின் சில பகுதிகளைப் படிக்கும்போதும் உணர்ந்து கொண்டேன். இது கலைஞர்களுக்கே உரித்தான சந்தோஷம். காலையில் எழுந்து கழிவறை செல்வதுபோல எழுத்தைப் பாவிப்பவர்களுக்கு, எழுத்துப் போலிகளுக்கு, எழுத்தைப் பண்டமாய் மாற்றுபவர்களுக்கு வாழ்வில் ஒருபோதும் கிட்டிடாத உண்மையின் தரிசனம். பவா அந்த தரிசனத்தின் உச்சத்திற்கு தன்னைத் தந்துவிட்டிருந்தார்.

பவாவின் எழுத்தை விமர்சகச் சட்டத்திற்குள் வைத்துக் கூறுபோட்டு இது இந்தவகை என நிறுவுவதில் எனக்கு விருப்பமில்லை. தேசங்களற்ற நாடோடியின் பாடல் எந்த ராகத்தில் இருந்தால்தான் என்ன? என்ன மொழியில் இருந்தால்தான் என்ன? அந்தக் குரலின் வசீகரம் அல்லவா நம்மை அடித்துப் போடுகிறது! அந்தக் குரலின் எளிமையல்லவா நம்மை அசைத்துப் பார்க்கிறது! அடிவயிற்றிலிருந்து பீறிட்டெழும் அந்த சாரீரமல்லவா நம்மை கரைய வைக்கிறது! பவா வின் எழுத்து அத்தகையதுதான். பவாவின் எழுத்தை நாடோடியின் பாடலுக்கு நிகராகத்தான் பார்க்கிறேன்.

இந்தத் தொகுப்பில் தமிழின் பல பிரபலங்கள் குறித்த பகிர்வு இருக்கிறது. சமூகத்தால் அடையாளங் காணப்பபட்ட பிரபல கலைஞர்களிலிருந்து பிரபலமல்லாத கலைஞர்கள் வரைக்குமாய் ஏராளமான மனிதர்களைப் பற்றிய முழுமையான பார்வை இருக்கிறது ஆனால் அவர்களை வெற்றி தோல்வி எனப் பிரித்துப் பார்க்காமல், இருமையில் நிறுத்தாமல் கலைஞர்களாய் மட்டுமே அடையாளங் கண்டு பதிவு செய்திருப்பதுதான் இத்தொகுப்பின் மிகச் சிறந்த அம்சம். பவா மனிதர்களை அப்படித்தான் பார்க்கிறார். ஒரு சாமான்யனின் மனம் பவாவின் எழுத்து முழுவதும் தொடர்ந்து இயங்கியபடியே இருக்கிறது.

பவாவின் எழுத்து வாசிப்பவர்களை தடுமாற வைக்கிறது. சதா மூளையின் கட்டுப்பாட்டிலிருக்கும் மனதை சற்றே இடம்பெயர வைக்கிறது. எழுத்தின் வழியே பவா காட்சிப்படுத்தும் உலகில் தன்னை மொத்தமாய் தொலைப்பதும் எல்லா மனங்களுக்கும் நிகழ்வதுதான். இலக்கியம், திரைப்படம், ஓவியம், புகைப்படம் என எல்லாத் துறைகளிலும் மிளிர்ந்த/மிளிரும் கலைஞர்களுடனான தன் அனுபவத்தை சாதாரணனின் பார்வையில் பதிவு செய்திருக்கிறார். எல்லோராலும் அறியப்பட்டவர்களின் இன்னுமொரு அறியாதப் பக்கம் பவாவின் எழுத்து வழியே , வாழ்வு வழியே பதிவாகியிருக்கிறது.

  “எந்த மனித மனமும் தட்டையானதல்ல. அது முரண்பாடுகளால் ஆனது. எந்த மனிதனையும் முழுக்கப் புரிந்து கொண்ட சகமனிதனோ, உறவுகளோ நிச்சயம் இல்லை”

இப்படி ஒரு எழுத்தை எதிரிகளற்ற, துவேஷங்களற்ற, போட்டிகளற்ற, பவா மட்டும்தான் எழுத முடியும் மேலும் அவர் கண் வழியாய் நாம் காணும் சித்திரங்கள் அபூர்வமானவை. பிரபஞ்சன் குறித்த கட்டுரையில் பவா எழுதியிருந்த வரிகள் என்னைத் தூங்கவிடாமல் அலைக்கழித்தன.

  “இப்பூமி பரப்பெங்கும் உண்மையான கலைஞர்களின் குரல்கள், லெளகீக வாழ்வின் முன் இப்படித்தான் உள்ளடங்கிபோய்விடுகிறது. மூன்றாந்தர மனிதர்களின் வெற்றி பெருமிதத்திற்கு முன் ஒரு படைப்பாளி ஒடுங்கிப் போவது இந்த புள்ளியில்தான்” “ஒரே மனிதன் ஒட்டுமொத்த மானுட பசிக்கான துயரத்தைப் பாடிக்கொண்டே தன் சொந்த பசிக்காகவும் ரொட்டிகளை தேடவேண்டியிருந்தது”

எழுத்தை மட்டுமே தொழிலாகக் கொண்டு ‘பிழைக்க’ வழி தெரியாத ஒட்டுமொத்த எழுத்தாளர்களுக்கான ஆறுதலாகவும் இவ்வரிகள் இருந்தன. படைப்பாளிகளுக்கு தர வேண்டிய முக்கியத்துவத்தை படைப்பாளிகளுக்கு இருக்க வேண்டிய கர்வத்தை ஜெயகாந்தனின் கட்டுரை வழியாய் ஒரு சம்பவத்தின் மூலமாய் பவா நினைவு கூர்கிறார்.

  “இன்னொரு நாற்காலி ஜெ.கே.வின் நெருங்கிய நண்பரும், அப்போதைய பாண்டிச்சேரி சபாநாயகருமான கண்ணனுக்கு. மேடையில் நின்று ஒரு நாற்காலியை எடுக்கச் சொல்கிறார். கண்ணனைப்பார்த்து, பார்வையாளர்கள் மத்தியில் இருந்த ஒரு இருக்கையைக் காட்டுகிறார். கண்ணன் எவ்வித தயக்கமும் இன்றி அதை நோக்கி போகிறார்"

இந்த வரிகளைப் படிக்கும்போது மேலிட்ட கர்வம் ஒரு படைப்பாளிக்கே உரியது. சமீபத்தில் இறந்து போன தன்னுடைய நண்பன் ராஜவேலின் மரணத்தை பவாவின் வார்த்தைகளில் காட்சியாய் காணும்போது துக்கம் மேலிட்டது. தன்னுடைய நண்பன் இறந்து போன துக்கத்தை தாங்க முடியாது வார்த்தைகளில் கொட்டித் தீர்ப்பது என்பது வேறு. ஆனால் பவா தன் நண்பனின் மரணத்தில் அவன் தந்தையின் துக்கத்தைப் பார்த்து பரிதவிக்கிறார். மகனை சாகக் கொடுத்து வாழநேரிடும் தகப்பன்களின் ஒட்டு மொத்த துக்கத்தை வார்த்தைகளாய் கடத்துகிறார்.

  “ஒரு புது வேட்டி போர்த்தி, கால் விரல்களைச் சேர்த்துக் கட்டி, பன்னீர் தெளித்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி, இவை அனைத்தையும் தனியாய் அசாத்திய மவுனத்தோடு செய்தவர் ராஜவேலுவின் அப்பா. எங்கள் நாலைந்து பேரின் மூச்சுக் காற்றை உட்கொண்டு அவ்வறை சுவாசித்துக்கொண்டிருந்தது. நான் வயதான அந்தத் தகப்பனையே பார்த்துக்கொண்டிருந்தேன். எதன் பொருட்டோ அவரிடம் உறைந்த அந்நேர மவுனம், என்னை பயமுறுத்தியது. எல்லாம் முடிந்து, தன் மகனின் காலடியில் நின்று, படுத்துறங்கும் மகனை ஆசைதீர பார்வையால், முழுமையாய் பருகினார். ‘‘மகனே’’ என ஓங்காரித்து வந்த அக்குரலொலி, அங்கிருந்த எங்கள் எல்லோரையும் அசைத்தது. அதன் பிறகான பத்துப் பதினைந்து நிமிடமும் அவர் தன் மொழியற்ற குரலால், வெவ்வேறு உடல் மொழியால், தன் பிரிவாற்றிய அந்நிமிடம் என் வாழ்வில் வேறெப்போதும் காணக்கூடாதது. பிள்ளைகளை பறிகொடுத்துவிட்டு சவங்களாக அப்பாக்கள் வாழும் வாழ்வெதற்கு?”

இந்த வார்த்தைகளின் இந்த வார்த்தைகள் உருவாக்கிய காட்சியின் தாக்கத்தை ஒரு இளந்தகப்பனாய் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஒட்டுமொத்த மனித மனதின் நேர்மையான சாட்சியம்தான் பவாவின் எழுத்து. கந்தர்வனின் நினைவாக எழுதப்பட்ட கட்டுரை பாரதி படத்தின் துவக்கக் காட்சியை நினைவூட்டியது. ஞானராஜசேகரனின் பாரதி திரைப்படம் எனக்குப் பிடித்த படங்களுள் ஒன்று. அத்திரைப்படமும் பாரதியின் மரணத்திலிருந்துதான் துவங்கும். பவாவின் கந்தர்வன் கட்டுரையும் அவரது மரணத்திலிருந்துதான் துவங்குகிறது. கந்தர்வனின் படைப்புலகை இப்படி எழுதுகிறார்

  “மனிதனின் மென் உணர்வுகளைத் தன் படைப்புப் பக்கங்களெங்கும் படிய வைத்துக் கொண்டேயிருந்தவர் கந்தர்வன். கவர்மெண்ட் ஆபீஸ்களின் பழுப்பேறிய கோப்புகளுக்கிடையே கிடந்த இந்த மகத்தான மனிதர்களை அள்ளிக் கொண்டுவந்து நம் முன் நிறுத்தினார் கந்தர்வன்” 

கந்தர்வன் என்கிற படைப்பாளியின் ஒட்டு மொத்த எழுத்து சாராம்சத்தை இப்படி இரண்டே வரிகளில் அதன் உன்னதம் குறையாது பதிவு செய்வதை முக்கியமானதாகப் பார்க்கிறேன். பவா வால் இது சாத்தியப்பட்டிருக்கிறது. 

ஒரு படைப்பாளியைக் குறித்து பதிவு செய்வதென்பது மிகவும் சவாலான விஷயம். பதிவு செய்பவரின் கண்களைப் போலவே அப்படைப்பாளியை பிறர் அனுகுவது கிடையாது. படைப்பும் படைப்பாளியும் நேர்கோட்டில் பயணிப்பவை அல்ல. ஆனால் எல்லாப் படைப்பாளிக்கும் எல்லா படைப்பிற்கும் ஆன்மா என்ற ஒன்று இருப்பதாக நம்புகிறேன். ஒரு படைப்பாளியைக் குறித்த பதிவு என்பது அந்த ஆன்மாவை நெருங்கினால் கூட எனக்குப் போதுமானது. இம்மாதிரியான ஒரு மனநிலையில் பவாவின் தொகுப்பை வாசித்தவுடன் முழுமையாக நிறைவடைந்தேன். எல்லாப் படைப்பாளிகளின் ஆன்மாவையும் பவா மிக இலகுவாகத் தொட்டிருக்கிறார். அவர்களை அப்படியே எழுத்தாக மாற்றியிருக்கிறார். இக்கட்டுரைத் தொகுப்பை வரலாற்று ஆவணமாகக் கூட மதிப்பிட முடியும். மேலும் இத்தொகுப்பில் பதிவாகியிருக்கும் மனிதர்கள் கலவையானவர்கள். தமிழ் சினிமாவை மாற்றியமைத்த பாலுமகேந்திரா பாரதிராஜா க்களிலிருந்து நவீனத் திரை மொழியின் உச்சங்கள் தொடும் மிஷ்கின் வரைக்குமாய். சிறுபத்திரிக்கை கவிஞன் கைலாஷ் சிவனி லிருந்து எழுத்துப் பேராளுமை ஜெயகாந்தன் வரைக்குமாய் சமூகம் நிர்மாணித்திருக்கும் ‘தகுதி’ ‘அடையாளங்கள்’ குறித்த கவலை ஏதுமற்று படைப்பையும் படைப்பாளியின் கலை மனதையும் மட்டுமே முன்நிறுத்தி எழுதப்பட்டிருக்கிறது. இடையே சாமான்ய மனிதர்களின் அசாதரணமான வாழ்வையும் தரிசிக்க முடியும்.

இம்மாதிரியான ஒரு கலவையை பவா வால் மட்டும்தான் உருவாக்க முடியும். ஒரு நீர்வண்ண ஓவியம் பல்வேறு வண்ணங்களைக் கொண்டு குழைத்துக் குழைத்து உருவாவது போல இத்தொகுப்பு உருவாகி இருக்கிறது. 

“ப்ரியமுள்ள பவா, உங்கள் கட்டுரைகளை மீண்டும் ஒருசேர வாசித்திருப்பதால் வாய்த்திருக்கும் இந்நெகிழ்வான மனநிலையில், பாலுமகேந்திரா உங்களிடம் சொன்னது நினைவிற்கு வருகிறது. அதையொட்டி யோசித்துப் பார்த்தால் உண்மையான கலைஞர்கள் அனைவருமே புலிகள்தாம். புலி இறந்த பின்னாலும் அதன் கோடுகள் அழிவதில்லை. போலவே உண்மையான படைப்பாளிக்குப் பிறகும் அவன் படைப்புகள் நிற்கும். நான் உங்களை அப்படித்தான் பார்க்கிறேன் பவா”


என்றென்றைக்குமான ப்ரியங்களுடன்

அய்யனார்விஸ்வநாத்
பிப்ரவரி 28,2012 துபாய்

டோனி காட்லிஃப் – குறுந்தொடர்

$
0
0

கடந்த ஒரு வருடமாக மனம் திரும்பத் திரும்ப உச்சரிக்கும் ஒரு பெயர் டோனி காட்லிஃப்.ஒவ்வொரு முறையும் இவரை எப்படியாவது எழுத்தில் கடத்திவிட்டு, மீண்டு விட முயன்று தோற்றுக் கொண்டே இருக்கிறேன். தோற்கத் தோற்க இனிக்கும் வாழ்வைப் போல டோனியும் இனித்துக் கொண்டேதான் இருக்கிறார்.

எங்களின் ரோட் சாங்படத்திற்கான விதையை பினு என்னுள் ஊன்றிய போது அவன் உச்சரித்த பெயர்தான் டோனி காட்லிஃப். மதினாத் செளக்கின் திறந்த வெளி மதுவிடுதியொன்றில் நீருக்கு வெகு சமீபமாய் மூங்கில் இருக்கைகளில் அமர்ந்தபடி, ஒரு தியானத்தைப் போல அவன் டோனியின் பெயரை உச்சரித்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. பினு பார்த்திருந்த டோனி காட்லிஃபின் ஒரேயொரு படம் காட்ஜோ டிலோ aka த க்ரேஸி ஸ்ட்ரேஞ்சர்.அதற்கு மேல் அவரைப் பார்க்க தோன்றவில்லை அதுவே போதுமானது என்பது பினுவின் நிலைப்பாடு. ஆனால் எனக்கு காட்ஜோ டிலோ போதவில்லை. இதுவரைக்கும் டோனி இயக்கியிருக்கும் அத்தனை படங்களை யும் பார்த்து முடித்தேன். திரும்பத் திரும்ப காட்ஜோ டிலோவையும் சில்ரன் ஆஃப் ஸ்டோர்கையும் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். என்னால் துளியளவு கூட அவரிடமிருந்தோ அவர் படங்களிலிருந்தோ வெளிவர முடியவில்லை.

அவ்வப்போது சில இயக்குனர்களின் படங்கள் இப்படி அடித்துப் போடுவது வழக்கம்தான் என்றாலும் அவர்களிடமிருந்து நான் மீள எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் மிகக் குறைவானது. அந்த ‘மேனியா’ கால கட்டங்களில் இவர்தான் சினிமாவின் உச்சம் என்பது போல மிகையாய் ஏதாவது உளறிக்கொண்டிருப்பேன். கண்ணில் படுபவர்களிடமெல்லாம் அவர்களின் படங்களைச் சொல்லி சொல்லிஇப்படத்தைப் பார்க்காமல் நீ உயிர் வாழ்வது வேஸ்ட் எனவெல்லாம் துன்புறுத்திக் கொண்டிருப்பேன். டோனி பெயரையும் நிறைய நண்பர்களுக்குப் பரிந்துரைத்தேன் என்றாலும் பரவலாய் சொல்லவில்லை. ஒருவேளை இப்படங்கள் பார்ப்பவர்களை ஈர்க்காமல் போய் “இது சினிமாவே கெடயாதுய்யா” என யாராவது தலையில் கொட்டிவிடுவார்களோ? என்ற பயம் காரணமாகவும் டோனி காட்லிஃப் படங்களை டமாரம் அடிக்காமல் இருக்கிறேன். சொன்னவரையில் என் சகோதரனுக்கு இவரின் படங்கள் மிகவும் பிடித்துப் போயின. காட்ஜோ டிலோ பின்னணி இசையை மொபைலில் சேமித்துக் கொண்டு திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

வழக்கமான சினிமா விமர்சனம் போல டோனியை எழுதவும் இவ்வளவு காலம் தயக்கமாக இருந்தது. சரியாகச் சொல்லப் போனால் சினிமா விமர்சனம் எழுதவே தயக்கமாய் இருக்கிறது. ‘ஒலக சினிமா’ விமர்சனங்களுக்கான தேவை இன்னமும் ப்லாக்கிற்கு இருக்கிறதா? எனத் தெரியவில்லை. ஏதாவது சினிமா விமர்சனம் கண்ணில் பட்டாலே அடித்துப் பிடித்து ஓடிவிடும் மனநிலை எனக்கே இருக்கும்போது நானும் அதே விமரிசனத்தை எழுதி இம்சிப்பதா? போன்ற தயக்கங்கள் இருக்கின்றன. ஆனாலும் டோனி காட்லிஃப் குறித்து தமிழில் கட்டுரை எதுவும் என் கண்ணில் படவில்லை. ஒருவேளை வேறு யாராவது எழுதியிருந்தால் சந்தோஷமாகப் படித்துவிட்டுப் போயிருக்கலாம். ஆனால் அந்த சோம்பல் மகிழ்வை யாரும் இன்னமும் தராதது உறுத்தலாகவே இருந்து கொண்டிருந்தது. எல்லாவற்றையும் விடுத்து இதோ எழுதத் தொடங்கி விட்டேன். டோனி காட்லிஃபின் படங்களைப் பற்றி குறிப்புகளாக எழுத உத்தேசம்.

டோனியின் எல்லாப் படங்களும் நாடோடிகளின் வாழ்வைப் பேசுகிறது. இதுவரைக்கும் டோனி இயக்கிய அத்தனைப் படங்களும் ஜிப்சிக்களின் பாடல் மட்டுமேதான். தேசத்தின் எல்லைக்கோடுகளால் எதுவும் செய்துவிடமுடியாத ஜிப்சிக்களின் வாழ்வை மட்டுமேதான் இவர் திரும்பத் திரும்ப பதிவுசெய்திருக்கிறார். விடுதலை உணர்வின் உச்சம், அறியாமையின் உன்னதம், கொண்டாட்டங்களின் மையம், ஆக மொத்த ஒரே சொல்லாய் அப்பழுக்கற்ற களிப்பு மட்டுமேதான் இவர் படங்களின் சாராம்சம்.

டோனி, அல்ஜீரியாவில் ரோமானிய ஜிப்சிக் குடும்பத்தில் 1948 இல் பிறந்தவர். தன்னுடைய இளம் பிராயத்தை இன்ன பிற சிறார்களோடு வீதியில் கழித்தவர். பள்ளிகளால், நிறுவனங்களால்,குடும்பத்தாரால், அன்பால், கடமைகளால் சிறைபிடிக்கப்படாத இளம்பிராயம் என்பதால் இவரிடம் சுதந்திரத் தன்மையும், மீறலும், கொண்டாட்டமும் இயல்பாக இருந்தன. வீதியில் வாழும் சிறுவர்களைப் பற்றிய மோண்டோ, ஸ்விங் போன்ற படங்களின் மூலம் இவர் தன்னுடைய இளம்பிராயத்தை நினைவுப் படுத்திக் கொண்டிருக்க வேண்டும். இவரது லாட்ச்சோ ட்ரம் படம் வெளியான புதிதில் இது படமா? டாக்குமெண்டரியா எனப் பார்வையாளர்கள் பல கேள்விகளை முன் வைத்தனர். அவற்றிற்கு டோனி சொன்ன பதில் "For me this film is a hymn. In the first sense of the word. A film that recreates a link, through music, for all the Gypsy people”இவ்வாக்கியத்தை அவரது எல்லாப் படைப்புகளுக்குமே பொருத்திப் பார்க்கலாம்.

மேலும்

Gadjo Dilo aka Crazy Stranger 1997: டோனி காட்லிஃப்

$
0
0

ஸ்டீபன் (Stéphane) என்கிற பாரீஸ் நகர இளைஞன் தன் தந்தைக்கு மிக விருப்பமான பாடகியான நோரா லூகா (Nora Luca) வைத் தேடிப் பயணிக்கிறான். அவனின் தந்தை இறக்கும் வரையிலும் நோரா லூகாவின் பாடல்களை மட்டுமே சிலாகித்துக் கேட்டுக் கொண்டிருந்தது அவனுக்கு முக்கியமாகப் படவே நோரா லூகாவைக் கண்டுபிடித்து தந்தையின் மரியாதையை செலுத்தும் நோக்கத்துடன் பயணத்தைத் துவங்குகிறான். தெற்கு ரோமானியாவின் சிறு நகரத்திற்கு வந்தடையும் ஸ்டீபனுக்கும் இசிடோர்(Izidor) என்கிற முதியவரின் வழியாய் அ
றிமுகமாகும் அக்கிராம ஜிப்சிக்களுக்கும் இடையே நிகழும் சம்பவங்களின் தொகுப்புதான் இப்படம். ரோமானிய ஜிப்சிக்களின் வாழ்வை மிக நேரடியாக பதிவு செய்த படம் இது. புனைக்கதைக்கும் ஆவணப்படத்திற்குமான மிகப் பெரும் இடைவெளியை டோனி காட்லிஃபின் படங்கள் குறைக்கின்றன. மக்களின் வாழ்வோடு புனைவாக சிலவற்றை சேர்த்து பதிவதுதான் இவரது பாணி. இத்திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும், இடம்பெற்றிருக்கும் எல்லாக் கதாபாத்திரங்களும் என் மனதில் மிக ஆழமாய் தங்கிப் போய்விட்டன. எதனால் இந்தத் திரைப்படம் என்னை அடித்துப் போட்டது என்பதை சரியாய் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அறியாமையின் களிப்பையும் கொண்டாட்டத்தையும் ஒவ்வொரு காட்சியிலும் பெற முடிகிறது.

இப்படத்திற்கு இசையும் டோனி காட்லிஃப்தான். முழுக்க ரோமானிய ஜிப்சி இசைக் கருவிகளும், நாட்டுப்புற பாடல்களும் படத்தை நிறைத்திருக்கும். ரோமானிய ஜிப்சிக்கள் என அறியப்படுவோரின் ஆதி வேர் இந்தியாவிலிருந்துதான் துவங்குகிறது. வட இந்திய நாடோடிகள் இடம்பெயர்ந்து ரோமானியா முதற்கொண்டு ஐரோப்பா முழுக்க சிதறலாக வாழ்கின்றனர். ஆகவே அவர்களின் இசையிலும் நாட்டுப்புற பாடல்களிலேயும் இந்தியத் தன்மையை உணரமுடியும். மிக நேரடியாக சொல்ல வேண்டுமென்றால் நம் நரிக்குறவர்களின் சாயலை ரோமானிய ஜிப்சிக்களிடம் அப்பட்டமாகப் பார்க்க முடியும். உரத்த குரலில் ஆன்மா அதிரும்படி அடியாழத்திலிருந்து கதறி அழுவது போல் பாடுவதுதான் ஜிப்சிக்களின் பிரதான இசை மொழி. இன்னொரு வகையில் நம் ஊர் ஒப்பாரியோடும் இப் பாடல்களின் சாயலைப் பொருத்திப் பார்க்க முடியும். மிகப் பெரிய தந்தி இசைக்கருவிகளை மீட்டுவதிலும் ரோமானிய ஜிப்சிக்கள் தேர்ந்தவர்கள். ரோமானியர்களின் திருமணம், சாவு போன்ற சடங்குகளில் ஜிப்சிக்களின் இசை மிக முக்கியமான இடத்தை வகிக்கும். பனி உறைந்த, வழியேதும் புலப்படாத ஒரு சாலையில் நடந்து, நடந்து ஓய்ந்த ஸ்டீபனின் அறிமுகத்தோடு படம் துவங்குகிறது. எதிர்பாராத விதமாக அவனைக் கடந்து சொல்லும் குதிரை வண்டி ஒன்றில் இளம் பெண்கள் கும்பலாய் அமர்ந்திருக்கின்றனர். சோர்வாய் நடந்து செல்லும் ஸ்டீபனின் அந்நியத் தன்மையும் தோற்றமும் அப்பெண்களுக்கு சிரிப்பை வர வழைக்கிறது. அவர்களின் மொழியான ரோமானியில் அவன் யாரென வினவுகிறார்கள். மொழி புரியாத ஸ்டீபன் பிரெஞ்சும் ஆங்கிலமுமாய் பதில் பேச, அவன் பேச்சும் உருவமும் சிரிப்பை அதிகமாக்குகிறது. தாம் பேசுவது அவனுக்குப் புரியவில்லை என உணர்ந்த பெண்கள் அவனை சிரித்தபடியே வசைகிறார்கள். சிரிப்பும் கும்மாளமும் அப்பெண்கள் கூட்டத்தில் தளும்ப மேலும் பல வசைகளும் கூடலுக்கான அழைப்பையும்( என்னுடையதை நக்க வா, இதோ இவள் இருக்கிறாளா இவள் உன்னுடையதின் மேல் உப்பையும் மிளகையும் தூவி உண்பதில் கெட்டிக்காரி) காற்றில் சிதறவிட்டு அக்குதிரை வண்டியும் பெண்களும் அடர்ந்த மரங்களின் வழியாய் திரும்பி மறைகின்றனர். இன்னொரு ஜீப் ஒன்று அவனைக் கடந்து செல்கிறது. அதனுள் காயம்பட்ட ஒரு இளைஞனை போலீஸார் துப்பாக்கிகள் சகிதமாய் சிறைப்பிடித்து அழைத்துச் செல்கின்றனர்.

சூரியன் மறைந்த பின்பு அதே கிராமத்திற்கு வந்தடையும் ஸ்டீபன், மூடப்பட்ட ஒரு விடுதிக்கு வெளியே தனியாய் அமர்ந்து குடித்துக் கொண்டிருக்கும் முதியவர் இசிடோரிடம் தங்கும் இடம் குறித்து விசாரிக்கிறான். ஏற்கனவே நல்ல போதையில் இருக்கும் அவர், அவனை வற்புறுத்தி குடிக்க வைக்கிறார். தன்னுடைய மகனை இந்த ரோமானியர்கள் பழி சுமத்தி போலிஸில் பிடித்துக் கொடுத்துவிட்டார்கள் எனவும், ஜிப்சிக்களுக்கு இங்கு நீதி கிடையாது எனவுமாய் அரற்றுகிறார். அவர் பேசுவது ஸ்டீபனுக்கும், ஸ்டீபன் பேசுவது அவருக்கும் புரியவில்லை என்றாலும் இசிடோர் அவனை அதிர்ஷ்டம்தான் தன்னிடம் அனுப்பி வைத்ததாக நம்ப ஆரம்பிக்கிறார். நல்ல போதையில் இருவரும் நெருக்கமாகி பாஷைகள் தேவையற்ற மொழியை பேச ஆரம்பிக்கின்றனர். இசிடோர் ஸ்டீபனைத் தன் வீட்டிற்கு அழைத்துப் போகிறார். ஒருவர் மட்டுமே வசதியாக உறங்க இயலும் படுக்கையில் அவனைப் படுக்கச் சொல்லிவிட்டு குதிரை லாயத்தில் போய் படுத்துக் கொள்கிறார்.

அடுத்த நாள் காலை இசிடோர் எழுந்து காட்டிற்கு விறகு சேகரிக்கப் போய்விடுகிறார். தன்னுடைய வீட்டில் ஸ்டீபன் தூங்குவதை மறந்துவிடுகிறார். அக்கம் பக்கம் இருக்கும் சிறுவர்களும், பெண்களும் தூங்கிக் கொண்டிருக்கும் ஸ்டீபனைப் பார்க்கிறார்கள். அவனுடைய ஆகிருதியான உருவம் சிறுவர்களை மிரட்சியடைய வைக்கிறது. அவனை பூதம் என்றும், சிறுவர்களைப் பிடித்துப் போகிறவன் என்றும் கோழிகளைத் திருடுபவன் என்றுமாய் ஆளாளுக்கு நினைத்துக் கொள்கிறார்கள். இன்னொரு சிறுவர் குழு வனப் பகுதிக்கு ஓடி இசிடோரிடம் அவன் வீட்டில் ஒரு பூதம் படுத்திருப்பதாக சொல்கிறார்கள். ஸ்டீபன் எழுந்து வீதியில் நடந்து போகிறான். அங்கு வாழும் மொத்த மக்களும் அவனை விநோதமாய் பார்க்கிறார்கள். தங்களுக்குள் அவனைப் பற்றி கிசுகிசுக்கிறார்கள். ஸ்டீபன் உணவு விடுதிக்குப் போய் இசிடோர் தங்க இடம் கொடுத்ததிற்கு நன்றி சொல்லும் விதமாய் உணவையும் மதுவையும் வாங்கிக் கொண்டு திரும்புகிறான். வீட்டிற்கு வரும் இசிடோருக்கு நேற்றைய சம்பவங்கள் நினைவிற்கு வருகின்றன. ஸ்டீபனை தன் மகனாக பாவிக்கிறார். அதிர்ஷ்டம் அவனைத் தன்னிடம் அனுப்பி வைத்திருப்பதாக சக கிராமத்தவருக்கு சொல்கிறார். அவன் பேசுவதைப் புரிந்து கொள்ள சபீனா வை அழைத்து வரச் சொல்கிறார். சபீனா பெல்ஜியத்தில் சில காலம் வசித்தவள்.ஜிப்சிக் குழாமத்தின் பேரழகி ஆனால் கடுமையாக வசைவாள். ஒரு சிறுவன் இசிடோர் அழைத்து வரச் சொல்வதாய் சபீனாவைப் போய் அழைக்கிறான் அச்சிறுவனைப் பார்த்து ”உன் அம்மாவை அசிங்கப்படுத்துவதற்குள் ஓடிவிடு” என்பாள். இசிடோர் அழைத்தும் வர மறுத்து விடுகிறாள். இருவரும் கடுமையாய் பாலியல் வசைகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள் (உன்னுடையது சுருங்கிப் போகட்டும்)

நாட்பட நாட்பட சபீனா,ஸ்டீபன்,இசிடோர் மூவருக்கும் இடையே மலரும் அன்பும், நட்பும் கொண்டாட்டமும் படத்தின் முக்கியமான காட்சிகளாக நகர்கின்றன. இசிடோர் தலைமையில் ஒரு திருமணத்திற்கு பாடவும் இசைக்கவும் போகிறார்கள். ஸ்டீபன் நோரா லூகாவைப் பற்றி அனைவரிடமும் விசாரிக்கிறான். இசிடோர் தனக்குத் தெரிந்த இசைக் கலைஞரான மிலன் என்பவரைப் பார்க்க அழைத்துப் போகிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சமீபத்தில் மிலன் இறந்துபோன தகவலை மட்டுமே பெறுகிறார்கள். தன்னுடைய நண்பன் இறந்துபோன துக்கம் தாளாது அவரைப் புதைத்த இடத்தில் சப்தமாய் பாடி இசிடோர் மருகும் காட்சி மனதில் நின்று போகிறது. சபீனாவும் ஸ்டீபனும் கலவி கொள்ளும் காட்சிக்கு நிகரான ஒரு காட்சியை நான் வேறெந்த படத்திலும் கண்டதில்லை. சுதந்திரத்தன்மையின் உச்சமாக இருவரின் கானகக் கலவியை மதிப்பிடலாம். அதிகார வர்க்கங்களின் வெறியாட்டத்தை ஜிப்சிக்களின் நெருக்கடியான வாழ்வை மிகத் துல்லியமாய் பதிவு செய்யும் வகையில் அமைந்திருக்கும் படத்தின் இறுதிக் காட்சி மிகவும் துக்கமானது. 

ஸ்டீபனாகவும் சபீனாவாகவும் நடித்திருந்த Romain duris ம் Rona Hartner ம் இப்படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தனர். இதே ஜோடி டோனி காட்லிஃபின் Children of the Stork படத்திலும் நடித்தார்கள். டோனியின் Exiles படத்திலும் ரோமைன் தூரிஸ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்தார். ரோமானிய சமூகத்தினர் ஜிப்சிக்களை திருடர்களாக, களவை அடிப்படையாகக் கொண்டவர்களாகவே பார்க்கிறார்கள். ஆனால் ஜிப்சிக்கள் உன்னதமான கலைஞர்கள் என்பதை டோனி இப்படத்தில் மிக ஆழமாய் பதிவு செய்திருப்பார்.

சக்கரங்களின் மேல் வீடுகளை வைத்துக் கொள்ள கனவு காணும் ஜிப்சிக்களின் வாழ்வு தருணங்களில் மட்டுமே பொதிந்து கிடக்கிறது. இசிடோரின் மகனான அட்ரியானவின் அதிராகத்திற்கு எதிரான சின்னக் குரல் ஒட்டு மொத்த ஜிப்சி குழாமே தடயமில்லாமல் அழிந்து போவதற்கு காரணமாக அமைகிறது. ஆனால் தருணங்களில் வாழ்பவர்களுக்கு நிரந்தரங்களின் மீது ஒருபோதும் விருப்பமிருந்தது கிடையாது. நகர்வில் மட்டுமே வாழ்வு உயிர்த்திருப்பதாக ஜிப்சிக்கள் நம்புகின்றனர்.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்த tutti frutti பாடல்

வழக்கு எண் 18/9

$
0
0
இரானிய இயக்குனர் மக்பல்ஃப் ம் பாலாஜி சக்திவேலும் ஒரு டீக் கடையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிறுவன் டீக் கடைக்காரரைப் பார்த்து மிகவும் அதட்டலாய் “ஒரு பன்னு கொடுய்யா” எனக் கேட்கிறான். மக்பல்ஃப் அந்த சிறுவனை உற்றுப் பார்த்துவிட்டு இந்தச் சிறுவனின் பின்னால் போனால் ஒரு பிரமாதமான கதை கிடைக்கும் என்கிறார். பாலாஜி சக்திவேல் மக்பல்ஃப் சொன்னதை சரியாக புரிந்து கொண்டதின் விளைவுதான் வழக்கு எண் 18/9. சாலையோர மனிதர்களின் பின்னால் அலைந்து/ஊடுருவி அவர்களின் வாழ்வை மிகச் சரியாகப் புரிந்து கொண்டாலொழிய இம்மாதிரிப் படம் நிகழ சாத்தியமேயில்லை. தமிழ் சினிமா காட்சிப் படுத்த வேண்டிய முக்கியமான விஷயங்களாக நான் நினைப்பவற்றுள் சாலையோர மனிதர்களின் வாழ்வும் ஒன்று. உதிரிகள், விளிம்புநிலை மனிதர்கள் மீதான கவனம் தமிழ் சினிமா படைப்பாளிகளுக்கு ஏற்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய மற்றம். சினிமாவும், இலக்கியமும், இன்ன பிற கலைகளும் சமூகத்தின் கண்ணை/ பார்வையை கூர்மையாக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. கேளிக்கை என்பதற்கான அருஞ்சொற்பொருளை மழுங்கியவை என மாற்றிய பெருமை, நம் தமிழ் சினிமா வணிகர்களுக்கு உண்டுதான் என்றாலும் அவர்களை ஒரு நிமிடமேனும் வெட்கமடையச் செய்யும் திராணி இந்தப் படத்திற்கு இருக்கிறது.

பாலாஜி சக்திவேலின் முதல் படமான சாமுராய் நிறையவே சினிமாத்தனங்கள் மிகுந்திருந்த சராசரிப் படம். ஆனால் இன்னபிற வணிக சினிமாக்களை விட சற்றே மேம்பட்டதாக இருந்தது. இரண்டாவதும், சங்கர் தயாரித்து ஜென்ம சாபல்யம் அடைந்து கொண்டதுமான காதல் தமிழின் மிக முக்கியமான சினிமா. நுணுக்கங்களும் விவரணைகளும் பின்னிப் பிணைந்த மிக உயிரோட்டமான படம். காதலின் வெற்றிக்குப் பிறகு குறைந்தது மதுரையை மையமாக வைத்து அதே சாயலில் ஐம்பது சிறுபடங்கள் வந்திருக்கும் ஆனால் காதல் திரைப்படத்தை மிஞ்சும் /நெருங்கும் அசலான மதுரைப் படம் ஒன்றைப் பிறரால் தர முடியாமலேயே போனது. மூன்றாவது படமான கல்லூரி எனக்கு பிடிக்கவில்லை. யதார்த்தவாதம், நேர்த்தியான கதாபாத்திர சித்தரிப்புகள் என நல்ல சினிமாவிற்கான பல விஷயங்கள் இருந்தும் தமிழ் நாட்டில் நிகழ்ந்த ஒரு மாபெரும் அவலத்தை ஆந்திராவில் நிகழ்த்திக் காட்டி படைப்பாளியின் ஆளுமை மீதான அவநம்பிக்கை உருவாக காரணமாக இருந்தது அந்தப் படம். பாலாஜி சக்திவேல் சில வருட இடைவெளிக்குப் பிறகு தந்திருக்கும் வழக்கு எண்ணை காதலின் இரண்டாம் பாகமாக அனுகலாம். காதல் பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்திய அதே உணர்வை,பாதிப்பை இந்தப் படமும் ஏற்படுத்தியிருக்கிறது.

இரு வேறு துருவங்களின் வாழ்வு, முக்கியமாய் பதின்மர்களின் உலகம் மிகக் கவனமாகக் கையாளப்பட்டுள்ளது. இளம் பிராயத்தில் பெண் மீது ஆணுக்கு ஏற்படும் ஈர்ப்பு, வறுமையின் எதிர்காலமாகவும் பணக்காரத்தனத்தின் வாயூரிசமாகவும் இருக்கின்றது. வசதி படைத்த நவீன வாழ்வும், ராட்சத்தனமாய் வளர்ந்திருக்கும் தொழில்நுட்பங்களும் முதலில் தேடிப் பிடித்துக் கொல்வது மனிதனின் நுண்ணுணர்வுகளைத்தான். ஒரே உணர்வின் வெளிப்பாட்டை இரு வேறு சூழல்கள் தீர்மானிக்கும் விதத்தை யோசித்துப் பார்த்தால் மெல்லிய பயம் படர்வதை தடுக்க முடியவில்லை. ஆர்த்தியின் வழியாய், ஜோதியின் வழியாய் தத்தமது மகளை பார்த்துக் கொள்ளும் தகப்பன்களின் பதட்டத்தை யாரால் குறைத்து விட முடியும்?


கிட்டத்தட்ட அழிந்தே போன கூத்துக் கலையின் சிறு எச்சமாய் சின்னசாமி கதாபாத்திரத்தை இத்திரைப்படம் மீட்டெடுத்திருக்கிறது. பெண் வேடமிடும் பதின்மர்களின் சாயல் அனைத்தையும் முழுமையாய் திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். நிச்சயம் இந்த சின்னசாமி ஏதோ ஒரு கிராமத்தில் பெண் வேடமிட்டு கூத்தில் நடித்தவனாகத்தான் இருந்திருக்க வேண்டும். வேலுவை தனியாக சந்தித்து “உனக்கு பொய் பேச வராது மொதலாளி தொரத்திட்டான்னா எங்க போவ, அதான்யா நான் அப்புடிப் பேசினேன் எதையும் மனசில வச்சிக்காதய்யா” என மருகும் காட்சியை இன்னும் சில வருடங்களுக்கு என்னால் மறக்கவே முடியாது. அந்தக் காட்சிக்கு முத்தாய்ப்பாய் “இவ்ளோ காச வச்சிட்டு நான் என்ன பண்ணுறது இந்தாடா” என பணத்தை நீட்டும் வேலுவின் கண்களின் வழியே நேயத்தின் மாபெரும் விழுதுகளைப் பார்க்க முடிந்தது.

மிகக் குரூரமான பால்யத்தையும் மிக மோசமான அனுபவங்களை மட்டுமே வாழ்க்கையாகவும் கொண்ட வேலுவிற்கு முதலில் கிடைக்கும் அன்பு அல்லது பிடிமானம் ரோஸியினுடையது. நைந்த அக்கைகளைப் பிடித்து நிற்பவன் நிலத்தில் காலூன்றி இன்னொரு மெலிந்த பெண்ணின் கைகளைப் பிடித்துக் கொண்டு பறக்க நினைக்கிறான். இவர்களை அதிகார வர்க்கக் கழுகுகள் கொத்திக் கொத்தி விரட்டியடிக்கின்றன. நைந்த சிறு பறவைக்கும் கூரிய அலகிருப்பதை கழுகுகளுக்கு சொல்வதுதான் இறுதிக் காட்சி. மீறல்களும்,கிளிஷேவும் அங்கங்கே எட்டிப் பார்க்கிறதுதான் என்றாலும் பெரிய அளவில் உறுத்தல்கள் இல்லாமல் மிகச் சரியாகவே இக்கதை சொல்லப்பட்டிருக்கிறது. அரசியல் புரிந்துணர்வோடு சாதிய வேர்களையும் சரியாய் தொட்டுப் போயிருக்கிறது.

அங்காடித் தெருவில் கால்களை இழந்த பெண்ணை வண்டியில் உட்கார வைத்துத் தள்ளிக் கொண்டு போகும் ஆணின் சித்திரமொன்று படத்தின் இறுதிக் காட்சி என்ன என்பதை பூடகமாக உணர்த்தும். இந்தப் படத்திலேயும் கண்ணிழந்த பெண்ணும் ஆணுமாய் அவ்வப்போது திரையைக் கடந்து போவதை வைத்து இறுதிக் காட்சியை யூகிக்க முடிகிறது( சிலப்பதிகார காலத்து உத்தியாயிற்றே) க்ளைமாக்ஸிற்கு சற்று முன்பிலிருந்து படத்தை துவங்கி, முன்னும் பின்னுமாய் கதையை சொல்லி, விவரணைகளாலும் நெகிழ்வுகளாலும் படத்தை நிரப்பி, அநீதியால் கலங்க வைத்து, ஆழமான நம்பிக்கையோடு படத்தை முடிப்பது நல்ல திரையாக்கம்தான். parallel சினிமாக்களுக்கு இது மிகவும் பழக்கமான வடிவம். நல்ல படங்கள் என அறியப்பட்ட பெரும்பாலான படங்கள் இந்த வடிவத்தைத்தான் கையாண்டிருக்கின்றன. தமிழிலும் இதே வடிவத்தில் சினிமாக்கள் வர ஆரம்பித்திருப்பதை நல்ல மாற்றம் எனக் கருதினாலும் சற்றே அலுக்க ஆரம்பித்திருப்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

இப்போது மீண்டும் மக்பல்ஃபிற்கு வருவோம். ஒரு வேளை மக்பல்ஃப் இதேக் கருவை சினிமாவாக்கியிருந்தால் வேலுவிற்கு சிறைத் தண்டனை கிடைப்பதோடு படத்தை முடித்திருப்பார். சமூகத்தின் அவலத்தை பதிவு செய்ய நினைத்தின் நேர்மையான வெளிப்பாடு என்பது அந்த மட்டிலேயே நின்று போகிறது. மாறாய் இங்கு ஜோதியின் விஸ்வரூபம் முழுக்க சினிமாத்தனத்திற்காக சேர்க்கப்பட்ட இனிப்பு மட்டுமேதான். ஆனாலும் ஜோதியின் பழி வாங்கலுக்கான நியாயமான காரணங்கள் படம் நெடுக சொல்லப்பட்டிருக்கின்றன. அந்தக் கவித்துவ நியாயங்கள்தாம் படத்தைத் தாங்கி நிற்கின்றன.

உயிர்த்திருத்தல்

$
0
0
சதத் ஹசன் மண்ட்டோவின் தலைப்பு மறந்து போன சிறுகதை ஒன்றில் அப்பா கதாபாத்திரமொன்று தொடர்ந்து வீட்டை/ தரையை சுத்தம் செய்தபடி இருக்கும். சிறு சிறு கூரான துரும்புகள் எங்கே தன் சின்னஞ்சிறு மகனை காயப்படுத்திவிடுமோ வென தொடர்ந்து அஞ்சியபடி இருக்கும். கடந்த மூன்று வருடங்களாய் நானும் அக்கதாபாத்திர மனநிலையில்தான் பெரும்பாலும் உழல்கிறேன். இந்த அசட்டுத்தனமான எண்ணங்கள், தேவையற்ற பயங்கள் யாவும் புதுத்தகப்பர்களின் இயல்பு - போகப்போக சரியாகிவிடும் என என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்ட ஆரம்ப நாட்கள், இப்போதைய என்னைப் பார்த்து கேலியாகச் சிரிக்கின்றன. இன்னமும் மோசமான, பயங்களின்/ கற்பனைகளின் உச்சத்திற்குத்தான் நகர்ந்திருக்கிறேனே தவிர எவ்வித சமநிலை திரும்பலும் இல்லை. சொல்லப்போனால் பயம் துவங்கிய நாளிலிருந்து அடுத்த ஒண்ணரை வருடத்தில் இரட்டிப்பானதே தவிர சமநிலைக்குத் திரும்பவேயில்லை. இந்த பயங்களும், கற்பனைகளும், மிகைகளும் என்னைப் பலவீனனாக்கி இருப்பதை தனிமையில் புரிந்து கொள்கிறேன். ஏற்கனவே சோம்பேறியான என்னை வீட்டை விட்டு நகரவே நகராத அதி சோம்பேறியாக மாற்றியிருப்பதும் உண்மை. ஆனால் என் வாழ்வின் மிக சந்தோஷமான,உயிர்ப்பான நாட்கள் இவை என்பதையும் மறுப்பதற்கில்லை ( ஆமாம் நீ எப்போதுதான் துக்கமாயிருந்தாய்?)

பெரியவன் லொடலொட வென பேசிக்கொண்டே இருக்கிறான். சின்னவன் அவன் பேச்சைப் பார்த்து சொற்களற்ற குரலை அதே பாவத்தில் உயர்த்துகிறான். நால்வருமே சேர்ந்து கோரஸாய் கத்தி அவ்வப்போது வீட்டை அலற வைக்கிறோம். ஓடி, குதித்து, விழுந்து, வாரி, சுவறில் மோதி, பொருட்களை உடைத்து, கத்தி, சிரித்து, பயந்து, பயமுறுத்தி, பாடி, ஆடி ஒவ்வொரு நொடியையும் உயிர்ப்பாக்குகிறோம். புற உலக மனிதர்கள் தவிர்த்து எண்ணற்ற கதைகள், கதாபாத்திரங்கள், விலங்குகள், பூச்சிகள், பறவைகள், பேய்கள்(Bயா,காஞ்சனா) என எங்களின் உலகம் சகல வஸ்துக்களாலும் நிரம்பி வழிகிறது. பிங்குவும் ஷான் த ஷீப்பும் எங்களின் மூன்றாம் நான்காம் பிள்ளைகள். ஒரு உச்சத்தில் இதயம் விரிந்து கண்ணில் படும் அத்தனை சிறார்களும் எங்களின் பிள்ளைகளாக பாவிக்கும் பெரும்கருணையும் வந்து சேர்ந்திருக்கிறது.


அவதார், ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட், ஹேப்பிஃபீட், குங்க்பூபாண்டா, தமிழ் ரைம்ஸ், காக்கா –நரி கதைகள், குத்துபாட்டுக்கள் போன்றவைகளால் கூடம் நிறைகிறது. சோதனை முயற்சியாக சென்ற வாரத்தில் காஸ்ட் அவே வை பெரியவனோடு சேர்ந்து பார்த்தேன். டாம் ஹாங்க்ஸ் நெருப்பை வரவழைக்கும் காட்சிக்கு கண்கள் வியந்து ஆர்ப்பரித்தான். மெல்ல கதையை அவனுக்கேற்றார்போல் மாற்றி அங்கிள் டாமின் அவல நிலையை அவன் வார்த்தைகளில் மொழி பெயர்த்து ( பல்ல சரியா தேய்க்காததால அங்கிள்க்கு சொத்த பல்லு வந்திருச்சி, பிஷ் சாப்ட்றாம்பா, அங்கிள பியா கட்ச்சிருச்சா, காஞ்சனா(படம் வரையப்பட்ட பந்து) கடல்ல வுந்திரிச்சி, செம செமயா மழ, போட்ல போறான்) பாதிப் படம் பார்த்தோம். அலைகள் டாமை மீண்டும் கரை சேர்த்தபோது இவன் சோர்ந்து ”டி.வி பாத்தா கண்ணு கெட்டுடும்” என திடீர் நல்ல பிள்ளையாகி எழுந்து போய் சுவிட்சை நிறுத்தினான். பின்போர் இரவில் சில்ரன் ஆப் ஹெவன் படத்தையும் அவனுக்கு மொழி பெயர்த்தேன். சாகஸ காட்சிகள் எதுவும் இல்லையென்றாலும் அச்சிறுவர்களின் முக பாவனைகள் இவனைப் பெரிதும் ஈர்த்தது. அலி ஓடி ஜெயிக்கும் காட்சிக்கு பெரியவன் ஆர்ப்பாட்டமாய் சிரித்தும், என் மனைவி கண்கள் நிறைந்துமாய் இரு வேறு மனப் பதிவுகளை வெளிப்படுத்தினர். தாய்மையின் உச்சத்தில் அலியும் சாராவும் இப்போது வளர்ந்திருப்பார்களா? சினிமா நடிக்கிறார்களா? எனக்கேட்ட மனைவிக்கு இணையத்தில் தேடிப் பார்த்து சொல்வதாய் சொன்னேன்.
 0 
சமீபமாய் மீண்டும் ஓஷோவை கேட்க ஆரம்பித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை கேட்கும்போதும் ஓஷோவின் உரைகள் புத்துணர்வைத் தருவதென்னவோ உண்மை. தம்மபதா குறித்த உரைகளை தொடர்ந்து கேட்டதன் விளைவு, முன்பொரு காலத்தில் நான் விபாஸனா பயின்றது நினைவிற்கு வந்தது. இணைய நண்பர்கள் வழியாய் தம்மபதாவின் மூல வடிவம், மகாவசம்சம் போன்றவைகளை படிப்பதற்காக தரவிறக்கி வைத்திருக்கிறேன். மிக முக்கியமாக விபாஸனாவை மீண்டும் தூசி தட்ட வேண்டும் என்ற எண்ணமும் வந்திருக்கிறது. செய்ய வேண்டியவைகளின் பட்டியலில் தினம் ஒன்று கூடுவதாக இன்றளவும் வாழ்வு அமைந்திருப்பதில் திருப்தியே. என் ப்ரியத்திற்குறிய சோம்பலன் மிக நீளமான to-do பட்டியலில் புதிய வார்த்தை ஒன்றை இன்றும் எழுதிவிட்டு தூங்கப் போகிறான். தூக்கம் தழுவுவதற்கு முன்பு என்னுடைய கனவு இடத்தின் (மரங்கள் சூழ்-நீர் சூழ்-மலைகள் சூழ் ) சாணத் தரையில் பாய் விரித்து சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களில் ஒன்றைத் தேடியெடுத்து முதல் பக்கத்தைப் பிரிக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக அந்த மென்சூழலிலும் தூக்கமே தழுவுகிறது. நீங்கள் கிம்-கி-டுக் கின் the isle படத்தில் நீர் அசைவுடன் -படகு வீட்டில்- காற்றின் முணுமுணுப்போடு இருவர் தூங்கும் காட்சியை நினைவுபடுத்திப் பார்க்கலாம். நானும் அக்காட்சியைத்தான் கனவப்போகிறேன்.

Gangs of Wasseypur - 1

$
0
0
நிலக்கரிச் சுரங்கத்தில் கொத்தடிமை வேலை பார்க்கும் ஷாகித் கானிற்கு ஒரு செய்தி வருகிறது. அவன் மனைவியின் பிரசவத்தில் சிக்கல். செய்தி கொண்டு வந்தவனை சுரங்க முதலாளியின் அடியாட்கள் விரட்டிவிடுவதை பார்த்துவிடும் சக அடிமை ஒருவன் கிசுகிசுப்பாய் அச்செய்தியை சொல்கிறான். கண்காணிக்கும் அடியாட்களிடம் வீட்டிற்கு போக அனுமதி கேட்கிறான். மறுக்கப்படுகிறது. பலவந்தமாய் வெளியே போகிறான். கொட்டும் மழையில் வீட்டை அடைகிறான். ஆறு மணி நேரம் வலியில் துடித்த அவன் மனைவி ஆண் குழந்தையை பிரசவித்துவிட்டு இறந்துபோகிறாள். மனைவியைப் புதைத்துவிட்டு நிலக்கரிச் சுரங்க அடியாட்களை ஷாகித் கான் நையப் புடைக்கிறான். தடிதடியான அடியாட்களை சக கொத்தடிமைகளின் உற்சாக ஊக்குவிப்புக் குரல்களின் பின்னணியில் ஷாகித் கான் அடித்து வீழ்த்துவதை முதலாளி பார்க்கிறார். ஷாகித் கானை வேலையிலிருந்து விடுவித்து மேய்க்கும் அடியாளாக மாற்றுகிறார். இப்போது ஷாகித் கான் முன்னாள் சக வேலையாட்களை நையப் புடைக்கிறான். வீடுகளை எரிக்கிறான். ஆற்றாமையில் ஒருவன் ”நீயும் எங்களில் ஒருவன் தானே?”  என கேட்கிறான். ஷாகித் கான் அவனை நெட்டித் தள்ளி உதைக்கிறான்.

 கேங்ஸ் ஆஃப் வாஸிபூர் படத்தில் வரும் மேற்சொன்ன காட்சி படத்தை முழுவதுமாகப் புரிந்து கொள்ள ஒரு சின்ன உதாரணம். முதலாளி வர்க்கத்தின் அசல் முகத்தையும் முதலாளி களாக விரும்பும் சாமான்யர்களின் ரத்தமும் சதையுமான போராட்டத்தையும் எழுபது வருட இந்திய அரசியல் பின்னணியோடு மிக அழுத்தமாய் நம் முன் வைத்திருக்கிறார் அனுராக் காஷ்யப். இவரின் இதற்கு முந்தைய அரசியல் படமான 2009 இல் வெளிவந்த குலால் ராஜபுத் அரசியலின் ‘பின்னணி’ யைத் தோலுரித்துக் காட்டிய படம். இந்திய சினிமாக்களைப் பொறுத்தவரை சரியான அரசியலை முன் வைக்கும் படங்கள் மிக சொற்பமானவை. அதில் குலால் படத்திற்கு மிக முக்கியமான இடம் உண்டு. தற்போது வந்திருக்கும் கேங்க்ஸ் ஆஃப் வாஸிபூர் படம் குலாலைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. அனுராக் காஷ்யப் தன் சாதனையைத் தானே முறியடித்திருக்கிறார்.

வாஸிபூர் தற்போது ஜார்கண்ட்  மாநிலத்திலுள்ள தன்பாத் மாவட்டதிலிருக்கும் சிறுநகரம். இதற்கு முன்பு பீஹார் மாநிலத்தின் கீழும் அதற்கும் முன்பு பெங்கால் கீழும் இருந்தது. இங்கு பெரும்பான்மையினர் முஸ்லீம்கள். முஸ்லீம்களில் இறைச்சி வெட்டும் தொழிலைப் பிரதானமாகக் கொண்டிருக்கும் குரேஷிகளுக்கும் இன்னொரு பிரிவினரான சன்னி முஸ்லீம்களுக்கும் (பட்டான் என்று பொதுவாக அழைக்கப்படுவர்) எப்போதும் பகை இருந்தது. இந்த இரண்டு குழுக்களுக்கு இடையே நிகழும் வன்முறையும், போட்டியும், பழியும்தான் வாஸிபூரின் கதைக் களம். மொத்தக் கதையும் ஷாகித் கான் என்கிற பட்டான் குடும்பத்தின் பார்வையிலிருந்து சொல்லப்படுகிறது. நல்ல Vs கெட்ட என்கிற வழக்கமான சினிமாக் கதை சொல்லும் உத்திக்குப் பதிலாய் கெட்ட Vs கேடுகெட்ட என்கிற அடிப்படையில் பொருத்தி கதை சொல்வது. இந்த வகைக் கதை சொல்லும் உத்தியை செர்ஜியோ லியோனிலிருந்து, குவாண்டின் டராண்டினோ வரைக்குமாய் மிக சிறப்பாய் கையாண்டார்கள். இந்திய சினிமாவில் இவ் வகைக் கதை சொல்லும் உத்தி இப்படத்தில்தான் முழுவதுமாகச் சாத்தியமாகி இருக்கிறது. பின்னணி வரலாறை விவரிக்கும் டாக்குமெண்டரி ஸ்டைல் குரல், பரவசமான கொலைகள், களிப்பூட்டும் பாலியல் வசைகள் என படம் முழுக்க டராண்டினோவின் சாயலில் எடுக்கப்பட்டிருக்கிறது. டைட்டில் கார்ட் உள்ளிட்ட சில காட்சிகளில்  இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் படத்தின் நேரடி உத்தி- பாதிப்பு தெரிகிறது. 


இதுவரை படம் பார்க்காதோர் இனிமேல் வரும் பதிவுகளை படம் பார்த்துவிட்டு வாசிக்கவும். கதையை முழுவதுமாகப் பேச வேண்டிய தேவை இருக்கிறது. 


மேலும்

Gangs of Wasseypur - 2

$
0
0
1940 களில் வாஸிபூர் வழியே போகும் பிரிட்டீஷாரின் சரக்கு இரயில்களை ஷாகித்கான் தன் சகாக்களுடன், அப்பகுதியின் பிரபல கொள்ளையனான சுல்தானாவின் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளையடிக்கிறான். உள்ளூர் மார்க்கெட்டில் அவ்உணவுப் பண்டங்களை குறைந்த விலைக்கு விற்று லாபம் ஈட்டுகிறான். இவ்விஷயம் சுல்தானா காதிற்குப் போகிறது. தக்க நேரத்திற்காக காத்திருக்கும் சுல்தானா, இன்னொரு கொள்ளை சம்பவத்தில் ஷாகித்கான் ஆட்களைக் கொன்று குவிக்கிறான். ஷாகித்கானின் சகாக்களில் ஒருவரான ஃப்ர்ஹான் மட்டுமே எஞ்சுகிறார். கர்ப்பிணி மனைவியுடன் ஷாகித்கானும் ஃபர்ஹானும் வாஸிபூரை விட்டு வெளியேறி தன்பாத்திற்குப் போகிறார்கள். பழைய அடையாளத்தையெல்லாம் மறந்து விட்டு அங்குள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் அடிமை வேலை செய்கிறான். பிரவத்தில் மனைவி இறந்து விடுகிறாள். மனைவி ஆபத்தில் இருந்த செய்தியை சொல்ல அனுமதிக்காதவனை அடித்து
நொறுக்கி சுரங்க உரிமையாளரான ரமதீர்சிங் கிற்கு முதன்மை அடியாளாகிறான். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கிறது. இந்திய அரசாங்கம் சுரங்கத் தொழிலில் டாடா க்களுக்கும் பிர்லா க்களுக்கும் காண்ட்ராக்ட் உரிமை தருகிறது. அவர்களுக்கு அத்தொழில் குறித்து கிஞ்சித்தும் அறிவில்லாததால் அதே முதலாளிகள் நீடிக்கின்றனர். இன்னமும் அதிகமாகப் பொருளீட்டுகின்றனர். ரமதீர்சிங் இன்னமும் செழிக்கிறான். ஒரு கட்டத்தில் ரமதீர்சிங் ஷாகித்கானை சமயோசிதமாகக் கொல்கிறான். ஷாகித்கானின் மகனையும்,ஃபர்ஹானையும் கொல்ல ஆளனுப்புகிறான். ஆனால் இருவரும் தப்பி விடுகிறார்கள். கொல்லச் சென்றவன் கொன்றுவிட்டதாகப் பொய் சொல்கிறான். ரமதீர் அரசியலில் பிசி யாகிறான். தொழிலாளி மந்திரியாகிறான். தொழிலாளர் யூனியன்களையும் கையகப் படுத்துகிறான். அவனின் ஆட்கள் கூலியாட்களுக்கு சொற்பமான முன் பணத்தைக் கொடுத்துவிட்டு வட்டியாக அவர்களின் மாத வருமானத்தைப் பிடுங்கிக் கொள்கிறார்கள். அவ்வப்போது தோன்றும் நேர்மை அரசாங்க அதிகாரிகளையும் கொன்று குவிக்கிறார்கள். ஆக ரமதீரின் சாம்ராஜ்யம் செழிப்படைகிறது.

 ஃபர்ஹான், ஷாகித்கான் மகனான சர்தார்கானை வளர்த்து ஆளாக்குகிறான். சர்தான் கானின் பதின்ம வயதிலேயே அவன் தந்தையின் மரணம் குறித்தும் ரமதீர்சிங் குறித்துமான கதைகளை சொல்கிறான். சர்தார்கான் இளம் வயதிலேயே அவனை அழிக்க வெஞ்சினம் கொள்கிறான். நக்மாவைத் திருமணம் செய்துகொள்கிறான். வரிசையாய் குழந்தைகளைப் பெற்றும் அடங்காத காமம் கொண்டு வேசிகளைப் புணர்ந்து திரிகிறான். அவனுக்கென்று ஓரிருவர் சேர்ந்ததும். ரமதீர் சிங்கிற்கு எதிராக மெல்ல வளருகிறான். ஸ்க்ராப் வியாபாரக் காண்ட்ராக்ட் பெறுவது, ரமதீர் சிங்கின் பெட்ரோம் பம்பைக் கொள்ளையடிப்பது, ரமதீருடன் நேரடியாக மோதி ஜெயிலுக்குப் போவது, ஜெயிலிலேயே பாம் தயாரித்து, சுவரை வெடிக்க வைத்து தப்பிப்பது, வாஸிபூரில் குரேஷிகளுக்கு சிம்ம சொப்பனமாவது என தொடர் நடவடிக்கைகள் மூலம் சர்தார் முக்கியப் புள்ளியாகிறான். கூடவே சர்தாரின் குடும்ப வாழ்க்கையும் விலாவரியாக பேசப்படுகிறது.

துர்கா என்றொரு பெங்காலிப் பெண்ணையும் இரண்டாவதாக மணந்து கொள்கிறான். முதல் மனைவியான நக்மா – வையும் குழந்தைகளையும் கைகழுவி விடுகிறான். பிள்ளைகள் பள்ளிக்குப் போவதை நிறுத்திவிட்டு ரயிலை சுத்தம் செய்து பணம் ஈட்டும் நிலைக்குப் போகிறார்கள். குடும்பத்தோடே இருக்கும் ஃபர்ஹானுக்கும் நக்மாவிற்கும் உறவு மலர்கிறது. அம்மாவையும் அப்பாவை வளர்த்தவரையும் ஒன்றாகப் பார்க்கும் முதல் மகன் மனம் வெறுக்கிறான். புகை- பொறுக்கித் தனம் என மாறிப் போகிறான். சர்தார் துர்காவுடன் திகட்டத் திகட்ட காமம் துய்க்கிறான். ரமதீர் சிங்கிற்கு தொடர் தொல்லைகள் தருகிறான். தன் இரண்டாம் மகனால் ஒருமுறை எதிரிகளின் குண்டிலிருந்து சர்தார் தப்பிக்கிறான். நக்மாவோடும் பிள்ளைகளோடும் மீண்டும் சேர்கிறான். துர்க்காவோடு சண்டை வருகிறது. மீன்பிடி தொழிலை ஆரம்பிக்கிறார்கள். நக்மா பெரிய வீட்டில் குளிர்சாதனப் பெட்டி, வாக்குவம் க்ளீனர் சகிதமாய் செட்டில் ஆகிறாள். பிள்ளைகளின் காலம் ஆரம்பிக்கிறது. ஃபைசல் கான் துப்பாக்கி வாங்க வாரணாசி போகிறான். துப்பாக்கி விற்பனையாளன் ஃபைசல் கானின் தாத்தாவான ஷாகித் கானைக் கொன்றவன். அவனின் சதியில் மாட்டி சிறைக்குப் போகிறான். சிறையிலிருந்து திரும்பி வருபவன். மீண்டும் துப்பாக்கி விற்பனையாளனை சந்திக்கப் போகிறான். முன்பு கொடுத்த அதே துப்பாக்கி என்பதை உணர்கிறான். விற்பனையாளனை கொல்கிறான். சமயோசிதமாய் துப்பாக்கிகளை ரயிலில் ஒளித்து வைத்துவிட்டு ஊருக்கு வருகிறான். இன்னொரு மகன் சர்தார் கானைப் போட்டுத் தள்ள துடிக்கும் சுல்தானா தங்கையின் மீது காதல் வயப்படுகிறான். சுல்தானாவின் எதிர்ப்பை மீறி திருமணம் நடக்கிறது. ஃபைசலும் காதல் வயப்படுகிறான். ஒரு அதிகாலையில் பெட்ரோல் பம்பில் வைத்து சர்தார் கானைப் போட்டுத் தள்ளுகிறார்கள். சர்தார் கான் இரத்த சக்தியாய் வண்டியிலிருந்து இறங்கி நடந்து போய் இன்னொரு மாட்டு வண்டியில் படுக்கிறான். முதல் பாகம் நிறைவடைகிறது.

 படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதைகள்- சம்பவங்கள்- நிகழ்வுகள்- போன்றவற்றை எழுத எழுத வந்து கொண்டே இருக்கின்றன. அவ்வளவு விவரணைகளை ஒரே படத்தில் திகட்டத் திகட்டத் தந்திருக்கிறார்கள். ஆனால் அலுப்போ சலிப்போ படம் பார்க்கும்போது ஏற்படுவதில்லை என்பதுதான் திரைக்கதையின் ஆச்சரியம். ஒண்ணரை மணி நேரத்திற்கு மேல் ஒரு திரைப்படத்தில் சொல்ல எதுவுமே இல்லை என்பது என் கற்பிதம். ஆனால் ஐந்தரை மணி நேரங்கள் அலுக்காத சலிக்காத ஒரு திரைப்படத்தை தர முடியும் என அனுராக் காஷ்யப் நிரூபித்திருக்கிறார். இதன் இரண்டாம் பாகத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

சர்தார் கான் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் மனோஜ் பாஜ்பாய். ராம்கோபால்வர்மாவின் சத்யா படம் நினைவிருக்கிறதா? அதில் டான் ஆக நடித்தவர். இந்தப்படத்தில் கிட்டத்தட்ட ஒரு முழு பட்டானாக வாழ்ந்திருக்கிறார். துபாயில் தமிழக- ஆந்திர அடிமட்டத் தொழிலாளிகளுக்கு அடுத்து பாகிஸ்தானிலிருந்து வரும் பட்டான்களின் எண்ணிக்கைதாம் அதிகம். நான் பார்த்த வரைக்குமான பட்டான்கள் முரட்டுத்தனமும் முட்டாள்தனமும் நிரம்பியவர்கள். எளிதில் உணர்ச்சிவயப் படுபவர்கள். எந்த பந்தா வும் இல்லாதவர்கள். எதற்கும் துணிந்தவர்கள். இந்த குணாதிசயங்கள் பெரும்பான்மையான பட்டான்களுக்கு ஒத்துப் போகும் போல.

சர்தார் கான் கதாபாத்திரம் இந்த குணாதிசயங்களை வேறு தளத்தில் பிரதிபலித்தது. காமுகனாக, முரடனாக, சுயநலமியாக, வஞ்சம் மிகுந்தவனாக, மூடனாக மனோஜ் பாஜ்பாயீ கிட்டத்தட்ட வாழ்ந்தே இருக்கிறார். தந்தையைக் கொன்ற ரமதீரைப் பழிவாங்கும் வரை தலையில் முடிவளர்ப்பதில்லை எனும் பதின்ம வயதில் எடுத்த சபதத்தோடு மொட்டைத் தலையில் லேசாக வளர்ந்த முடியோடே படம் முழுக்க வருகிறார். மனைவியுடனான ஊடல், கூடல், முரண்டு பிடிப்பது,  குரேஷிகளின் குடியிருப்புப் பகுதிகளுக்குப் போய் வெடிகுண்டு வீசுவது,  ரீமா சென்னின் மீது காம வயப்படல், தடதட வென முடிவுகளை உணர்ச்சி மேலீட்டில் எடுப்பது என மனோஜ் திரையில் வரும் ஒவ்வொரு நொடியும் உயிர்ப்பு. இவ்வளவு உயிர்ப்பும் ஆக்ரோஷமுமான ஒரு கதாபாத்திரத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென்கிற ஆவல் தான் அதிகமானதே தவிர ஒரே ஒரு அசைவு கூட சலிப்பை ஏற்படுத்தவில்லை.

படத்தின் இன்னொரு பிரமாதமான காஸ்டிங் ரிச்சா சட்டா. சர்தார் கான் மனைவியாக வரும் நக்மா கதாபாத்திரம். ஏற்கனவே கொச்சையான பிஹாரி ஹிந்தியை இன்னும் கொச்சையாகப் பேசியிருப்பார். வாயைத் திறந்தால் வசை. படத்தை உயிர்ப்பாக வைத்திருப்பதில் இவரின் வசைகளுக்கும் பங்கு உண்டு. ஒரு சிறிய கட்டில் நன்கு வளர்ந்த இரண்டு மகன்கள் அருகே படுத்திருக்கிறார்கள். மூன்றாவது குழந்தை வயிற்றில் இருக்கிறது. சர்தார் கான் வேட்கையுடன் வயிற்றைத் தடவிக் கொண்டே கலவிக்கு அழைக்கிறான். டாக்டர்கள் கூடாதென்கிறார்கள் என்று மறுக்கிறாள். ”நீ கால மட்டும் விரி மத்ததுலாம் நான் பாத்துக்குறேன்” என்கிறான். ”இந்தப் பேச்சுக்கு ஒண்ணும் கொறச்சலில்லை” என்றபடி தீர்மானமாய் மறுக்கிறாள். ”நீ ஏன் அடிக்கடி வயிற்றைத் தள்ளிக் கொள்கிறாய்?” என்கிறான். கடுப்பான அவள் ”இதுக்கு காரணம் நீதான. இல்ல நீ ஊருக்குப் போறப்பலாம் அல்லா வந்தா ஓத்துட்டுப் போறாரு?” என்கிறாள். கோபம் கொண்டு எழுந்து போய்விடுகிறான்.

 நிறை மாத கர்ப்பத்தோடும் கையில் கத்தியோடும் சர்தார் கானை வேசிகள் குடியிருப்பில் விரட்டும் காட்சி ஒன்று போதும் ரிச்சா சட்டாவின் அற்புதமான நடிப்பைச் சொல்வதற்கு. இரண்டாம் மனைவியாக வரும் பெங்காலிப் புலி ரீமா சென் படத்தின் கவர்ச்சிக்கும் காமத்திற்கும் கொஞ்சமே கொஞ்சம் பங்களிக்கிறார். இரண்டாம் பகுதியில் ரீமாவின் பாத்திரம் வேறொரு பரிமாணத்தைக் காட்டக் கூடும். இது தவிர ஃபர்ஹான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பியூஷ் மிஸ்ரா, ரமதீர் - திக்மன்ஷூ போன்றார் படம் தொய்வில்லாமல் நகர முக்கிய காரணங்களாக இருக்கிறார்கள்.

மேக்கிங் குறித்து நாளெல்லாம் பேசிக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு புத்திசாலித்தனம். அவ்வளவு நுட்பம். படத்தின் முதல் காட்சி ஒரு சீரியல் விளம்பரம். உயர் நடுத்தர வர்க்கத்து பெண்ணொருவர் அதீத பாவனைகளோடு பாடி ஆடும் பாடல், மெல்ல சுருங்கி டிவிப் பெட்டிக்குள் போகிறது. டிவிப் பெட்டி மெல்ல சிறியதாகிறது. பெட்டிக் கடை மாதிரி தெரிகிறதே என நாம் யோசிக்கும் முன்பே ஹை டெசிபலில் ஒரு தோட்டா டிவிப் பெட்டியைத் தாக்குறது. கடைய மூடு மூடு ஓடு ஒட்டிப்போ என்கிற குரல்கள் கேட்கின்றன. துப்பாக்கிகளோடு ஒரு கும்பல் ஃபைசல் கான் வீட்டைத் தகர்கிறது. சல்லடையாய் வீட்டைத் துளைத்தபின், கும்பலின் தலைவன் ஃபைசல் கான் மொபைலிற்கு போன் போடுகிறான். ஏதோ ஒரு குறுகிய அறையில் பைசல் கான் மற்றும் அவன் குடும்பம் ஒடுங்கி அமர்ந்திருக்கிறது. செல்போனின் ரிங் டோன் ”நாயக் கு ஹே! கல் நாயக் கு ஹே!. பாடல் சத்தமாக அலருகிறது. எடுக்காமல் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கும்பலின் தலைவன் இன்னொரு முறை முழு ரிங்கை விட்டு அனைவரும் செத்துப் போனார்கள் என்பதை உறுதி செய்துகொண்டு ”கல்நாயக் கதம்” என்கிறான்.

 இந்த ஒரு காட்சியின் நுட்பத்திற்காகவே அனுராக் காஷ்யப் – ஐ இறுகக் கட்டி முத்தமிடலாம். இன்னும் பேச வேண்டிய தளங்கள், பார்வைகள் படத்தில் ஏராளமாக உள்ளன. இரண்டாம் பாகம் வந்ததும் பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

Gangs of Wasseypur II trailer

$
0
0





http://www.youtube.com/watch?v=S3PZbL8JGYQ&feature=youtu.be

வேனிற்காலங்களின் இளவரசி

$
0
0

வேனிற் காலங்களின் இளவரசி
அடுக்குச் செம்பருத்திப் பூவை
வருடிப் போகிறாள்
வெண்மஞ்சளாய் கிளைப்பூத்து
செம்மஞ்சளாய் மண்பூத்து நிற்கும்
வேம்பூவைத் தழுவி
முத்தமிடுகிறாள்
நெருங்குவதற்கு முன்பே புங்கை
அடர்த்தியாய் பூச்சொறிந்ததை
புன்னகையோடு ஏற்றுக் கொள்கிறாள்
மழை நனைய
மலர்தலைத் தள்ளிப்போட்டிருக்கும்
பன்னீர் மரத்தை
செல்லமாய் கோபித்து நகர்கிறாள்
பூக்காலங்களின் இளவரசன்
வியர்த்து வந்து
வேனிற்கால இளவரசியின் முன் மண்டியிடுகிறான்.
தன் கருணைக் கரங்களால் அவனை வாரியெடுத்து
மார்புறத் தழுவுகிறாள்
பன்னீர் மரம் குலுங்கி பூப்பூவாய் பூக்கிறது.
 0




வேனிற் காலங்களின் இளவரசி 
மலரிலிருந்து கோபமாய் விழித்தெழுந்தாள் 
உற்சாகமாய் மேலெழ ஆரம்பித்திருந்த 
சூரியனை முறைத்து 
மீண்டும் உள்ளே போகுமாறு சமிக்ஞை செய்தாள். 
பெருகிப் பெருகி தகித்த 
சுவாசப் பெருமூச்சில் 
தாவர சங்கமங்கள் வேரோடு அழிந்தன. 
குழம்பிய காலநிலையொன்றின் நடுவில் 
அமர்ந்து கொண்டிருந்தவளின் துக்கம் உடைய 
தேம்பி அழ ஆரம்பித்தாள் 
உலகம் வெள்ளக்காடானது 
அதில் 
வேனிற்காலங்களின் இளவரசியும் 
மூழ்கிப் போனாள்.



புகைப்படம்: அமேலியா ரோட்ரிகஸ் போர்த்துகீசிய ஃபேதோ பாடகி

குரல்களின் அலைக்கழிப்பு - வவெதொஅவெகு

$
0
0
   ழுத ஒன்றுமேயில்லாத நாட்கள் இவை. நெருக்கடிகளும் சவால்களும் மன அயற்சியும்தான் படைப்பூக்கத்திற்கு மிக நெருக்கமானதாக இருக்குமோ என்னவோ. அப்படி எதுவுமே இல்லாத மனநிலையில் எழுத்தின் மீது பூனை சுருண்டு படுத்துக் கொள்கிறது. தூங்கும் பூனையைப் பார்த்தபடி பூனையை விஞ்சும் பெரிய கொட்டாவியோடு, அசட்டையாய் நகர்ந்து போய் கொண்டிருக்கிறேன். கேங்க்ஸ் ஆஃப் வாசிபூர் பாகம் இரண்டைப் பார்த்துவிட்டு எழுதிக் கொண்டிருந்தேன். பின்பு யாருக்காக/எதற்காக இதை எழுதுகிறோம்? என்ற கேள்வி எழுந்தது. எப்போதோ இந்த சிக்கலை இங்கு பதிவு செய்துமிருக்கிறேன் ( இவரு பெர்ஸா ஒல்க படம் பார்த்து கிழிப்பாராம் அதை வெலாவரியா எழுதுவாராம் அதுனால இவர பெரிய அறிவு சீவின்னு ஒலகம் நம்புமாம் போடாங்க்..) இப்படி ஒரு குரலை அசட்டை செய்துவிட்டுத்தான் சமூக வலைத்தளங்களில் சினிமா பற்றியே தொடர்ந்து வாய் வலிக்கப் பேசிக் கொண்டிருக்கிறேன். இனிமேல் அதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். டோனி காட்லிஃப் போன்ற பரவலாய் அறியப்படாத மேதைகளைக் குறித்து மட்டுமே குறிப்புகளாக எழுதி வைக்க உத்தேசம்.

தவிர தமிழ் இணையப் பரப்பில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது சலிப்பாகவும் இருக்கிறது. எல்லா மூஞ்சும் தெரிஞ்ச மூஞ்சாகவே இருப்பதன் எரிச்சல் அது. துரதிர்ஷ்டவசமாக புதிய மூஞ்சுகளோடு உரையாடலே நிகழவில்லை. பிஞ்சு மூஞ்சுகள், முத்துன மூஞ்சு என ஓரங்கட்டி விடுகின்றனவோ? என்கிற அச்சம் கூட அவ்வப்போது எழுகிறது. இதன் நீட்சியாய் ட்விட்டரில் போய் குத்த வச்சு உட்கார்ந்து புது மூஞ்சுகளோடு மொக்கை போட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த எல்லா இணைய சலம்பல்களும் அலுவலகத்தில் புழங்கும் எட்டு மணி நேரம் மட்டும்தான். வீட்டை நெருங்கிவிட்டால் இணையம் அந்நியம்தான். குழந்தைகளின் மிகத் தூய்மையான உலகத்திற்குள் எந்த நெருக்கடிகளுமில்லாமல் தொலைந்து போய்விட முடிகிறது. குட்டிப் பயல்களின் வீரதீர சாகஸங்களை, ஆச்சரியங்களை, அற்புதங்களைப் பற்றி எழுதச் சொல்லித் தினம் கேட்டுக் கொண்டிருக்கிறாள். ஏற்கனவே குமாஸ்தா மனநிலை பீடித்திருக்கும் என்னை, முழுமுதற் குமாஸ்தாவாய் மாற்றிவிடும் செயல் அது என்பதால் தொடர்ந்து மறுத்து வருகிறேன். பயல்களின் உலகை மனம் ததும்பத் ததும்ப மிகை உணர்ச்சியில் எழுத என்னவோ போல் இருக்கிறது. என் சொந்த அனுபவங்களை புனைவுகளின் வழியாகக் கடத்துவதையே விரும்புகிறேன்.

திடீரென யோசித்துப் பார்த்தால் மனிதர்களோடு பழகுவதையே நான் நிறுத்திவிட்டிருப்பதைப் போன்ற தோற்றம் எழுகிறது. அலுவலகம் – வீடு - குடும்பம் என உலகம் மிகவும் சுருங்கிப் போயிற்று. ஆனால் இந்த சுருக்கத்தின் மீது எனக்கு ஒரு பிராதும் கிடையாது. ஏராளமான மனிதர்களோடு, நட்புகள் புடைசூழ வாழ்ந்த காலங்கள் பிற்காலத்தில் மனநெருக்கடிகளையும் குரோதங்களையுமே பரிசாகத் தந்தன. யாரையுமே எவ்விதத்திலும் தொந்தரவு செய்யாத இந்நாட்கள் சலனமில்லாமல் படுவேகமாகக் கடந்து போவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

0

அயல் வாழ்வின் எல்லா வசதிகளையும் முழுமையாய் அனுபவித்துக் கொண்டே ஊருக்குப் போய் உட்கார்ந்து கொள்ளத் துடிக்கும் மனநிலைதான் எப்போதுமிருக்கிறது. ஆறு வருடங்களுக்கு முன்பு என் வளைகுடா ‘டார்கெட்’ சில வருடங்களும் சில லட்சங்களும் மட்டும்தான். ஆனால் இன்று நகர்ந்திருக்கும் எல்லையை சற்று அச்சத்தோடுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த அலிபாபாக் குகையிலிருந்து வெளியேறவே முடியாதோ? என்றும் கூட சில நேரங்களில் நினைத்துக் கொள்கிறேன். “இப்ப அடிச்சிப் பிடிச்சி போகிற அளவுக்கு என்ன வந்தது? இந்தளவுக்கு சொகுசான வேலைய எங்கியாவது எதிர்பாக்கமுடியுமா?” என்பதுதான் நான் உள்ளிட்ட எல்லோரின் கேள்வியும். ஆம் இப்போது என்னதான் வந்தது?

சமகாலத்தின் so called உச்சங்களில், பொருட்களால் நிறைந்த புறவுலகில் முழுமையாய் கரைந்து போகமுடியாதுதான் என் பிரச்சினை. இதையெல்லாமும் தாண்டிய களிப்பு எங்கோ, எதிலோ இருக்கிறது என்பதுதான் என் கற்பிதம். எப்போதும் ஒரு அழைப்புக்குரல் கேட்டபடியே இருப்பதாக உணர்கிறேன். இதெல்லாம் 'சும்மாடா' என எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். கேட்டுக் கொண்டிருக்கும் பாடல்களின் சப்தத்தைக் கூட்டிவிடுகிறேன். அதுவும் உதவவில்லையெனில் பாரதிராஜா படங்களில் வரும் கதாநாயகிகளுக்கு எப்போதும் கேட்டபடியிருக்கும் கடல் அலை சப்தத்தோடு என்னுடைய அழைப்புக் கற்பிதத்தையும் ஒப்பிட்டு பார்த்து சப்தமாய் சிரித்துவிடுகிறேன்.

0

நீதானே என் பொன்வசந்தம் பாடல்களை திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். சமீபமாய் எனக்கு மிகவும் பிடித்துப் போன ஆல்பம். எல்லாப்பாடல்களுமே பிடித்திருந்தாலும் ரம்யாவின் குரலில் வரும் சற்று முன்பு பாடல் அடித்துப் போடுகிறது. இந்தக் குரலையும் அதில் வழியும் உணர்ச்சிப் பெருக்கையும் கேட்கும்போது போர்ச்சுகலின் நாடோடி இசைப்பாடல் வடிவமான fado நினைவிற்கு வருகிறது. Fado என்றால் destiny என அர்த்தம். ஐரோப்பாவில் fado இசை வடிவம் மிகப் பிரபலமானது. அமேலியா ரோட்ரிகஸ் என்ற பாடகி இந்த fado பாடல்களின் ராணி. இவரின் குரலில் சில பாடல்களை யூடியூபில் கேட்டுப் பாருங்கள் மிகவும் உணர்ச்சிப் பெருக்கான அனுபவம் வாய்க்கும்.

அமேலியாவின் குரலும் எனக்கு மட்டும் ரகசியமாய் கேட்கும் அழைப்புக் குரலும் ஒரே மாதிரி இருப்பதை சமீபமாய் உணர்கிறேன்.ஆகவே இந்த மொக்கைப் பத்திக்கு குரல்களின் அலைக்கழிப்பு என இலக்கியத் தரமாய் பெயர் வைக்கிறேன்.

குள நடை

$
0
0
நான் வசிக்கும் பகுதியில் ஒரு பூங்கா இருக்கிறது. நல்ல விஸ்தாரமான பூங்கா. ஏராளமான மரங்கள், பரந்த புல்வெளி, குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல் அத்துடன் இரண்டு கி.மீ சுற்றளவு கொண்ட ஒரு பெரிய குளம் ஒன்றும் உண்டு. நடப்பதற்கு தோதாய் குளத்தைச் சுற்றி இரப்பர் பூசிய நடைபாதை அமைத்திருக்கிறார்கள். நடை பாதை வழியெங்கும் அடர்ந்த செடிகொடிகளும், மரங்களும், ஏராளமான பறவைகளும், குறிப்பாய் சிட்டுக்குருவிகளின் கீச்சுச் சிறகடிப்புகளும் உடன் வரும். நடப்பதற்கோ அல்லது இளைப்பாறுவதற்கோ மிகச் சிறந்த இடம். கடந்த ஒரு வருடமாய் வார இறுதி நாட்களில் பயல்களை அழைத்துக் கொண்டு போய்வரும் இடம்தான் என்றாலும் ஒரு முறை கூட நடக்கப் போனதில்லை. ஒவ்வொருமுறையும் பூங்காவிலிருந்து திரும்பும்போது நாளையிலிருந்து நடக்க ஆரம்பிக்கவேண்டும் என நினைத்துக் கொள்வதோடு முடிந்து போய் விடும். ஆனால் சமீபமாய் வழக்கத்தைப் பொய்யாக்கிவிட்டு நடக்க ஆரம்பித்திருக்கிறேன்.

செய்ய ஒன்றுமே இல்லாமல் ஒரு நாளை வைத்துக் கொள்வதில் முனைப்பாக இருக்கும் என்னுடைய இயல்பும், மனைவியின் இண்டர்நெட் சமையலறிவும் சேர்ந்து என்னுடலைப் பதம் பார்த்திருக்கின்றன. புளிமூட்டை அல்லது அரிசிமூட்டை கணக்காய் உடல் பெருத்திருக்கிறது. சிறிய இடைவெளிக்குப் பிறகு பார்க்கும் மனிதர்கள் என்னை அடையாளம் கண்டறிய முடியாது திகைப்பதைப் பார்த்து நானும் அவர்களோடே திகைப்பேன். அலுவலகத்தில் நடக்கும் உடல்நல முகாம்களில் வெள்ளைக் கோட்டணிந்த லெபனீஸ் பெண்கள் வயிறைத் தட்டிக் காட்டி சைகையால் குறைத்தே ஆகவேண்டும் என்பார்கள். புன்னகைத்து வைப்பேன். ஆனால் சமீபமாய் நடந்த ஒரு சம்பவம்தான் உடனடியாய் நடக்க தூண்டுதலாக அமைந்தது.

வழக்கமான ஒரு உடல்நல முகாம். அதே வழக்கமான லெக்சர்கள். பிபி, கொலஸ்ட்ரால் சோதனைகள். எல்லாம் முடிந்து ஒருவர் சொன்னார் உங்களின் Metabolic age 45. சற்றுக் கடுப்புடன் என்ன! இதையெல்லாம் எப்படிக் கண்டுபிடிக்கிறீர்கள் எனக் கேட்டேன். உங்களின் மிகச்சரியான எடை அறுபது கிலோதான் பதினைந்து கிலோ அதிகமாக இருக்கிறீர்கள் என்றார். கோபப்பட்டு உடனடியாய் முகாமை விட்டு வெளியேறினேன். மாலை க்ரீன் டீ டப்பாக்கள், கொள்ளு சகிதமாய் வீட்டிற்கு போய் மனைவியிடம் என் வயது நாற்பத்தைந்து என்றேன். அடுத்த நாள் காலை காபிக்கு பதிலாய் ஊறவைத்துக் கொதிக்க வைத்த கொள்ளு நீரைத் தந்தாள். அதற்கடுத்த நாள் மாலை நடக்க ஆரம்பித்து விட்டேன்.

உற்சாகமாத்தான் இருக்கிறது. அவ்வப்போது வாங்கும் எலெக்ட்ரானிக் வஸ்துக்களை பயல்களே ‘இரு’ கை பார்த்துவிடுவதால் பாட்டுக் கேட்டு நடக்கும் பெரும்பான்மைகளின் கும்பலில் தனித்துத் தெரிகிறேன். தொடர்புக்கு ஒரு சாம்சங் போன் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கிறது ஆனாலும் அதைப் பேசுவதற்கு மட்டும்தான் பயன்படுத்த முடிகிறது. இயற்கையின் இசையை விட வாத்தியங்களின் இசை பெரிதா என்ன? குளிர்காலம் துவங்கிவிட்டதால் ஏராளமான பறவைகள் வர ஆரம்பித்துவிட்டன. நடக்கும்போது உடன் வரும் பறவைகளின் கீச்சுக் குரல்களுக்கு நிகரேது? மிக ரம்மியம். மாதத்திற்கு மூன்று கிலோ குறைப்பதுதான் இப்போதைய இலக்கு. பத்து நாள் நடந்துவிட்டு பதினோராம் நாள் சுத்த போர்,டைம் வேஸ்ட், இப்ப குண்டா இருந்தா என்ன? என்றெல்லாம் கிளம்பாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

பன்னீர்ப் பூ

$
0
0

டி சப்தம் கேட்டு அதிர்ந்து விழித்தேன். அவள் மதியம் அணிந்திருந்த இளஞ்சிவப்புக் கரை வைத்த கருப்பு நிறக் காட்டன் புடவை என்னுடலைச் சுற்றியிருந்தது. கருப்பு இன்ஸ்கர்ட்டோடு எனக்காய் முதுகு காட்டித் தூங்கிக் கொண்டிருந்தாள். படுத்தவாக்கில் நகர்ந்து இடுப்பில் கை போட்டு இறுக அணைத்து கழுத்து இடைவெளியில் முகம் புதைத்து மீண்டும் கண்களை மூடிக் கொண்டேன். விழித்துக் கொண்டாள் போல. பதறி எழுந்து “ஏய் டைம் என்ன ஆச்சு?” என்றாள். தெரியவில்லை. மதியம் ஒரு மணிக்கு அறைக்குள் வந்தோம். வரும்போதே தூறல் பெரிதாகியிருந்தது. ஈரத் தலையோடு உள்ளே வந்தோம். துடைத்துக் கொள் என துண்டைக் கொடுக்கும்போது மழை சப்தம் அதிகமானதைக் கேட்டுக் கண்ணடித்தாள். "செம்ம சுச்சுவேசண்டா" என்றவளை அதற்குமேல் பேசவிடவில்லை.

 என்னை உலுக்கி எழுப்பினாள். போலாம்....போலாம்...போலாம்... என மூச்சுவிடாது நச்சரித்தவளை திட்டிய படியே எழுந்து புடவையை உடலிலிருந்து பிரித்துக் கொடுத்தேன். கண்ணை மூடியபடி அவள் புடவைக்காக கைநீட்டிய காட்சியை சிறிது நேரம் நீட்டித்தேன். சிணுங்கி மேலே பாய்ந்து புடவையைப் பிடுங்கிக் கொண்டு அறையோடு ஒட்டியிருந்த குளியலறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டாள். எழுந்து கிளம்பினேன். மாலை ஐந்துமணி ஆகியிருந்தது. குளிருக்கு உடல் மெல்ல நடுங்கியது. சன்னல் கதவைத் திறந்து பார்த்தேன். மழை விட்டிருந்தது. சன்னலை ஒட்டியிருந்த மாமரம் கனத்த மெளனத்திலிருப்பதைப் போல் பட்டது. பத்து நிமிடம் கழித்து கதவைத் திறந்துகொண்டு வேறொரு பெண்ணாய் வெளியில் வந்தாள். இளஞ்சிவப்பு நிற ஜாக்கெட்டும் கருப்புக் காட்டன் புடவையுமாய் அவளைப் பார்க்க எப்போதோ விரும்பியிருந்தேன். ஏதோ ஒரு சினிமா படத்தில் கதாநாயகி அணிந்திருந்த உடை. பார்த்தவுடன் பிடித்துப் போய் இவளிடம் சொன்னேன். இன்றைக்காய் எடுத்து வைத்திருந்தாள் போல.

 போலாம்பா என அருகில் வந்தவளை மெதுவாய் அணைத்துக் கொண்டேன். சொன்னா கேள்.. போலாம் வா.. டைமாச்சி.. என திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்ததை நிறுத்த அவளின் உதடுகளை சோம்பலாய் கவ்விக் கொண்டேன். சற்றுத் திமிறி என்னைப் பலவந்தமாய் விலக்கி தன் உதடுகளை உள்ளங் கையால் திரும்பத் திரும்ப அழுந்த துடைத்துக் கொண்டாள். அப்படித் துடைக்கும்போது அவள் நெற்றி சுருங்கியிருக்கும். அசூசையுமல்லாத கோபமுமல்லாத ஒரு விநோத முக பாவணை வெளிப்படும். எனக்கு இது ஒரு விளையாட்டாய் இருந்தது. அவள் ஒவ்வொரு உதட்டு முத்தத்திற்கும் இப்படி ஆவாள் என்பதுதான் இன்னும் சுவாரசியம்.

 ப்ளீஸ் போலாம் என்றாள். பெருமூச்சு விட்டபடி அறைக்கதவைத் திறந்தேன். வெளியேறினோம்.

தெருவில் மழை நீர் சிறுசிறு குளங்களை உருவாக்கிவிட்டிருந்தது. ஏழு மணிக்கான இருள் சூழ்ந்திருந்தது. கரு மேகங்கள் உடையும் தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தன. அவளின் விரல் பிடித்தேன்.

 “விடு இதென்ன ரோட்ல?”
 .....

 “நீ ஏன் வர? நான் போய்க்கிறனே”

 பதில் சொல்லவில்லை. பிரதான சாலைக்கு வந்தோம். மழையில் எல்லா சிறுநகரங்களும் ஒன்று போலவே காட்சியளிக்கின்றன.

 “டீ குடிக்கலாமா”

 “வேணாம்டா டைம் ஆகிருச்சி”

 “அப்ப பஸ் ஸ்டாண்ட் உள்ள போக வேணாம் இங்கயே நிப்போம்”

திருத்தணியிலிருந்து வரும் பேருந்து நின்றது. ஏறிக் கொண்டோம். கூட்டம் இல்லை. முன் வரிசை சீட்டுகள் தவிர்த்துப் பின்னிருக்கைகள் காலியாகக் கிடந்தன. மொத்தப் பேருந்தே நனைந்து நடுங்கிக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது. சன்னல்கள் அடைக்கப்பட்டு மெல்லிருளாய் கிடந்தது. இடப்புறம் இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்தோம். சன்னலை மேலேற்றினாள். ஈரக் காற்று முகத்தை விசிறியது. திருவள்ளூர் ரயில்வே பாலத்தைக் கடந்தவுடன் மீண்டும் மழை பிடித்துக் கொண்டது. முகமும் ஆடைகளும் நனையத் துவங்கியதும் சன்னலை மூடினாள். எனக்கு மழையைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. சொல்லவில்லை.

 என் வலக்கை விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்துக் கொண்டு இறுக்கினாள். குளிர்தில்ல என சிரித்தாள். நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். மழையில் அவளின் கேசம் நெற்றி தோள் எல்லாம் நனைந்திருந்தன.

 “ஈரமான பூ போல இருக்க நீ” என்றேன்.

 “என்ன பூ? ரோஜாவா? இல்ல உனக்கு பன்னீர்பூ தான பிடிக்கும் ஈரப்பன்னீர் பூவா நானு?”

 “இல்லடி நீ பன்னிப்பூ”

என்றதும் வெடித்துச் சிரித்தாள்.

“நான் பன்னி சரி ஆனா நீ எரும. ஹப்பா! என்ன வெயிட்டு”

 நடத்துனர் அருகில் வந்ததும் அவசரமாய் கைப்பை திறந்து பணமெடுத்து நீட்டி ஒரு ஐயப்பன்தாங்கல், ஒரு அசோக் பில்லர் என்றாள். டிக்கெட்டை வாங்கி என் சட்டைப் பையில் திணித்தாள். உனக்கு நான் பன்ற கடைசி செலவு. டிக்கட்ட பத்ரமா வச்சிக்க என்றாள். அவள் கண்களை ஆழமாய் பார்த்தேன். நான் பார்ப்பதை உணர்ந்து கண்களை இன்னும் விரித்தாள்.  “நல்லா பாரு. இனிமே உன் பார்வைக்கெல்லாம் மயங்கமாட்டேன்” என்றாள். பின்னால் திரும்பி யாரும் பார்க்கவில்லையென உறுதிபடுத்திக் கொண்டு அவள் உதட்டைக் கவ்வி இழுத்தேன். என் மார்பைப் பிடித்துத் தள்ளி விடுவித்துக் கொண்டு உள்ளங்கையால் உதட்டைத் திரும்பத் திரும்ப அழுந்த துடைக்க ஆரம்பித்தாள். நான் சிரித்தேன்.

 “உன் ஃப்ர்ஸ்ட் நைட்லயும் இப்படித் தான் பண்ணியா?.. “

 “எப்படி?.. “

 உதட்டைத் துடைத்து துடைத்துக் காண்பித்தேன்.

 “அவன் உன்ன மாதிரி கவிஞன்லாம் கிடையாதே. டைரக்ட் மேட்டர்தான். அன்னிக்கு அவசர அவசரமா முடிஞ்சதும் அவசர அவசரமா எழுந்து போய் கப் கப் னு சிகரெட் புடிச்சான். எனக்கு சிரிப்புதான் வந்தது..”

 “அப்ப சிரிச்சயா? “

 “இல்ல ஆனா அதுக்கப்புறம் ஃபர்ஸ்ட் நைட்ட நினைச்சி நிறைய நாள் சிரிச்சேன். “

 “இப்ப சிரிப்பு வருதா”

 “இல்ல” ..

இரண்டு நிமிடம் அநிச்சையாய் மெளனத்திற்குப் போய் மீண்டோம்.

 மீண்டும் என் விரல்களைக் கோர்த்துக் கொண்டாள்.

 “நைட்டு என்னடா பசங்களோட சரக்கடிக்க போறியா?”

 “தெரில. அடிப்பேன்னுதான் நினைக்கிறேன்.” 

“ஓ சோகத்துல இருக்கியோ?”

 “இல்லயே ரொம்ப சந்தோசமா இருக்கேன்” என வெறுப்பாய் சொன்னேன். 

முதுகிற்குப் பின்னால் கைவிட்டு என்னுடலை அவளுக்காய் இழுத்து இறுக்கிக் கொண்டாள்.

 “சாரி கேக்கணுமா உங்கிட்ட”

 “இல்லடி ஆனா என்ன விட்டு போய்டாத ப்ளீஸ்”

 “ஐயோ இத நீ லட்சம் முற சொல்லிட்டே நானும் லட்சத்தி ஒரு முற விளக்கம் சொல்லிட்டேன். மறுபடியும் ஆரம்பிக்காத ப்ளீஸ்.” 

மெளனமானோம்.

 மழையின் வேகம் சீராய் அதிகரிக்கத் துவங்கியது. சாலையில் ஓடிய நீரைக் கிழித்துக் கொண்டு பேருந்து விரைந்தது. பூந்தமல்லி வந்ததே தெரியவில்லை விசில் சப்தத்தோடு ஐயப்பன் தாங்கல் என்றார் நடத்துனர். இருவரும் அமைதியாக உட்கார்ந்திருந்தோம்.அதுக்குள்ளவா வந்திருச்சி என்றாள். நான் எதுவும் பேசவில்லை. சற்று நேரம் நின்றுவிட்டு பேருந்து கிளம்பியது மீண்டும் தன் கையை முதுகிற்குப் பின் துழாவி என்னை இழுத்து இறுக்கிக் கொண்டாள்.

 நகரம் வெள்ளக் காடாகியிருந்தது. போரூரிலிருந்து பேருந்து ஊர்ந்துதான் போய் கொண்டிருந்தது. நாங்கள் மெளனத்திலிருந்து மீளவே இல்லை. மழையை, பைத்தியம் பிடித்த வாகன நெரிசலை சோடியம் விளக்குகளின் மங்கல் ஒளியோடு பார்த்தபடி ஊர்ந்து கொண்டிருந்தோம். கத்திப்பாரா விற்கு ஒரு கிமீ முன்பே வண்டி சுத்தமாய் நின்றுவிட்டது. இறங்கலாம் என எழுந்து கொண்டாள். இறங்கினோம்.

ஆட்டோ, பேருந்து என சகல வாகனங்களும் பெருங்குரலில் கத்திக் கொண்டிருந்தன. பேருந்து வந்த வழியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். நேரம் ஒன்பது மணியை நெருங்கியிருந்தது.

 “ரொம்ப டைமாயிருச்சா”

 “இல்லபா பரவால்ல”

 நடக்க நடக்க நெரிசல் குறைந்து கொண்டே வந்தது. எதுவுமே பேசத் தோன்றவில்லை. எல்லாம் தீர்ந்த வெளியில் நடந்து கொண்டிருந்தோம். என் விரல்களைக் கோர்த்துக் கொண்டாள். இது ரோடாச்சே என்றேன். புன்னகைத்து இன்னும் இறுக்கிக் கொண்டாள். சாலையில் வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. எங்களுக்கு சமீபமாய் ஒரு ஆட்டோ வந்து நின்றது. ஐயப்பன் தாங்கல்? என்றோம். ஓட்டுனர் தலையசைத்தார். ஆட்டோவில் அமர்ந்து மீண்டும் விரல்களைக் கோர்த்துக் கொண்டாள்.

மழை சுத்தமாய் நின்று போயிருந்தது. அடுத்த அரைமணிநேரப் பயணம். ஐயப்பன் தாங்கல் வந்துவிட்டது. அந்த பஸ் ஸ்டாப் தாண்டி நிறுத்துங்க என ஓட்டுனருக்காய் குனிந்து சொன்னாள். எனக்காய் நன்கு திரும்பி கடைசியா எனக்கொரு முத்தம் கொடு என்றாள். எனக்குள் அதுவரை அடங்கிக் கிடந்த ஏதோ ஒன்று உடைந்து சப்தமாய் அழுகையாய் வெளியேறியது. ஓட்டுனர் திகைத்து சப்தமெழ வண்டியை நிறுத்தினார். முகத்தை மூடிக் கொண்டு அழுத என்னை இழுத்து அணைத்துக் கொண்டாள். நெற்றியிலும் கன்னத்திலும் உதட்டிலுமாய் மாறி மாறி முத்தமிட்டாள். பின்பு மெல்ல தன்னை விலக்கிக் கொண்டு ஆட்டோவிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

 0

Pulp எழுத்தாளரின் இலக்கிய காதலும் இலக்கிய எழுத்தாளரின் Pulp காதலும்

$
0
0
1.

தலைப்பேதான். இந்த வருடத்தின் துவக்கத்திலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் குறுநாவல். இடையில் ஏகப்பட்ட தடங்கல். ஒரே மனிதன் பல்வேறு சுமைகளை சுமக்க வேண்டியிருப்பதன் துர்பலன் தாமதம்தான். அதை விடுங்கள். பிரச்சினைக்கு வருகிறேன். இந்த நாவல் தாமதமாகிக் கொண்டே போவதன் உண்மையான காரணம் இந்நாவலில் வரும் பெண் எழுத்தாளரின் நாவலை என்னால் எழுத முடியவில்லை என்பதுதான். பெண் எழுத்தாளர் எழுதும் நாவலை ஆணாகிய நான் எப்படி எழுத முடியும்? எழுதி எழுதிப் பார்த்தும் பெண் மொழி சித்திக்கவேயில்லை. பெண் எழுத்தாளர் என்ன எழுதவேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதாவது அந்த நாவல் என்ன என்பது எனக்குத் தெரியும். ஆனால் எழுதும் மொழிதான் சரிப்படவில்லை. இதே நாவலில் ஆண் எழுத்தாளர் எழுதும் நாவல்களையெல்லாம் நானே எழுதிவிட்டேன். அவர் எழுதுவது pulp என்றாலும் கூட இலக்கிய எழுத்தாளனான என்னால் சற்று சிரமப்பட்டு அவற்றை எழுதிவிடமுடிந்தது. ஆனால் இலக்கிய வகைமையிலே எழுதும் இலக்கிய எழுத்தாளரான பெண் எழுதுவதை என்னால் எழுத முடியவில்லை. என் பிரச்சினையை உங்களுக்கு புரியும்படி சொன்னேனா? புரியவில்லையெனில் தயவுசெய்து சொல்லாததையும் புரிந்துகொள்ளுங்கள். இது எவ்வளவு பெரிய சிக்கல் என்பதை இன்னொருவர் புரிந்துகொள்ளாதவரை எனக்கு மாபெரும் சிக்கல்தாம்.

சுத்தமாய் எழுதவே வராமல் போன ஒரு பகலில் என் நெடுநாள் ஸ்நேகிதியைத் தேடிக் கொண்டு அவள் வீட்டிற்குப் போனேன். கண்கள் விரிய வரவேற்றவள் வரவேற்பரையில் அமரச் சொன்னாள். அவள் வீட்டு படுக்கையறை தவிர்த்து நான் எங்குமே அமர்ந்தது கிடையாது. ஒரு கட்டத்தில் அவள் என்னைப் படுக்கையறைக்குள் அனுமதிப்பதை நிறுத்தியவுடன் அவள் வீட்டிற்கு செல்வதையும், அவளைச் சந்திப்பதையும் நிறுத்திவிட்டேன். அமராமல் நின்று கொண்டே என் பிரச்சினையைச் சொன்னேன். சற்றுக் குழம்பினாள். யோசித்தாள். பின்பு சொன்னாள்.

 "உன் நாவலை நீ எழுது!"

அவளுக்கு சிறுபத்திரிக்கை வாசிப்பு உண்டு. இரண்டு மூன்று நல்ல கதைகளையும் எழுதியிருக்கிறாள்.அவையெல்லாமும் அவ்வார்த்தைகளுக்குப் பின்பிருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

"மொக்க போடாதே கதைய நான் சொல்றேன் நீ எழுத மட்டும் செய்" என்றேன். மாட்டேன் என்றாள். "நீ எழுத மறுப்பதற்கு நல்லதா ஒரே ஒரு காரணம் சொல் நான் போய்டுறேன்" என்றேன்.  உனக்கும் எனக்கும் ஏதோ இருப்பதாக ஏற்கனவே இங்கு கிசுகிசு ஓடிக் கொண்டிருக்கிறது. போதாததிற்கு ஒரே நாவலை சேர்ந்து எழுதினால் போச்சு. வெறும் வாய்களுக்கு அவல் கிடைத்தது போலாகும் என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அட! உன்னையும் என்னையும் வைத்து கிசுகிசுக்க வெல்லாம் செய்கிறார்களா? குஜாலாக இருக்கிறதே. இதற்காகவே அவசியம் இந்நாவலை நாம் இருவரும் சேர்ந்து தான் எழுத வேண்டும் என மகிழ்ச்சியில் கத்தினேன். அவள் முறைத்துக் கொண்டே சொன்னாள். உன்னை யாரும் வேசையன் என வசைய மாட்டார்கள்.  ஆனால் என்னை வேசி என்பார்களே. நான் சற்று யோசித்தேன். அவள் சொல்வதும் சரியெனப் பட்டது. யாருமே சீந்தாத மொழியில் எழுத்தாளராக இருப்பதன் துயரங்களின் தொடர்ச்சிதாம் இவையெல்லாமும் என்பதும் புரிந்தது. திரும்ப வந்துவிட்டேன். வரும் வழியில் எங்களைப் பற்றி யாரெல்லாம் கிசுகிசுத்திருப்பார்கள் என யோசித்துப் பார்த்தேன். என் எதிரிகள் ஒவ்வொருவராய் நினைவில் வந்தார்கள். நிச்சயம் எல்லோரும் வயிறெறிந்திருப்பார்கள். சந்தோஷமாக இருந்தது. என் எதிரிகள் ஒவ்வொருவரின் முகத்தையும் பதம் பார்க்க விருப்பம்தான் என்றாலும் திருப்பி அடித்துவிடுவார்களே என்ற பயம்தான் அதை தடுத்து வைத்திருக்கிறது. மாறாய் இம்மாதிரி வகையில் அவர்களை எரிச்சலூட்டுவது எனக்குப் பிடித்திருக்கிறது.

அதற்கடுத்த நாள் என்னுடைய இன்னொரு ஸ்நேகிதியைத் தேடி பக்கத்து நகருக்குப் போனேன். நாங்கள் எப்போதுமே பொதுவிடத்தில்தான் சந்தித்துக் கொள்வோம். என்னுடைய ஒரே வாசக நண்பி. எங்களுக்குள் தூய்மையான நட்பு இருந்தது. சந்தர்ப்பம் கிடைத்துமா? என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. ஏனெனில் இதுவரைக்குமே அவள் சந்தர்ப்பத்தை உருவாக்கித் தரவில்லை. எனக்கு சந்தர்ப்பத்தைத் துய்த்துத்தான் வழக்கம். உருவாக்கத் துப்பு கிடையாது. நன்றாக எழுதுவாள். இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறாள். அவளிடம் இந்நாவல் பிரச்சினையைச் சொன்னேன். நாவலின் களம் என்ன? எனக் கேட்டாள். "லெஸ்பியன்" என்றேன். ஒரு டீ கடையில் அமர்ந்துதான் பேசிக் கொண்டிருந்தோம். அவள் எதுவும் பேசாமல் எழுந்துபோய் டீ போடுபவரிடம். "அண்ணே அந்த க்ளாசில சுட்தண்ணி புடிங்க" என்றாள். அவரும் கொதிக்க கொதிக்க சுடுநீரை க்ளாசில் பிடித்துக் கொடுத்தார். என்னிடம் வந்தவள். "மூஞ்சிலயே ஊத்திருவேன் ஓடிடு" என்றாள். எனக்கு திக் கென்றாகிவிட்டது. எதுவும் பேசாமல் திரும்ப வந்துவிட்டேன்.

ஒருவேளை நாவலின் களத்தை அவளிடம் சொல்லியிருக்க கூடாதோ? கேடுகெட்ட இந்த தமிழ்மொழியில், தமிழ்சூழலில், இப்படி ஒரு நாவலை நான் அவசியம் எழுதத்தான் வேண்டுமா என யோசிக்க யோசிக்க ஆத்திரமாய் வந்தது. சிலர் இணையத்தில் நன்றாக எழுதுகிறார்கள். அவர்களிடம் கேட்டுப் பார்க்கலாமா? என்கிற யோசனை எழுந்தது. ஆனால் எதையோ கேட்கப் போய் எசகுபிசகாக எதையாவது புரிந்துகொண்டு குச்சியை கையிலேயே பிடித்துக் கொண்டு ஆன்லைனில் நிற்கும் போலிஸ்காரர்களிடம் கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டால்? அய்யோ நினைக்கவே திகிலாக இருந்தது. அந்த நினைப்பை அப்போதே கைகழுவினேன்.

எதுவுமே பிடிக்காமல் விட்டேத்தியாய் சில நாட்கள் சுற்றிக் கொண்டு திரிந்தேன். என் பழைய நண்பன் ஒருவன் என்னைப் பார்க்க வந்திருந்தான். கூடவே என்னுடைய மிகப் பழைய நண்பனான ஜானியை ஒரு அட்டைப் பெட்டியில் போட்டுக் கொண்டு வந்திருந்தான். நண்பா இந்தா உனக்கு என் பரிசு என ஆதூரமாய் கட்டித் தழுவித் தந்தான். மகிழ்ச்சியாய் வாங்கிக் கொண்டேன். இப்போது என்ன செய்கிறாய் எனக் கேட்டான். ஒரு நாவல் எழுதிக் கொண்டிருப்பதாய் சொன்னேன். தலைப்பு? Pulp எழுத்தாளரின் இலக்கிய காதலும் இலக்கிய எழுத்தாளரின் pulp காதலும். ஒண்ணும் புரியலையே என்றவனிடம் சொன்னேன். எனக்கும் ஒண்ணும் புரியல. எழுதி முடிச்சிட்ட பிறகாவது புரியுதாண்ணு பார்ப்போம். அவன் முறைத்துவிட்டு எழுந்து போய்விட்டான். நான் அட்டைப் பெட்டியைத் திறந்து பார்த்தேன். ஒரு லிட்டர் சிவப்பு லேபிள் புட்டி.. எடுத்து வெளியில் வைத்தேன். வழக்கமாய் உள்ளே ஜானி அமர்ந்திருப்பான். ஆனால் புட்டிக்குள் சிவப்பு நிறத்தில் ஒரு பெண் அமர்ந்துகொண்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். உற்சாகமாய் இருந்தது அட இதற்குள் நீ எப்படி வந்தாய் எனக் கேட்டேன். தெரியலபா ஆனா உன் பெண் நாவலை எழுதப்போறது நான் தான் என்றாள். அவளை ஆரத் தழுவிக் கொண்டேன்.

மேலும்

அத்தியாயம் இரண்டு.

$
0
0

“இன்னிக்கு காலைல முகூர்த்த நேரத்துக்கு கொஞ்சம் முன்னாடி ஓடிப் போகலாம்னு இருந்தேன்”

அறையின் நீல மங்கல் வெளிச்சத்தில் அவள் முகம் இறுகியது லேசாகத் தெரிந்தது.

நான் அதிர்ச்சியை வெளிக் காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாய் கேட்டேன்

 “ஏன் இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பமில்லையா?”

மல்லிகைப்பூவின் அடர் வாசமும் புதுத் துணிகளின் நறுமணமும்அந்தக் குறுகிய அறையை நிறைத்திருந்தன. அடைத்தபடி போடப்பட்டிருந்த கட்டிலின் ஒரு முனையில் நானும் மறுமுனையில் இன்று காலை மனைவியான அவளும் அமர்ந்திருந்தோம்.

“நான் இன்னொருத்தர காதலிச்சேன் “  தலை நிமிராமல் இறுகிய அதே குரலில் சொன்னாள்.

எனக்கு வயிற்றில் அமிலம் சுரந்தது.

“பெண் பார்க்க வந்தப்பவே சொல்லி இருக்கலாமே? பிடிச்சிருக்கா பிடிச்சிருக்கான்னு ஆயிரம் முற கேட்டனே? நீயும் பல்ல பல்ல காமிச்சியே”

என் குரல் ஆற்றாமையால் உயர்ந்திருந்தது

“சொல்லமுடியாத சூழ்நிலை”

 ஐந்து நிமிடம் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மின் விசிறியின் சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அமைதியை உடைத்தேன்.

 “சரி ஏன் காலைல ஓடிப்போகல? “

“அந்த கடைசி நிமிஷ தைரியம் எனக்கு இல்லாமப் போய்டுச்சி... தவிர நேத்தில இருந்து கேட்டுட்டே இருந்த உங்க சந்தோஷமான சிரிப்பு.., கல்யாணத்துக்கு வந்திருந்த வி.ஐபி ங்க.. , உங்களுக்கு இருக்க பேர்..., கூடியிருக்க சொந்தக்காரங்க முகங்கள் எல்லாம் சேர்ந்து என்னப் போக விடாம செய்ஞ்சிருச்சி... எப்ப உங்களுக்கு மனைவியானனோ அந்த நொடில இருந்து உங்ககிட்ட உண்மையா இருக்கனும்..., எதையும் மறைக்க வேணாம்னு தோனுச்சி அதான் சொன்னேன்..“

கொஞ்சம் இலேசானதைப் போல் உணர்ந்தேன். இவள் தாலி கட்டும் நேரத்தில் ஓடிப்போயிருந்தாள் என்னவாகி இருக்கும்? யோசிக்கவே பயமாக இருந்தது. தொண்டையைக் கனைத்துக் கொண்டு,

“இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமா நான் நினைக்கல.. காதலிக்கிறது ஒண்ணும் பெரிய கொலகுத்தம்லாம் கிடையாதே.. சந்தர்ப்பமும் சூழலும் சரியா அமைஞ்சா காதல்.., கல்யாணத்துல முடியும் இல்லனா இல்ல அவ்ளோதான். இதுல பெரிசா வருத்தப்பட எதுவும் கிடையாது”

நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.

பார்வையைத் தாழ்த்திக் கொண்டேன். மீண்டும் மெளனம் எங்களைச் சூழ்ந்தது.

“எனக்கொரு சிகரெட் பிடிக்கனும் போல இருக்கு போய்ட்டு வந்திடுறேன்”

எனச் சொல்லியபடியே எழுந்து கதவைத் திறந்தேன். அறிமுகமில்லாத வீடு. ஹாலில் நிறைய பேர் படுத்திருந்தனர். வெளியில் போவதா வேணாமா என யோசனையாக இருந்தது. தயங்கியபடி கதவைப் பிடித்துக் கொண்டு நின்றேன். பின்னால் வெகு அருகில் வந்து

“ மாடிக்குப் போலாம் வாங்க” என்றாள்

இருவரும் அதிக சப்தம் எழுப்பாமல் அறையை விட்டு வெளியேறி பின்வாசல் கதவைத் திறந்து கொண்டு பக்கவாட்டில் இருந்த மாடிப்படிக்கட்டுகளில் ஏறத் துவங்கினோம். சற்று விஸ்தாரமான மாடிதான். அடுத்தடுத்த வீடுகள் கிடையாது. சிகரெட்டைப் பற்ற வைத்து புகையை ஆழமாய் உள்ளிழுத்தேன். பக்க வாட்டு கட்டைச் சுவரில் சாய்ந்தபடி கைகளைக் குறுக்கில் கட்டிக் கொண்டு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உனக்கு ஸ்மெல் பிடிக்கலன்னா கீழ போ நான் வந்திடுறேன்”

புன்னகைத்து “பரவால்ல இருக்கன்” என்றாள்

“ரொம்ப வித்தியாசமான முதலிரவில்ல “என சிரித்தேன் உதட்டைப் பிதுக்கினாள்

“என்னோட கதைகள் ல நிறைய ட்விஸ்ட் வரும். ஆனா முதலிரவுல மட்டும் ட்விஸ்ட் வச்சதே இல்ல. பாரேன் என்னோட முதலிரவுல எவ்ளோ ட்விஸ்ட்னு”

 குரலில் இருந்தது கேலியா வருத்தமா என்பதைப் பிரித்தரிய முடியவில்லை. பதிலுக்கு அவளிடமிருந்து என்ன உணர்ச்சிகள் வெளிப்பட்டன என்பதையும் சன்னமான நிலவொளியில் பார்க்கமுடியவில்லை.

 நானொரு க்ரைம் கதை எழுத்தாளன். இதுவரை நானூறு துப்பறியும் நாவல்களை எழுதியிருக்கிறேன். என்னுடைய முதல் க்ரைம் கதையை ப்ளஸ் டூ படிக்கும்போது எழுதி முடித்தேன். அச்சில் வந்தது என்னவோ டிகிரி முடித்து வேலைக்குப் போன பின்புதான். ஆனால் முதல் கதை அச்சிற்கு வரும் முன்பே கிட்டத்தட்ட நாற்பது கதைகளை எழுதி முடித்திருந்தேன். என் நண்பன் விச்சுதான் என் கதைகளை படித்துவிட்டு கைக் காசைப் போட்டு மாத நாவலாகப் பிரசுரித்தான். முதல் நாவலான ‘பெளர்ணமி இரவில்’ பதிப்பித்த நூறு காபிகளும் ஒரே வாரத்தில் விற்றுத் தீர்ந்தன. அந்த பெயரையே மாத நாவலுக்கு தலைப்பாக வைத்துக் கொண்டோம். பெளர்ணமி இரவில் இதழ் மாதம் பத்தாயிரம் காபிகள் வரை விற்கிறது. இருபத்தைந்து வயதில் வீடு, கார் என செட்டிலாகிவிட்டேன். சொந்த ஜாதியிலேயே பெண் தேடி, அதிக சிக்கலில்லாத குடும்பமாய் தேடிப் பிடித்து, ஜாதகப் பொருத்தத்துடன் சந்தோஷமாய் இவளை மணந்து கொண்டேன். சொல்லப்போனால் பத்து நிமிடங்களுக்கு முன்பு வரை சொந்த வாழ்வில் திருப்பங்களே இல்லாமல் இருந்தது.

புகைத்து முடிந்ததும் கீழிறிங்கினோம். இரவு விளக்கை அணைத்து விடச் சொன்னாள். கட்டிலில் படுத்துக் கொண்டோம். அடுத்த அரை மணிநேரத்தில் மூர்க்கமாய் கலவி கொண்டோம். எனக்கு முதன் முறை கிடையாது. அவளுக்கும் முதல் முறையாய் இருக்காது என தீர்க்கமாய் நம்பினேன். அந்த நம்பிக்கை மெல்ல அருவெருப்பாய் மாறத் துவங்கியது. எழுந்து உட்கார்ந்தேன். அவள் தூங்கிவிட்டிருந்தாள். கட்டிலை விட்டிறங்கி சன்னலுக்காய் போய் ஒரு கதவை மட்டும் திறந்து கொண்டு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். அறையில் நிலவெளிச்சம் லேசாய் விழுந்தது. கட்டிலுக்காய் திரும்பி, உடை கலைந்து, கால்களகற்றிக் கிடந்தவளைப் பார்த்தேன். இதுவரை நான் எழுதியதிலேயே எளிமையான கொலை எந்த நாவலில் வருகிறது? என்பதைக் குறித்து யோசிக்கத் தொடங்கினேன்.

- மேலும்
Viewing all 133 articles
Browse latest View live