Quantcast
Channel: அய்யனார் விஸ்வநாத்
Viewing all 133 articles
Browse latest View live

அத்தியாயம் – மூன்று

$
0
0
“நீ என்னிக்கு வர?”

 “நாளைக்கு நைட் அங்க இருப்பன்”

 “ஹோட்டல் போன் நம்பர் மெசேஜ் பன்றேன். கால் பண்ணி ரூம் புக் பண்ணிடு”

 “என்னது தனி ரூமா? அப்புறம் நான் என்ன டேஷ்க்கு அங்க வரனும்?”

 “ஏய் சும்மா உன் பேர்ல புக் பண்ணு. நான் இங்க ஒரு மாசமா தங்கி இருக்கறதால எல்லாரையும் தெரியும். நீ வந்து என் கூட தங்கினா தப்பா போய்டும். நீ அந்த ரூம்ல திங்க்ஸ் லாம் போட்டுட்டு யார் கண்லயும் படாம என் ரூம் க்கு வந்திடு.” 

“சரி. ஆனா ஒரு மாசமாவா ஹோட்டல்ல இருக்க?”

 “ஆமா டா இதோ இதோ ன்னு நாவல் இழுத்துட்டே போகுது. இந்த வாரத்துல முடிஞ்சிடும். எப்படி வந்திருக்குன்னு நீ வந்து படிச்சிட்டு சொல்லு”

 “நாவல் படிக்கறதுக்கா என்ன கூப்டுற?”

 “பின்ன வேற எதுக்காம்?”

 “உன்னப் படிக்க இல்லயா?”

 “கருமம் கேட்க சகிக்கல. ஏண்டா, நீ எழுதுற குப்ப நாவல் மாதிரியேதான் பேசுவியா?

 “எல்லாம் என் தலையெழுத்துடி”

 “கோச்சுக்காதடா. என்னதான் இருந்தாலும் நீ க்ரைம் எழுத்தாளன் தானே”

 “நீ பெரிய இலக்கிய எழுத்தாளினியாச்சே ஏன் என்னப் போய் உன் நாவல படிக்க கூப்டுற?”

 “நீ நல்லாப் படிப்பேன்னுதாண்டா”

 “கொடும எனக்கு டபுள் மீனிங்காவாவே அர்த்தமாகுது”

 “நான் டபுள் மீனிங்க் லதான பேசினேன்”

 “பாவி இரு வந்து வச்சிக்குறேன்”

 “வா வா சீக்கிரம் வா”

 “காலைலயே சரக்காடி கெறங்குற”

 “இல்லடா நீ வா நேர்ல பேசலாம்” 

கைப் பேசியைத் துண்டித்தேன். வீணா. சாகித்ய அகடாமி விருதுபெற்ற எழுத்தாளர். என்னைப் போன்ற பல்ப் எழுத்தாளர்களை மூர்க்கமாய் மறுக்கும் இலக்கியவாதி. சமூகத்தின் அத்தனைப் பிரச்சினைக்கும் மூல காரணம் என்னைப் போன்றவர்களின் எழுத்துகள்தாம் என நம்பும் தூய இருதயம் கொண்டவள். சென்ற வருட இறுதியில் அவளுடைய பேட்டி ஒன்று ஆனந்த விகடனில் வெளிவந்திருந்தது. கேள்வி கேட்டவர் சம்பந்தமே இல்லாமல், என் எழுத்தைப் பற்றி அபிப்பிராயம் கேட்டிருந்தார். வீணா என்னுடைய ஒரே ஒரு நாவலை நான்கு பக்கங்கள் மட்டும் படித்ததாகவும் அதற்கு மேல் படிக்க முடியாத அளவிற்கு அந்நாவல் குப்பை எனவும், சாக்கடை எழுத்து எனவுமாய் பதில் சொல்லி இருந்தார். நான் இதைப் பொருட்படுத்தவில்லை. சாகித்ய விருது வாங்கியவர் எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் என என் மாத இதழில் நக்கலடித்துவிட்டுக் கடந்து போய்விட்டேன். ஆனால் அடுத்த ஒரு மாதத்தில் என் அலுவலக விலாசத்திற்கு மலைக்க வைக்கும் எண்ணிக்கையில் கடிதங்களாய் வந்து குவிந்தன. எல்லாக் கடிதங்களுமே வீணாவை கண்டபடி வசைந்தும் எனக்கு ஆறுதல் சொல்லியுமாய் எழுதப்பட்டிருப்பதாக உதவியாளர் சொன்னார். எனக்குத் திடீரென இக்கடிதங்களோடு வீணாவைப் போய் பார்த்தால் என்ன? எனத் தோன்றியது. உதவியாளரை அத்தனை கடிதங்களையும் ஒரு பெரிய சாக்குப் பையில் போட்டுக் கட்டி காரில் வைக்கச் சொன்னேன். விச்சுவிடம் அவளின் முகவரியைத் தேடிப் பிடிக்கச் சொன்னேன். கே கே நகரில்தான் அவள் வீடு. அடுத்த அரை மணிநேரத்திற்குள் அவள் வீட்டின் முன்னால் போய் நின்று காலிங் பெல் அடித்தேன்.

பதின்மங்களைக் கடந்திராத ஒரு பெண் கதவைத் திறந்து யார் வேணும்? எனக் கேட்டாள். வீணாவைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னேன். ஹாலில் அமரச் சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டாள். ஹாலில் ஏராளமான புத்தகங்களோடு மிகப் பெரிய புத்தக அலமாரி ஒன்று கம்பீரமாய் நின்றிருந்தது. நடுத்தர வயதில் ஒரு பெண் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள். அவள்தான் வீணாவாக இருக்கக் கூடும். ஐந்து நிமிடத்தில் நைட்டி சகிதமாய் முகத்தை துண்டால் துடைத்தபடி வீணா ஹாலிற்கு வந்தாள். யாருங்க எனக் கேட்டவளை நிமிர்ந்து பார்த்தேன். சந்தன நிற வீணா அப்போதுதான் தூங்கி எழுந்தாள் போல, அவளின் மிகப் பெரிய கண்கள் பளிச்சென மின்னின. எழுந்து நின்று

 “நாந்தான் நீங்க சொன்ன சாக்கடை எழுத்துக்கு சொந்தமான அய்யனார்”

இரண்டு நொடி கண்களை இமைக்க மறந்து, சற்றுத் திகைத்து பின் சகஜமாகி “அட வாங்க வாங்க உட்காருங்க என்றபடியே பின்புறமாய் கழுத்தை திருப்பி மாலா, காபி கொண்டா” என்றுவிட்டு சொல்லுங்க என்றாள். எனக்கு அதற்கு மேல் பேச வார்த்தைகளே வரவில்லை. நொடிக்கொரு பாவணை காட்டும் அவளின் முகத்தையும் இரவு உடையில் தளும்பிய உடலின் கச்சிதத்தையும் பார்த்தும் பார்க்காமலிருக்க முடியாமல் தவிக்க ஆரம்பித்தேன். அவளாகவே தொடர்ந்தாள்.

“நான் எதிர்பாத்தத விட ரொம்ப யங் ஆ இருக்கீங்க நானூறு நாவல் எழுதிட்டீங்களாமே க்ரேட்”

“நானூறு குப்பை”

மெதுவாக சிரித்தாள்.

“சாரி. நான் அப்படி சொல்லி இருக்க கூடாதுதான். பேட்டி முடிஞ்சதுமே நான் சொன்னது தப்புன்னு புரிஞ்சி சொன்னத எடிட் பண்ண சொன்னேன். வேணுன்னே போட்டிருக்காங்க “

“ம்ம் அவங்களோடதும் விக்கனுமே “

 “காபி குடிங்க “

குடித்துவிட்டு எழுந்தேன்.

“சரி வரேங்க”

“என்ன விஷயமா வந்தீங்கன்னு தெரிஞ்சிக்கலமா?”

 “விகடன் பேட்டிய கேள்விப்பட்டு சும்மா உங்கள பாக்க வந்தேன் அவ்ளோதான் வரேன்”

நான் சொன்னதை அவள் நம்பவில்லை. என் கண்களை ஆழமாய் பார்த்து பரவால்ல சொல்லுங்க என்றாள் எதுவும் பேசாமல் எழுந்து வெளியேறி கேட்டைத் திறந்து கொண்டு வீட்டிற்கு முன்பு நிறுத்தியிருந்த காரைத் திறந்து பின் சீட்டில் கிடந்த மூட்டையை வெளியே இழுத்தேன். பின்னாலேயே வந்தவள் கேட்டின் மேல் கையூன்றி

“என்ன மூட்டை? “

வெளியில் நின்றபடி ஒரு கை பிடிங்க என்றேன் மாலா எனக் குரல் கொடுத்தாள் உள்ளேயிருந்து வந்த மாலா மூட்டையின் இன்னொரு பக்கத்தைப் பிடித்தாள். இருவருமாய் இழுத்து வந்து கேட்டினுள் போட்டோம் என்னங்க இதெல்லாம் எனப் புதிராய் கேட்டவளுக்கு மூட்டையின் முடிச்சை அவிழ்த்தேன்.

தபால் உறைகள், இன்லெண்ட் லெட்டர்கள், போஸ்ட் கார்டுகள் என குவியலாய் தரையில் வந்து விழுந்தன.

“எனக்கு வந்த வாசகர் கடிதங்கள்.”

 “சரி இத ஏன் என் வீட்டுக்கு எடுத்து வந்தீங்க?”

 “இந்த எல்லா லெட்டருமே உங்களத் திட்டித்தான் வந்திருக்கு நியாயப்படி உங்ககிட்டதானே கொடுக்கனும்”

என்றபடியே கேட்டை சாத்திக் கொண்டு வெளியேறினேன். வீணா மலைத்துப் போய் நின்றதை காரில் அமர்ந்து பார்த்தபடியே வண்டியைக் கிளப்பினேன் -

-- மேலும்

அத்தியாயம் – நான்கு

$
0
0

ஸ்வப்னா தன் ஸ்லீவ்லெஸ் டாப்ஸை பின் புறம் இழுத்துப் பிடித்து குத்திட்டு நிற்பதை கண்ணாடியில் நன்கு தரிசித்தாள். தலையை இடப்புறமும் வலப்புறமும் அசைத்துப் பார்த்து காதில் மின்னும் வைரத்தை திருப்தியுடன் பார்த்துக் கொண்டாள். பின்புற மேடுகளை தொட்டுப் பார்த்து உள்ளாடை இல்லையென்பதை இன்னொருமுறை உறுதிசெய்துகொண்டாள். ராகேஷிற்கு உடலோடு ஒட்டிக் கொண்டிருக்கும் சன்னமான வெள்ளை டாப்ஸ் மட்டும்தான் அணிந்திருக்க வேண்டும். தண்ணீர் கட்டிலின் மேல் கிடந்த டேவிடாஃப் சிகரெட் பாக்கெட்டையும் லைட்டரையும் எடுத்துக் கொண்டு படுக்கையறையை விட்டு வெளியேறினாள். ஹாலில் அமர்ந்து கொண்டு 40 இஞ்ச் எல்சிடி திரையை உயிர்ப்பித்தாள். சன் மியூசிக்கில் வைத்துவிட்டு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டாள். காலிங் பெல் அடித்தது. எழுந்து போய் குமிழ் வழியாய் பார்த்தாள். பின்பு ஒரு புன்னகையை உதட்டில் பொருத்திக் கொண்டு கதவைத் திறந்தாள். 

ராகேஷ்! 

சரியாய் ஐந்தடி ஏழு அங்குலம். கோதுமைக்கும் சற்று கூடுதலான நிறம். வெள்ளை ட்ராக் சூட்டிலிருந்தான். ஆசையாய் அவனை டார்லிங் எனக் கட்டிக் கொண்ட ஸ்வப்னாவை லேசாய் விலக்கினான். 

"வியர்வை யா இருக்கு.. சரி சொல்லு எதுக்கு அர்ஜெண்டா வர சொன்ன?"

" உங்கள நாலு நாளா பாக்காம ஏங்கிட்டேன் ராகேஷ். இன்னிக்கும் பாக்கலனா செத்துடுவேன்னு தோணுச்சி அதான் அர்ஜெண்டா வர சொன்னேன்"

முகத்தைப் பாவமாகவும் கண்களை கிறக்கமாகவும் வைத்துக் கொண்டாள். 

ராகேஷ் நிமிர்ந்து அவளைப் பார்த்து சொன்னான் 

”ஆனா நான் உன்னப் பார்த்தேன்” 

திகைத்த ஸ்வப்னா ”எங்க” எனக் குழம்பிக் கேட்டாள் 

“நேத்து மதியம் 3 மணிக்கு லீ மெரிடியன் ஓட்டல் ரூம் நம்பர் நானூத்து முப்பதில” 

ஸ்வப்னா வெளிறினாள் 

“இல்ல வந்து வந்து” தடுமாறினாள் 

“உன் கூட படுத்தவன் என் அடுத்த படத்தோட புரடியூசர். மறைவா கேமரா வேற வச்சி உன்ன இஞ்ச் இஞ்சா படம் புடிச்சிருக்கான் காமிக்கவா?”

 ஸ்வப்னாவிற்கு குப் பென வியர்த்தது லேசாய் தலை சுற்றுவது போலிருந்தது. 

ராகேஷ் டேவிடாஃப் சிகரெட் பாக்கெட்டை தேடி எடுத்தான். உள்ளே இருக்கும் சிகரெட்டை எண்ணிப் பார்த்தான். குறைந்திருந்த ஒரு சிகரெட் துண்டை ஆஷ்ட்ரோவோடு எடுத்துக் கொண்டான். கையோடு கொண்டுவந்திருந்த பிளாஸ்டிக் பையில் சிகரெட் பாக்கெட்டையும், ஆஸ்ட்ரேவையும் திணித்தான். பின்பு ஸ்வப்னாவை திரும்பிக் கூட பார்க்காமல் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினான் அவள் தலைகுப்புற கீழேவிழும் சப்தத்தைக் கேட்க ஒரு நிமிடம் கதவருகில் நின்றான் சப்தம் கேட்டது படிகளில் இறங்க ஆரம்பித்தான். 

- பாய்சன் கனவுகள் பக்கம் முப்பத்தி ஆறு மற்றும் முப்பத்தி ஏழு 

கழிவறையில் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடினேன். இவளுக்கு சிகரெட் பழக்கம் இருக்காதே. பேசாமல் பாலில் விஷம் கலந்து விடலாமா? வேண்டாம். யாராவது சந்தேகப்பட்டு போஸ்ட் மார்டம் அது இதுவென்று போனால் மாட்டிக் கொள்வோம். தேனிலவிற்கு கொடைக்கானல் போய் வாராய் நீ வாராய் ஸ்டைலில் மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டு விடலாமா? காலை எழுந்ததிலிருந்தே இதே சிந்தனைகள் உழன்று கொண்டே கிடந்தன. தலையை உதறியபடி அலுப்பு தீர குளித்தேன். குளித்து முடித்ததும் வழக்கம் போல் துண்டைத் தேடினேன். பாத்ரூம் கதவை லேசாய் திறந்து அம்மா துண்டு எனக் கத்தினேன். சில நொடிகளில் இவள் துண்டோடு முன் வந்து நின்றாள். காலையில் எழுந்த போது அருகில் இல்லை. எனக்கு இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. படுக்கையறை பாத்ரூமில் குளித்திருக்க வேண்டும். ஈர துவர்த்தை கூந்தலுக்குச் சுற்றியிருந்தாள். லேசாய் மஞ்சள் பூசிய வட்ட முகத்தில் பெரிய குங்குமப் பொட்டு. நீல நிறத்தில் மெல்லிய காட்டன் சேலையை உடுத்தியிருந்தாள். ஜாக்கெட்டில் அங்கங்கு ஈரம் பளபளத்தது. தலையை லேசாய் குனிந்துகொண்டு மென் புன்னகையோடு துண்டை எனக்காய் நீட்டினாள். எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டு கதவைச் சாத்தினேன். ஈரக் கண்ணாடியில் என்னையே ஒரு முறை ஆழமாய் பார்த்துக் கொண்டு மெல்ல முணுமுணுத்தேன்.

”இவளையா கொல்லப் போகிறோம்?”

- மேலும்

அத்தியாயம் - ஐந்து

$
0
0

கோவை தாண்டியதுமே மழை பிடித்துக் கொண்டது. மலைப் பாதையில் ஏறுவதற்கு முன்பு ட்ரைவர் நின்னுப் போலாங்களா? எனக் கேட்டார். மறுப்பாய் தலையசைத்தேன். வீணா வை எவ்வளவு சீக்கிரம் பார்க்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பார்த்துவிடும் தவிப்பை ஒரு மணி நேரத்திற்கு முன்பு குடித்திருந்த பியர் ஏற்படுத்தி இருந்தது. மெதுவா போங்க போய்டலாம் என்றேன். வீணா வருடத்திற்கு ஒரு நாவல்தான் எழுதுகிறாள். பெரும்பாலும் மகாபலிபுரத்தில் வைத்து எழுத்தை ஆரம்பிப்பாள். இறுதி வடிவத்தை ஊட்டியில் வைத்து முடிப்பாள். சென்ற வருடம் வந்த மின்மினிகளின் பகற் கனவுநாவலை நாங்கள் இருவருமாய்த்தான் எடிட் செய்தோம். எங்களின் முரணான முதல் சந்திப்பிற்குப் பிறகு வீணா நினைவை விட்டு அகன்றே போனாள். மீண்டும் அவளை சென்ற வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் வைத்துதான் சந்தித்தேன். ஏற்கனவே வெளிவந்த என்னுடைய மூன்று அல்லது நான்கு மாத நாவல்களை தொகுத்து புத்தகங்களாக தரமான அச்சில் கெட்டி வண்ண அட்டைகளோடு சமீபமாய் பதிப்பிக்க ஆரம்பித்திருந்தோம். விச்சுவின் அடுத்த சக்சஸ்ஃபுல் புராஜக்ட். விற்பனை நன்றாக இருப்பதாக சொன்னான். சுஜாதாவிற்கு அடுத்தபடியாக புத்தகக் கண்காட்சியில் பெஸ்ட் செல்லர் நீதான்.. நம் புத்தகங்கள்தாம் .. என்ற அவன் உற்சாககுரலை என்னால் நம்பக் கூட முடியவில்லை. வாசகர்கள் உன்னை சந்திக்க விரும்புகிறார்கள் என்ற நச்சரிப்பின் காரணமாக ஒரு மாலை அரங்கிற்கு சென்றிருந்தேன். ஸ்டாலில் நல்ல கூட்டம். திரளான வாசகர்கள் சூழ்ந்து கொண்டனர். கையெழுத்தும் சங்கோஜமான பதில்களுமாய் தடுமாறிக் கொண்டிருந்தேன். கூட்டம் குறைந்ததும் அரங்கை விட்டு வெளியேறி கண்காட்சியை சுற்றிப் பார்க்கப் போனேன்.

ஒரு இலக்கியப் பதிப்பக ஸ்டாலில் வீணா சற்று உரத்த குரலில் உரையாற்றிக் கொண்டிருந்தாள். சின்னக் குழு அவளைச் சூழ்ந்து கொண்டிருந்தது. ஸ்லீவ்லெஸ் டாப்ஸும் ஜீன்ஸ் பேண்ட் டும் அணிந்திருந்த அவளை அம் மஞ்சள் வெளிச்சத்தில் தாண்டிப்போன போது மனதிற்குள் இனம் புரியாத ஏதோ ஒரு மாறுதல் நிகழ்ந்தது. திடீரென அவளை எனக்குப் பிடித்துப் போயிற்று. திரும்பி அவள் பேசிக் கொண்டிருந்த ஸ்டாலிற்குள் நுழைந்தேன். பேச்சினூடாய் என்னை அடையாளம் கண்டு கொண்டது அவள் கண்களில் தெரிந்தது. ஸ்டால் உரிமையாளர் என்னை எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு சின்ன நமுட்டுச் சிரிப்போடு தலையசைப்பில் என்னை வரவேற்றார். வீணாவை சூழ்ந்திருந்த குழுவிற்கு என்னைப் பிடிக்காதது, ஒரு ஜந்துவைப் போல் அவர்கள் பார்த்ததிலிருந்து அப்பட்டமாய் தெரிந்தது. எதையும் பொருட்படுத்தாமல் குழுவுடன் ஐய்க்கியமானேன். விர்ஜினா வுல்ஃப் என்கிற எழுத்தாளரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள். தன்னுடைய கடைசி நாவலை எழுதிவிட்டு வீட்டிற்கு அருகாமையிலிருந்த நதியில் குதித்து தன்னை மாய்த்துக் கொண்டாள் என்ற வரியோடு ஒரு துளி கண்ணீரையும் சிந்தி, வீணா தன் உரையை முடித்த போது பலத்த கைத் தட்டல்கள் எழுந்தன. கைத்தட்டல் ஓய்ந்ததும் கூட்டத்தைப் பார்த்து நதியில் குதிப்பதற்கு முன்பு விர்ஜினா கூழாங்கற்களை தன் சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்ட தகவலை சொன்னேன். கூட்டத்தில் ஒரு குரல்

“ ஆ! அப்படியா அது கூழாங்கல்லே தானா?” என்றதற்கு பலத்த சிரிப்பு எழுந்தது. நான் பொருட்படுத்தவில்லை. வீணாவிடம் போய் நன்றாகப் பேசினீர்கள் என்றேன்.புன்னகைத்தாள். இன்னும் சற்று அருகில் போய் டி.வி சீரியல் அல்லது சினிமாவிற்கு நீங்கள் முயற்சிக்கலாம் நடிப்பு நன்றாக வருகிறது என கிசுகிசுத்து விட்டு வெளியேறினேன்.

 அடுத்த நாள் காலை சற்றும் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. தூங்கி எழுந்து காபியோடு தினசரியை மேய்ந்து கொண்டிருந்தேன். ஒன்பது மணி இருக்கலாம். காலிங் பெல் அடித்தது. போய் கதவைத் திறந்ததும் குப் பென மது வாடை வீசியது. மூன்று நபர்கள் நின்று கொண்டிருந்தனர். ஒல்லியான ஒரு நபரால் நிற்கக் கூட முடியவில்லை. தள்ளாடிக் கொண்டிருந்தார். சற்றே குள்ளமான இருவரும் ஸ்டடியாக இருந்தது போல் காட்டிக் கொண்டனர். யார் நீங்கலாம் எனக் கேட்டு முடிப்பதற்குள் குள்ளமாய் இருந்தவன் சற்று எக்கி என் மூக்கில் குத்தினான். எதிர்பார்த்திராத தாக்குதல் என்பதால் நிலைதடுமாறி கீழே விழுந்தேன். மூவரும் உள்ளே நுழைந்தனர். ஒல்லியாய் இருந்தவன் கெட்ட வார்த்தைகளை சத்தமாய் அள்ளி வீசினான். திட்டும்போது அவன் நாக்கு குழறவே இல்லை. மற்ற இருவரும் மல்லாந்து விழுந்து கிடந்த என்னை மார்பில் மிதித்தனர். அப்பா உள்ளே இருந்து அதிர்ச்சியாய் ஓடிவந்தார். ட்ரைவர் பெயர் சொல்லி இறைந்தார். ட்ரைவர் ஓடி வந்து மூவரையும் குண்டு கட்டாய் அள்ளி வெளியில் வீசினார்.

அப்பா போலிசிற்கு தொலைபேசினார். விச்சுவை விரைந்து வருமாறு அலைபேசியில் கத்தினார். கேட்டிற்கு வெளியில் மூவரும் சத்தமாய் வசைகளை இறைத்துக் கொண்டிருந்தனர். விச்சுவும் போலிசும் வந்து மூவரையும் அள்ளிக் கொண்டு போனார்கள். அம்மா ரத்தம் வழிந்த என் மூக்கில் ஐஸ்கட்டியை வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டாள். கொஞ்ச நேரத்தில் இரத்தம் நின்றது. எழுந்து நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். அப்பா டாக்டரிடம் போகத் தயாரானதற்கு மறுப்பாய் தலையசைத்தேன். அம்மாவிடம் ஒன்றுமில்லை பயப்படாதே எனச் சொன்னேன். வந்தவர்கள் யார் என அடையாளம் தெரியவில்லை. ஒல்லியாய் இருந்தவனை மட்டும் எங்கேயோ பார்த்தார் போலிருந்தது. ஏன் என்னை வந்து அடித்தார்கள்? என்பது புரியவில்லை. சட்டையை எடுத்து போட்டுக் கொண்டு போலிஸ் ஸ்டேசன் வரை போய்வருவதாய் சொல்லிவிட்டு கிளம்பினேன். அடுத்த தெருமுனையில்தான் போலிஸ் ஸ்டேசன். ட்ரைவருக்கும் வந்தவர்கள் யார் எனத் தெரியவில்லை

ஸ்டேசனில் விச்சு கம்ப்ளைண்ட் எழுதிக் கொண்டிருந்தான். ஒரு கான்ஸ்டபிள் மூவரையும் நையப் புடைத்துக் கொண்டிருந்த சப்தம் கேட்டது. திடீரென பாரதியாரின் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே கவிதையை ஒரு குரல் சப்தமாய் மந்திரம் போல் உச்சரிக்கத் துவங்கியது. எனக்கு குழப்பமாய் போயிற்று, பின் அறைக்குப் போனேன். கான்ஸ்டபிளடம் அடிப்பதை நிறுத்த சொன்னேன். மூவரையும் பார்த்து

“யார் நீங்கலாம் என்ன வந்து ஏன் அடிச்சீங்க?” என்றேன்

“என்னது நாங்க யாரா?” ஒல்லிக் குரல் அதிர்ச்சியாய் கேட்டது நான் குழப்பமாய் பார்த்தேன் ஒல்லியாய் இருந்தவன் பேச ஆரம்பித்தான்

 “தமிழ் எழுத்து சூழல் எவ்வளவு அயோக்கியத்தனமா இருக்குதுங்கிறதுக்கு இந்தக் கேள்வி ஒரு சான்று. இருந்தாலும் சொல்றேன். பாரதியாருக்குப் பிறகு தமிழ்ல கவிதை எழுதுறது நான் மட்டும்தான். என்ன உனக்கு தெரியாமப் போனதில ஆச்சரியம் இல்ல…”

எனக்கு உடனே அவன் பெயர் நினைவிற்கு வந்தது. அதீதன். சிறுபத்திரிக்கைக் கவிஞன். மற்ற இருவரையும் பார்த்தேன். நான் தான் காட்டுச்சித்தன் என்றான் ஒருவன். இன்னொருவன் மித்ராங்கி என்றான். மூவரின் எழுத்தையுமே படித்திருப்பது நினைவிற்கு வந்தது. மீண்டும், வெகு நிதானமாக

“என்னை ஏன் அடிச்சீங்க?” என்றேன்

“நீ வீணாவ சினிமா நடிக்க போவ சொன்னியாமே.. பாடு.. அவ்ளோ ஏத்தமாய்டுச்சா?” என்றான் காட்டுச்சித்தன்.

நான் மெதுவாய் “இல்ல சீரியல் தான் முதல்ல ட்ரை பண்ணிப் பார்க்க சொன்னேன்” என்றேன்

 மூவருமே ஒரே நேரத்தில் டாய் எனக் கத்தினார்கள். சட்டை செய்யாது எஸ்.ஐ நாற்காலிக்குப் போனேன். விச்சுவிற்கு மிக நெருக்கமான நண்பர் அவர்.

“இந்த மூணு பேரும் அம்புகள்தான் எய்தது எழுத்தாளர் வீணா” என்றேன். விச்சு நிமிர்ந்து பார்த்தான். அப்ப வீணா பேரையும் கம்ப்ளைண்ட்ல சேர்த்துடுறேன் என்றான். நான் எதுவும் பேசவில்லை. கம்ப்ளைண்ட் கொடுத்துட்டு வா என சொல்லிவிட்டு, எஸ்.ஐ தொலைபேசியில் ரைட்டர் வீணாங்களா? நீங்க ஸ்டேசன் வரனுமே என சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டே வெளியில் போனேன். வீணாவைக் கொஞ்சம் அலைய விட்டுப் பார்க்கும் எண்ணம் தோன்றியது ட்ரைவரை கூப்பிட்டு வண்டியை எடுக்கச் சொன்னேன். முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு வீட்டிற்குத் திருப்பச் சொன்னேன். குளித்துவிட்டு சாப்பிடும்போது அலைபேசி அலறியது.

 “ரைட்டர் அய்யனார் “

“ஆமாங்க”

“வீணா பேசுறேன் “

அமைதியாக இருந்தேன்

“தயவு செய்ஞ்சி நான் சொல்றத நம்புங்க.. நடந்ததுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது”

 “ம்ம்”

“நீங்க நம்பலன்னு தெரியுது நான் உங்க வீட்டுக்கு வரேன்”

“இல்லங்க வீட்ல நிலைமை சரியில்ல. அம்மா பயந்துட்டாங்க. இன்னொரு நாள் வாங்க”

“அப்போ நீங்க என்ன நம்பனும். சத்தியமா அந்த மூணு பேரும் ஏன் வந்து உங்கள அடிச்சாங்கன்னு எனக்கு தெரியாது. சொல்லப்போன அதீதன தவிர்த்து மத்த ரெண்டு பேர்கிட்டயும் பேசினது கூட கிடையாது”

“அப்போ நான் உங்கள சினிமாவுக்கு நடிக்க போகச் சொன்னது அவங்களுக்கு எப்படித் தெரிஞ்சது?”

“நீங்க என் காதுகிட்ட பேசினத அதீதன் பாத்துட்டு வந்து என்கிட்ட கேட்டான். அப்படி என்ன சொன்னார்னு”

“நானும் நீங்க சொன்னத அவன் கிட்ட சொன்னேன். ஆனா நிச்சயமா அது இப்படி வெடிக்கும்னு எனக்கு தெரியாது”

அமைதியாக இருந்தேன்

“நடந்த தவறுக்கு ஏதோ ஒரு வகைல நானும் காரணமாகிட்டேன். அதுக்காக மன்னிப்பு கேட்டுக்கிறேன்”

“எனக்கு கோபம் எதுவும் இல்லைங்க. அவங்க பண்ண தப்புக்கு நீங்க என்ன பண்ணுவீங்க”

“சரி அய்யனார் இத சொல்லனும்னுதான் போன் பண்ணேன். உங்க கம்ப்ளைண்ட நான் என் வக்கீல் மூலமா பாத்துக்குறேன்” எனச் சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் துண்டித்தாள்.

உடனே விச்சுவிற்கு போன் செய்து கம்ப்ளைண்டை வாபஸ் வாங்கச் சொன்னேன். எஸ்.ஐ க்கு இம்மாதிரி எழுத்தாளர்கள் சண்டை எப்படி முடியும் என்பதில் அனுபவம் இருந்திருக்கும்போல எப்.ஐ.ஆர் எதுவும் போடவில்லை. வெறுமனே நால்வருக்கும் பொது வார்னிங் கொடுத்து அனுப்பிவிட்டார். அடுத்த நாள் காலை மூக்கில் பெரிய சைஸ் பிளாஸ்திரி ஒன்றை ஒட்டிக் கொண்டு வீணா வீட்டிற்குப் போய் காலிங் பெல் அடித்தேன். வீணாதான் திறந்தாள். என் மூக்குப் பிளாஸ்திரியைப் பார்த்து பதபதைத்தாள்.அவளின் இரவு உடை உடல் என்னையும் லேசாய் பதபதைக்க வைத்தது. இருக்கையில் அமர்ந்தேன். போலிஸ் ஸ்டேசனுக்கு அவளை வரவழைத்ததிற்காக மன்னிப்பு கேட்டேன். பப்ளிஷர் விச்சு உணர்ச்சிவயப்பட்டு செய்தது அது என புளுகினேன்.

“அவர் உடனே கம்ப்ளைண்ட வாபஸ் வாங்கிட்டாரே இல்லனா எப்.ஐ.ஆர் அது இதுன்னு அலைய வேண்டி வந்திருக்கும்”

“ஆரம்பத்திலிருந்தே நமக்குள்ள எல்லாமே தப்பா வே நடக்குது “

“ஆனா ஒண்ண கவனிச்சிங்களா இது எதுக்குமே நாம காரணம் இல்ல மத்தவங்கதான் காரணமா இருக்காங்க “

புன்னகைத்தேன்.

அடுத்தடுத்த தினங்களில் நெருக்கமாகி விட்டோம். தினம் ஒருமுறையாவது பேசிக் கொண்டோம். எழுத்து, இலக்கிய கிசுகிசுக்கள், சினிமா, வாசிப்பு என நாங்கள் பேசிக் கொள்ள பல விஷயங்கள் இருந்தன. பல புள்ளிகளில் இருவரின் ரசனைகளுமே ஒத்திருந்ததன. வீணா மீது ஒரு பிடித்தம் வந்துவிட்டிருந்தது. ஆரம்பத்தில் என்னை அவளின் பக்கம் ஈர்த்தது உடலாக இருந்தாலும் மெல்ல அவளின் குணமும் எனக்குப் பிடித்துப் போயிற்று. வீணாவிற்கு என்னை விட பத்து வயது அதிகம். திருமணமாகி டைவர்ஸும் ஆகிவிட்டது. ஓரளவிற்கு வசதியான குடும்பம். அப்பா அம்மா அண்ணன் தம்பிகள் எல்லோரும் இருந்தாலும் தனியாகத்தான் வசிக்கிறாள். வீணாவுடைய முதல் நாவல் நெருஞ்சி முள். இலக்கிய உலகில் பல அதிர்வுகளை உண்டாக்கியது. அவளுக்கான தனி அடையாளத்தையும் தந்திருந்தது. வீணாவின் இரண்டாவது நாவலான அயல்மகரந்தச் சேர்க்கை க்கு சாகித்ய அகடாமி கிடைத்தது. இந்த காலகட்டத்தில்தான் எங்களின் அறிமுகம் நிகழ்ந்தது.

 ஒரு நாள் மாலை ஏழு மணிக்கு வீணாவிடம் இருந்து அழைப்பு வந்தது. லேசாய் குழறலாய் பேசினாள்

“எங்க இருக்க அய்யனார்?”

“வீட்லதாங்க”

“ரொம்ப பிசியா நீ”

“இல்லயே சொல்லுங்க”

“கொஞ்சம் மகாபலிபுரம் வரமுடியுமா”

“ஓ வரலாமே அங்க என்ன பன்றீங்க”

“என்னோட அடுத்த நாவல் தலைல வந்து உட்கார்ந்திருச்சி. ரொம்ப சிரமப்படுறேன். யார்கிட்டயாவது பேசியே ஆகனும். நீ வந்தா நல்லாருக்கும்”

அடுத்த இரண்டு மணிநேரத்தில் கடற்கரையை ஒட்டிய அவள் தங்கியிருந்த விடுதிக்கு சென்று அறை எண்ணை போனில் கேட்டுத் தட்டினேன். கதவைத் திறந்த வீணா கிட்டத்தட்ட தளும்பிக் கொண்டிருந்தாள். முன்பெப்போதும் பார்த்திராத அவளின் அன்றைய போதையூறிய புன்னகையை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.

 “சார் வந்துட்டோம்”

ஹோட்டலின் நியான் பெயர் மழையிலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது இருள் அடர்ந்திருந்தது. மழை சற்று வலுத்திருந்தது. காரை விட்டிறங்கினேன். ட்ரைவர் கோவையில் உறவினர் வீட்டுக்குப் போவதாய் சொல்லியிருந்தார். மழையாக இருக்கவே காலையில் போகிறீர்களா என்றேன் இல்ல சார் கிளம்புறேன் ஏதாவது மாற்றம் இருந்தா போன் பண்ணுங்க எனச் சொல்லிவிட்டு வண்டியை நகர்த்தினார்.. மூச்சை உள்ளிழுத்து விட்டுக் கொண்டேன். வீணாவின் தளும்பும் உடலை நினைத்தபடியே ரிசப்ஷன் கவுண்டருக்காய் போனேன்.

---மேலும்

அத்தியாயம் ஆறு

$
0
0
பரந்த நீர்வெளியின் ஒரு கரையிலிருந்து நீரின் முடிவாய் வீற்றிருக்கும் பசும் மலையைப் பார்க்கும் சந்தோஷம் வேறெதிலும் கிடைத்துவிடாதுதான். விழிப்பு வந்ததும் மனம் உடலை இழுத்துக் கொண்டு இங்கு வந்துவிட்டது. நேற்று மாலை இருள் கவிழ ஆரம்பித்திருந்த நேரத்தில் இப்பகுதியைக் கடந்தோம். பார்த்த உடனேயே பிடித்துப் போன இடம். நாளைய விடியலை இங்கிருந்துதான் துவங்க வேண்டுமென நேற்று காரில் போகும்போதே நினைத்துக் கொண்டேன். அதிகாலையில் விழித்துக் கொள்ளும் பழக்கமெனக்கு. கடந்த இருபது வருடங்களாக ஆறு மணிக்கு மேல் ஒரு நாளும் தூங்கியதாய் நினைவில்லை. பதின்மத்தின் துவக்கங்களில் மிகப் பிடித்தமான வேலையே தூங்குவதுதான். அம்மா கும்பகர்ணி எனத்தான் கூப்பிடுவார்கள். கும்பகர்ணி பெயரை ஒருமுறை வாய்விட்டு சொல்லிப்பார்த்தேன். சிரிப்பு வந்தது. என் வாழ்வின் மிகப்பிரமாதமான காலகட்டமது. பள்ளிப் படிப்பு முடித்ததும் எல்லாமே தலைகீழாய் மாறிப்போனது. மனம் அவ்விஷயங்களை நினைக்க விரும்பாமல் உதறிக் கொண்டு மலையையும் நீர்வெளியையும் பார் என்றது.

துர்கா இந்த மலைநகரத்தைத் தான் தேர்வு செய்தாள். அவள் தேர்வுகளின் மீது எனக்கு மறுபரிசீலனையே இருந்தது கிடையாது. கடந்த ஒரு வருடமாய் அவளுடைய தேர்வுகளின்படிதான் நாட்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றன. துர்கா என்னுடைய சலிப்பான நிகழையே கிட்டத்தட்ட மாற்றியமைத்தாள். துர்கா... மிதமான குளிர் விரவிய அதிகாலையில் கிசுகிசுப்பாய் அவள் பெயரை உச்சரித்து சிரித்துக் கொண்டேன். அதிகாலை மேகங்கள் சோம்பலாய் நகராமல் நின்றுகொண்டிருந்தன. சலனமே இல்லாத நீர்பரப்பு. பிப்ரவரி மாதத்தின் இளந்தென்றல் காலை. அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டேன். கரையோர உயர் மரங்கள் கிளைகள் முழுக்கப் பூக்களைச் சூடியிருந்தன. என்ன பெயர் என்றெல்லாம் தெரியவில்லை. மஞ்சள் நிறச் சிறுசிறு பூக்கள் காற்றிற்கு தூறலாய் நீரின் மீது விழுந்துகொண்டிருந்தன. துர்காவைக் கேட்டால் இந்த மரங்களின் முழு வரலாறையும் துல்லியமாக சொல்வாள். எப்போது பூக்கும் எப்படிக் காய்க்கும் என்பதையெல்லாம் அவள் சின்னஞ்சிறு கண்கள் விரிய சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்க மனம் பிரியத்தில் கசியும்.

அப்பாவிற்கு மலை நகரங்கள் பிடித்தமானவை. அவர் தம்முடைய இளம் பிராயத்தை பணத்திற்காய் பாலைவன நாடுகளில் தொலைத்திருந்தார். என்னுடைய ஐந்தாம் வகுப்பு வரை வருடத்திற்கொருமுறை நிறைய சாக்லேட்டுகளோடு வரும் இளம் அப்பாவின் பிம்பம் நன்றாய் நினைவிருக்கிறது. பாட்டி இறந்த பிறகு எங்களோடே நிரந்தரமாக வந்துவிட்டார். அப்பா மிக நிதானமானவர். வார்த்தைகளை அவ்வளவு கவனமாக, கச்சிதமாகப் பேசுவார். அம்மாவிடம் கூட அவர் அதிகம் பேசிப் பார்த்ததில்லை. ட்யூஷன் போகும் காலைகளில் ஸ்கூட்டரில் கூட்டிப் போய் விடும் அப்பா. வீட்டில் எல்லாவற்றையும் பொறுப்பாக பார்த்துக் கொள்ளும் அப்பா. கணக்கு சொல்லித் தரும் அப்பா. ரஜினி படம் கூட்டிப் போகும் அப்பா. கோடை விடுமுறையில் உல்லாசப் பயணம் கூட்டிப் போகும் அப்பா என எல்லாமும் அப்பாதான். பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றதும் பொறியியற் கல்லூரிக்கு விண்ணப்பிக்க படிவம் வாங்கப் போன அப்பா சடலமாகத்தான் திரும்பவந்தார். சாலை விபத்து. ஸ்கூட்டரிலிருந்து தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் போய்விட்டது. இறந்த அப்பாவின் உடலைப் பார்க்கவேயில்லை. பயமாக இருந்தது. இந்த நொடி கூட வயிறு பிசைகிறது. அந்த கணத்தின் தாக்கம் இம்மி அளவு கூட குறையவில்லை. ஒருவேளை அப்பா இருந்திருந்தால் எல்லாம் சரியாக இருந்திருக்குமோ?

தலையை உலுக்கிக் கொண்டேன். சதா பிரச்சினைகளில் மூழ்கித் திளைத்து தன்னை வருத்தி இன்பம் காணும் இம்மனநிலையை விட்டொழிக்கவே முடியவில்லை. எழுந்து நடக்க ஆரம்பித்தேன். மூச்சை ஆழமாக உள்ளிழுத்துக் கொண்டேன். பச்சை வாசம். விநோதமான பூக்களின் மணம். மூளை சுறுசுறுப்பானது. இருள் முழுவதுமாய் விலகி பச்சை நிறம் பிரகாசிக்க ஆரம்பித்தது. எங்கெங்கிலும் பச்சை. பசுமை. மரங்கள். பறவைகள் விழித்துக் கொண்டுவிட்டன. ஏராளமான கிளிகள் தென்பட்டன. பெரிய மரங்களின் பொந்துகளிலிருந்து ஓரிரு கிளிகள் எட்டிப்பார்த்தன. திரும்பிப்பார்த்தேன். ஆரம்பித்த இடத்திலிருந்து வெகுதூரம் வந்துவிட்டதைப் போலிருந்தது. துர்கா விழித்துக் கொண்டு தேடுவாளே எனத் தோன்றியதும் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். உட்கார்ந்திருந்த பெஞ்சிற்கு வந்து சேர்ந்தேன். நாங்கள் தங்கி இருக்கும் விடுதியிலிருந்து இந்த இடம் பத்து நிமிட நடைதான். மீண்டும் உட்காராமல் விடுதிக்காய் நடக்க ஆரம்பித்தேன்.

எதிரில் துர்கா வந்து கொண்டிருந்தாள். த்ரீபைஃபோர்த் டாப்ஸ் சகிதமாக வந்து கொண்டிருந்த அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். துர்கா நல்ல கருப்பு. நல்ல உயரம். அவள் தோள் உயரம்தான் இருப்பேன். குட்டை யாக முடிவெட்டிக் கொள்வாள். அடர்த்தியான சுருள் முடி. கொஞ்சம் விட்டு வெட்டிக்கோயேன் என்றாள் ப்ச் என மறுத்துவிடுவாள். பார்த்த உடன் உற்சாகமாக கையசைத்தாள். சிரிப்பு வந்தது. வந்ததும் தோளில் கைபோட்டு அணைத்துக்கொண்டாள்.

”வெதர் செம ப்ளசண்ட் இல்ல ”

 ”ம்ம்”

”மைண்ட் ஃப்ரீ ஆகிடுச்சா”

”முழுசான்னு சொல்லிட முடியாது. ஆனா நல்லாருக்கு. தேங்க்யூ”

”ம்ம் சரி சாப்டுட்டு ஒரு குட்டி ரவுண்ட் அடிக்கலாம். பதினோரு மணிக்கு வெயில் அடிக்க ஆரம்பிச்சிடும். ஆக்சுவலா இது ஏழைகளின் ஊட்டிதான் ஸோ எப்பவும் குளிர் இருக்காது “

”அட அப்படி ஒரு பேர் இருக்கா”

”சிலர் சொல்வாங்க. தினத்தந்தில கூட அப்படித்தான் எழுதுவாங்கன்னு நினைக்கிறேன்”

விடுதிக்காய் நடக்க ஆரம்பித்தோம். துர்கா தோளில் கை போட்டுக் கொண்டேதான் வந்தாள். என் உயரம் அவளுக்கு கை போட்டுக் கொண்டு நடக்கத் தோதாய் இருக்கும். சரிவுக்கு இடப்புறம் ஏலகிரி என கொட்டை எழுத்தில் எழுதப்பட்ட மஞ்சள் போர்ட் ஐப் பார்த்தேன். ஒரு மஞ்சள் நிறப் பறவை போர்டின் மேல் சாவகாசமாய் அமர்ந்திருந்தது

”ஏய் அங்கபோரு போர்ட் க்கு மேச்சா ஒரு பறவை.”

”அதுதான் மாங்குயில்”

”அட மாங்குயில் ந்கிறது பறவ பேரா? நான் சினிமாப் பாட்டுன்னு இல்ல நினைச்சேன்”

”ஆமா இது மாம்பழக் கலர்ல இருக்கில்லயா அதான் அந்த பேர் தவிர சார் மாமரத்தை சுத்தியேதான் கிடப்பார்”

”அப்ப பூங்குயில்னும் ஒண்ணு இருக்கா”

”ஓ இருக்கே”

”கூவின பூங்குயில் குருகுகள் இயம்பின னு திருப்பள்ளி எழுச்சிலாம் பாடியிருக்காங்களே”

”எனக்கு ராமராஜன் பாட்டு மட்டும்தான் தெரியும் ”

சிரித்தாள்.

இந்தக் கருப்புப் பெண்கள் சிரிக்கும்போதுதான் எத்தனை வசீகரம். என் தோளைத் தாண்டி நீண்டிருந்த அவளின் விரல்களைப் பிடித்துக் கொண்டேன்.

- அத்தியாயம் ஒன்று வீணாவின் தலைப்பிடப்படாத புதிய நாவல்

”பிரமாதமான துவக்கம் வீணா. மனசு அப்படியே அந்த மலைப்பிரதேசத்துக்கு போய்டுச்சி”

கட்டிலின் ஹெட்போர்டில் தலையணை வைத்துச் சாய்ந்தபடி வீணாவின் கையெழுத்துப் பிரதியை வாசித்துக் கொண்டிருந்தேன். அவள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள்.

”மொத்தம் ஐந்து அத்தியாயம் தாண்டா எழுத முடிஞ்சது”

”முடிச்சிட்டேன்னு சொன்ன?”

”இல்ல முடிக்க முடியல. இந்த ரெண்டு பெண்களும் என்ன ரொம்பவுமே தொந்தரவு பன்றாங்க”

”ம்ம் நாவல் எப்படிப் போகும்னு யூகிக்க முடியுது. நீ என்ன லெஸ்பியன் ஃபார்ம் குள்ள போகப் போறியா?”

”தெரியலடா ”

”வேணாம். இதுல நல்ல சென்ஸ் இருக்கு. புரட்சி, உடல்தத்துவம், புண்ணாக்குன்னு சுத்த விட்டுடாதே. பொயட்டிக்கா கொண்டுபோய் மெலோட்ராமடிக்கா முடிச்சிடு”

சிரித்தாள். ”நீ இப்படி சொல்வேன்னு தெரியும்”

”ரைட்டு விடு. ரெண்டுபேருக்கும் நடக்கும் கலவிய பத்து பக்கத்துக்கு ததும்ப ததும்ப எழுதி வை. கோடார்ட், பெலினி, பியானோடீச்சர் எல்லாத்தையும் சைட்ல பாத்துக்க. இருக்கவே இருக்கு டிண்டோ ப்ராஸ் மொத்த படத்தையும் பாத்து உடலதிகாரத்தை களையும் வழிமுறைகளை விளக்கி சுதந்திரத்தின் உச்சத்த துர்கா காளியின் வடிவமாகி தொட்டாள் னு அடிச்சிவிடு. நவீன இலக்கிய வாசகர்கள் சிலிர்த்துட்டு படிப்பாங்க”

”வேற எப்படி எழுத சொல்ற? துர்காவும் ஷங்கியும் வாழ்நாள் முழுக்க தோழிகளாக, அன்பு நிறைந்தவர்களாக இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்னு முடிச்சிடவா? ”

”கூட ஒரு காதல சேத்துக்க. ஒரு ஆண் உள்ளாற பூந்து துர்காவ கல்யாணம் ற பேர்ல ஏமாத்திடுறான். அவன் கூட வாழமுடியாம துர்கா மறுபடியும் ஷங்கி கிட்ட வந்து சேர்ந்துடுறா. சுபம்”

 ”கண்மணி மாத இதழ்ல பப்ளிஷ் பண்ணிடலாமா? காறித் துப்பிடுவேன். ஓடிப்போய்டு.”

”அடங்குடி. நீ என்ன பெர்ஸா எழுதி கிழிச்சிட போற? ஒண்ணு இந்த பேட்டர்ன் இல்லனா பிரெஞ்ச் பாதிப்பு பேட்டர்ன். வேற என்ன சொல்லிட முடியும் இந்த தளத்த வச்சிட்டு”

”அய்யனார், லிசன் நீ ஒரு சாகித்ய அகடாமி வின்னர் கிட்ட பேசிட்டு இருக்க. தமிழிலக்கியத்தின் மிக முக்கியமான அடையாளம் நானு. மைண்ட்ல வச்சிக்க”

”கண்ணு உனக்கு விருதுகொடுத்தப்ப யார் நடுவரா இருந்தாங்கன்னு எனக்கு தெரியும்”

”அசிங்கமா பேசாத உன்கூட படுத்திட்டா எல்லார்கூடவும் படுத்துருவேன்னு நினைக்கிறியா?”

”சே அப்படி சொல்லல. ஆனா சாகித்ய அகடாமி விருதுலாம் பெரிய அங்கீகாரம்னு நீ நினைச்சின்னா உன்ன விட முட்டாள் யாரும் கிடையாது. ஒண்ணுமே வேணாம் உனக்கு முன்னாடி யார்யார்லாம் இந்த விருத வாங்கி இருக்காங்கன்னு நீயே கேட்டுப் பாத்துக்க”

சிரித்துவிட்டாள் ”யெஸ். ஐ அட்மிட்”

”அவ்ளோதான் வீணா. இந்த நவீன இலக்கியம் நவீனத்துக்குப் பிறகான இலக்கியம் எல்லாமே பம்மாத்து. ”

”அப்போ பல்ப் எழுத்துதான் நிஜம்னு சொல்லவர்ரியா?”

”இல்ல பல்ப் எழுத்தலாம் எழுத்து ஸ்கேல்ல வச்சிப் பாக்க கூட தகுதி இல்லாதது”

”அப்புறம் ஏன் மாய்ஞ்சி மாய்ஞ்சி எழுதுற?”

 ”எனக்கு வேற எதுவும் தெரியாதே. இது தொழில் வீணா. சமூகம், புரட்சி, இலக்கியம், மேன்மை னு எந்த ஸோ கால்டு ஏமாத்து வேலையும் இல்லாத தொழில். ஐ எண்டர்டைன் பீபிள் தட்ஸ் ஆல். அதுக்கு மேல ஒண்ணும் கிடையாது”

”ஸப்பா போதும்டா தலவலிக்குது. நீ உன் ரூம்க்கு போ. நான் தூங்க போறேன்”

”பாவி மெட்ராஸ்ல இருந்து மழைல அடிச்சி புடிச்சி நீ கூப்டேங்கிறதுக்காக வந்திருக்கேன். கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம ரொம்ப அசால்டா கெளம்புன்ற?”

”ஓ அப்படியா சரிங்க சார் கிளம்புங்க சார் நாளைக்கு காலைல பாப்பம் சார்”

கட்டிலிருந்து எழுந்து போய் வீணாவை கட்டிப் பிடித்துக் கொண்டேன்.

“எப்படி இருக்க பொண்ணே”

”நல்லாருக்கேன் டா”

”சாரி கசாமுசான்னு பேசி உன்ன டிஸ்டர்ப் பண்ணிட்டனா”

 ”நோ மேன். நீ உன் பார்வைய சொல்ற இதுல என்ன தப்பு?”

”சரி ஸரக்கு என்ன வச்சிருக்க”

”நோ சரக்கு, நான் எழுதனும். நீ கெளம்பு”

 ”இன்னிக்கு மட்டும். ப்ளீஸ் ப்ளீஸ்”

 ”பாவி மூட கெடுக்காத”

”நோ ஐ கெடுக்கபோவபையிங்க் யூ ஒன்லி”

”கருமம் போய் ட்ரஸ்ஸ மாத்திட்டு வா. ரெடி பண்ணி வைக்கிறேன்”

”தேங்க்யூ டார்லிங்”

”ஆனா மவனே குடிச்சிட்டு நான் தான் ஒலகத்தின் தலைசிறந்த எழுத்தாளினி. என்னோட ஒரு வரிய படிச்சிட்டு நாள் முழுக்க தேம்பி தேம்பி அழுதேன்னு லாம் அடிச்சி விட கூடாது. இப்ப எப்படி என்ன காய்ச்சி எடுத்தியோ அப்படியேதான் விடியுற வர பேசிட்டு இருக்கனும். ஓகேவா”

”ஓகே மா டன்”

- மேலும்

அத்தியாயம்- ஏழு

$
0
0
என்னை கிட்டத்தட்ட எல்லோருமே பைத்தியம் என்கிறார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும் ஆனால் என் தலையைத் தொலைவில் பார்த்த உடனேயே நைசாக நழுவி கண்ணுக்குப் புலப்படாத இடத்தில் மறைந்து கொள்கிறார்கள் என்பதுதான் ஆற்றாமையாக இருக்கிறது. இதே இவர்கள் ஒரு காலத்தில் என் பேச்சைக் கேட்க கியூவில் நின்றார்கள். அந்தி சாய்வதற்கு முன்னமே ரம் புட்டிகளை இடுப்பில் மறைவாய் சொருகிக்கொண்டு வந்துவிடுவார்கள். மலையடிவாரம், வயல்வெளி, சந்தடியில்லாத ரயில்வே கேட் என தினம் ஒரு இடம். ஆறு மணிக்கு பேச ஆரம்பித்தால் முடிய பத்து பதினோரு மணி ஆகும். நடுநாயகமாய் உட்கார்ந்திருப்பேன். வருபவர்கள் கையிருப்பிற்கேற்ப ஸரக்கை வாங்கி வந்துவிடுவார்கள். கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள். அசராமல் பதில் சொல்லிக் கொண்டிருப்பேன். முப்பத்தைந்தைக் கடந்தவர்களின் கேள்விகளில் செக்ஸ் அல்லது ஆன்மீகம் தாண்டி வேறெதுவும் இருக்காது. கூட்டுக் கலவி, நிர்வாணம், சுதந்திரம் பற்றியெல்லாம் அசராமல் பேசுவேன். எதையாவது அச்சுபிச்சுவென்று சொல்லிவிட்டாலும் இறுதியில் ஓஷோ இப்படித்தான் சொல்றார் என முடிப்பேன். "இண்டலக்ட்ஸ் ஆர் காம்ளிகேடட் யு "நோ என்பேன். கூட்டம் வாயைப் பிளக்கும். எந்த மாதிரியான கேள்வியையும் ஓஷோ, ரமணர், வாத்சாயனர், கொக்கொகே சாஸ்திரம் என்பதில் போய் முடித்தால்தான் கேட்டவர்களுக்கு நிம்மதி.

 மதங்கள்- குறிப்பாய் இந்து மதம், திராவிடம், பெரியார், தமிழக அரசியலின் இன்னொரு பக்கம், சினிமா கிளுகிளுப்பு,நடிகை நியூஸ்கள் இதெல்லாம் முப்பதைத் தொடுபவர்களின் தளம். நடிகைகளைப் பற்றி பேசும்போது மட்டும் ஒரு செயற்கையான உற்சாகத்தை பேச்சில் வரவழைத்துக் கொள்வேன். அட்டு பீசான நடிகையை பேரழகி என சிலாகிப்பேன். உச்ச நட்சத்திரங்களும் இயக்குனர்களும் அவள் காலில் விழுந்து கிடந்தார்கள் என்பேன். இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார பிசினெஸ்மேன் அவளுக்குத் தங்கத்தில் ப்ரா செய்து கொண்டு போனான் என்பேன். அந்த கணத்திலேயே அந்த நடிகைக்கு ஓரிருவர் திடீர் தீவிர ரசிகர்களாகிவிடுவார்கள். அந்த நடிகை நடித்த மகா த்ராபையான படங்களின் டிவிடி க்களைத் தேடி அலைவார்கள். காவியத்தைப் பார்ப்பதுபோல் அப்படத்தைப் பார்த்துவிட்டு அடுத்தநாள் சிலாகிப்பார்கள். "உங்கள் கண் வழியே அவளைப் பார்த்தேன் அவள் பிரபஞ்சத்தின் பேரழகி" என வாரமலருக்கு கவிதை அனுப்புபவன் அடித்துவிடுவான்.

  புதிதாக குடிக்க ஆரம்பிக்கும் பயல்களுக்கு உரை கொடுப்பதுதாம் இருப்பதிலேயே சுலபம். குடியின் பெருமை பற்றிப் பேசினாலே போதுமானது. விஞ்ஞானப் பூர்வமாய் குடியின் பலன்கள், குடி உடலுக்கு செய்யும் நன்மை, குடிகாரப் பிரபலங்கள், குடித்துவிட்டு அவர்கள் செய்த கூத்து. பெண் குடிகாரர்கள், பெருங்குடிகார நடிகைகள் என தகவல்களாய் அள்ளி விட்டாலே போதும். பயல்களுக்கு போதை பன்மடங்காகி காசை ஸரக்கில் விசிறுவார்கள். பெரிய குடி என்பது சிறுபயல்களோடுதான் சாத்தியப்படும். அவர்களுக்கு நானொரு மகாபுருஷனாகத் தெரிந்த காலமும் உண்டு. இந்தக் கூட்டம் தன்னிச்சையாக அமையும். பொதுவாக மாலை எந்தக் குழு சீக்கிரம் வருகிறதோ அவர்களோடு இணைந்து கொள்வேன். என்னைப் போன்ற கலைஞர்கள், சிந்தனையாளர்கள், வாசிப்பாளர்கள் உழைப்பிற்கு எதிரானவர்களாக இருக்க வேண்டும். உழைத்தால் செக்கு மாட்டு வாழ்கைக்கு மூளை பழகிவிடும். என்னால் சுதந்திரமாக சிந்திக்க முடியாது என்பது போன்ற வாசகங்களால் இந்த கூட்டத்தைக் கட்டிப் போட்டும் வைத்திருந்தேன். புதுப்பயல்களில் ஓரிருவர் என் மொத்த செலவையுமே ஏற்றுக் கொண்டனர். உணவு, ஆடைகள், நல்ல இருப்பிடம் என எல்லாமும் கிடைத்தது. பல தடிதடியான புத்தகங்களையும் ஓரிருவர் வாங்கிக் கொண்டு வந்து கர்ம சிரத்தையோடு கொடுத்துவிட்டுப் போவார்கள். அந்த நாவல் குறித்த விமர்சனத்தை மறக்காமல் கேட்பார்கள். அதிரடியாக சொல்வேன். அதில் ஒரு பக்கத்திற்கு மேல் என்னால் வாசிக்க முடியவில்லை. எழுதினவனின் மூளை கிட்டத்தட்ட பத்தாம் நூற்றாண்டிலேயே செத்துப் போய்விட்டது. கையிருப்பை எல்லாம் போட்டு புத்தகம் வாங்கிக் கொடுத்தவன் புளங்காகிதமடைந்து இதல்லவா விமர்சனம் என்று விட்டு முழுத் திருப்தியாகப் போவான்.

  எல்லாம் சரியாகத்தான் போய்கொண்டிருந்தது. முப்பத்தைந்து வயது கும்பலில் ஒருவனால் வந்த வினை. ஒருநாள் அவன் நீங்கள் ஏன் நாவல் எழுதக் கூடாது எனக் கேட்டுவிட்டான். திக் கென்றானாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல். நான் சிந்தனையாளன் மட்டுமேதான். அதை நாவல் எனும் செயலாக்கி அதன் மூலம் கிடைக்கும் பலனை அனுபவிக்க தயாராக இல்லை என்றேன். ஒருவருக்கும் அப்பதில் உவப்பில்லாமல் போய்விட்டது. நாவல் எழுதுங்கள் என்பதை அந்தக் குழுவே சொல்ல ஆரம்பித்துவிட்டது. ஒரு கட்டத்தில் அவர்களின் நச்சரிப்புத் தாளாமல் மெல்ல முப்பத்தைந்து வயது கும்பலை கைகழுவிவிட்டு முப்பது கும்பலிலும் இருபது கும்பலிலும் மட்டும் தலைகாட்டிக் கொண்டிருந்தேன். எப்படியோ இந்த நாவல் பேச்சு மற்றவர்களுக்கும் பரவி நாவல் எழுதுங்கள் நாவல் எழுதுங்கள் என பார்க்கும் இடத்தில் எல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.இவர்களின் தொல்லை தாங்க முடியாது போன ஒரு கட்டத்தில் நாவல் எழுதுவது பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன்.

  எதை எழுதலாம் என்பது குறித்த சிந்தனைதான் இருப்பதிலேயே நெருக்கடியானது. எப்படி உட்கார்ந்து யோசித்தாலும் ஒரு மண்ணும் மூளையில் உதிக்கவில்லை. சில நாட்கள் எழுத்து குறித்த சிந்தையில் இருப்பதாகச் சொல்லி குடிக்க கூப்பிட்டவர்களை கழற்றிவிட்டேன். ஆனாலும் பக்கிகள் "நாவல் என்னாச்சு சார்?" என்பதைக் கேட்டுவிட்டுத்தான் நகர்ந்தனர். நாளையடைவில் நாவல் என்னாச்சு சார் என்ற கேள்வியின் மூலமாய் என்னை கேலிசெய்கிறார்களோ என்ற சந்தேகம் வலுப்பெற ஆரம்பித்தது. இந்த நாவல் என்னாச்சு என்பதை ஒரு வித நமுட்டுச் சிரிப்போடு எல்லாக் குழுவினரும் கேட்கப் பழக ஆரம்பித்த பிறகு அவமானம் தாங்காமல் சரி வருவதை எழுதுவோம் என உட்கார்ந்து எழுத ஆரம்பித்தேன். ஒரு பத்தி எழுதுவதற்குள் மூச்சு வாங்குகிறது. ஒரு பத்தியிலும் ஏராளமான எழுத்துப் பிழைகள். சின்ன ர வா? பெரிய ற வா சின்ன ன வா பெரிய ணா வா என்பது குறித்த சந்தேகமே நள்ளிரவு வரை ஓடும்.

  சரி இனி நாவலை வாயால் எழுதுவோம் என பழைய ஃபார்முக்கு வந்தேன். மாலை குடிசந்திப்புகளில் உற்சாகமாய் கலந்துகொண்டேன் உலகத்தின் எந்த மூலையிலும் எழுதப்படாத நாவலை எழுதப்போவதாக சொன்னதும் ஆர்வமானார்கள். கிட்டத்தட்ட ஒரு மாதம் இந்த எவராலும் எழுதப்படாத நாவல் தான் ஓடிக் கொண்டிருந்தது. அப்படி என்ன நாவல் என்றதற்கும் தயாராய்தான் இருந்தேன். "ஒரே நாவல் ஆனால் பல அடுக்குகள். ஒரு அடுக்கு க்ரைம். ஒரு அடுக்கு இலக்கியம். இன்னொரு அடுக்கு இதை இரண்டையும் எழுதும் நான். அதாவது எழுத்தாளர்களை எழுதும் எழுத்தாளன். எப்படி இருக்கு?" என ஆர்ப்பாட்டமாய் சிரித்தேன்.

  முப்பத்தைந்துகளிடம் "இந்த நாவல் ஒரு அடல்ட்ரி. அதாவது க்ரைம் நாவல் எழுதுபவனின் அடல்ட்ரி. ப்ளஸ் இலக்கிய எழுத்தாளினியின் அடல்ட்ரி ப்ளஸ் க்ரைம் நாவலுக்குள் வரும் ஏராளமான அடல்ட்ரி ப்ளஸ் இலக்கிய நாவலில் வரும் அடல்ட்ரி .. அடல்ட்ரி அடல்ட்ரி அடல்ட்ரி "எனச் சொல்லிவிட்டு மூச்சு வாங்கினேன்.

  முப்பதுகளிடம். "இந்த நாவல் ஒரு புதிர். அதாவது maze அதாவது லாப்ரிந்த். அதாவது ஒரு நாவலுக்குள் ஏராளமான புதிரடுக்குகள். ஒவ்வொரு அடுக்கிலேயும் ஒவ்வொரு பரவசம். புதிர்தன்மை பரவசம் என்லைட்மெண்ட். யா என்லைட்டண்டு" என்றேன்.

  இருபதுகளிடம் "இந்த நாவல் ஒரு கொண்டாட்டம் பரவசம், குடி, பெண், காமம், மேலும் குடி காமம் உடல் அவ்ளோதான் உடலுக்கு பேதம் கிடையாது. ஆணும் ஆணுமான உடல் பெண்ணும் பெண்ணுமான உடல் அல்லது க்ராஸ்ஃப்ங்க்சனல் உடல்" என்றேன்

  ஒரு மாதம் பிழைப்பு ஓடியது. அடுத்த மாதமே ஆரம்பித்துவிட்டார்கள். "எத்தன பக்கம் சார் எழுதி இருக்கீங்க. படிச்சு பாக்கலாமா?"

  "அப்படிலாம் எடுத்த உடனேயே எழுதுற முடியாதுப்பா. ஐரோப்பால ஒரு நாவல பத்து வருஷமா எழுதுவாங்க. ஏன் ஆயுள் முழுக்க ஒரே ஒரு நாவல் எழுதினவங்கலாம் இருக்காங்க. இது என் கனவு நாவல். மெதுவாத்தான் எழுதனும். தவிர அதுக்கான மனநிலை வேணாமா"? கேள்வி கேட்ட கூட்டம் சரியெனப் போய்விடும். இப்படியாக ஒரு மாதம் ஓடியது.

  அதற்கு அடுத்தது நேர்ந்தவைகளை பிறகு சொல்லும் மனநிலை இருந்தால் சொல்லுகிறேன். ஆனால் முதல் பத்தியில் சொல்லியிருப்பதுபோல இவர்கள் என்னைப் பார்த்தாலே ஓடிக் குதித்து தப்பி தலைமறைவாகிவிடுகிறார்கள் அவ்வளவுதான் சொல்ல வந்தது.

  மேலும்

2012

$
0
0



 வேறெப்போதும் உணர்ந்திராத மன அமைதியை இந்த வருடத்தில் பெற்றேன். பெரும்பாலான இரவுகளில் பயல்களுக்கு கதை சொல்லிக்கொண்டே பயல்களுக்கு முன்பாகவே தூங்கிப் போனேன். தேவையில்லாத எண்ணங்கள், அநாவசியக் கற்பனைகள், சதா குழம்பித் திரியும் மனம் என எல்லாவற்றிடமிருந்தும் என்னைத் துண்டித்துக் கொண்டேன். வெளி உலகத் தொடர்புகள், நண்பர்கள், ஊர்சுற்றல், வார இறுதிக் குடி போன்றவையும் என்னைத் துண்டித்தன. மிகக் குறைவாகத்தான் யோசித்தேன். மிகமிகக் குறைவாகத்தான் எழுதினேன். மூன்று குறுநாவல்களின் கரு மனதில் விழுந்திருந்தாலும் அதிலேயே மனம் ஊறிக் கிடக்காததால் எழுத முடியவில்லை. ஒவ்வொரு நாளும் துளிர்க்கும் பசுஞ்செடியைப் போல் இச்சிறு பிள்ளைகள் வளர்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர்களின் வேகத்திற்கு, துடிப்பிற்கு, உற்சாகத்திற்கு ஈடுகொடுக்க இன்னும் உயிர்ப்போடு இருக்க வேண்டியிருக்கிறது. Wide Awake, Alertness  போன்ற பதங்கள் எல்லாம் ஞானவாழ்வில் மட்டுமல்ல குமாஸ்தா வாழ்விலும் உண்டு என்பதை இந்தப் பயல்கள் கற்றுத் தருகிறார்கள். ஒரு நாளில் நூறு ஏன்-ம்பா? விற்கு பதிலளிக்க வேண்டியிருக்கிறது. அவர்களின் கண்முன் விரியும் காட்சிகள் அனைத்தும் ஏன்? என்கிற கேள்வியோடுதான் முடிகின்றன. சில பதிலளிக்க முடியாத கேள்விகளுக்கு சும்மா- பா என்கிற பதிலையும் கண்டுபிடித்து வைத்திருக்கிறேன்/றோம்.

மனதை தொந்தரவு செய்யும் எந்த செய்திகளையும் மேய்வதில்லை. இந்த வருடத்தில் பார்த்த படங்களை விட பாதியில் நிறுத்தின படங்கள் அதிகம். “நீ இப்ப ஒரு குழந்த மாதிரி ஆகிட்ட தெரியுமா?” என நம்பமுடியாத குரலில் இவள் சொல்வதைக் கேட்டு புன்னகைக்க முடியவில்லை. அவ்வளவு மோசமாக இருந்தேன் என்பதை நினைக்க வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்ய? எல்லா உச்சங்களையும் வீழ்ச்சிகளையும் முழுமையாய் உணர்ந்துவிட்டே வெளிவர விரும்புகிறேன். தீயைத் தீண்டி அறிய விரும்பும் மனம். பிறருக்கு என்னால் நேர்ந்த துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் நானே என்கிற புள்ளிக்கு திமிர் பிடித்த மனம் மெல்ல நகர்வதை உணரமுடிகிறது. எம்பிஏ  முதல் வகுப்பில் தேறியது. புதுக் கார் வாங்கியதென குமாஸ்தா சாதனைகளும் இவ்வருடத்தில் உண்டு. என்னை வற்புறுத்தி, நச்சரித்து, திட்டு வாங்கிக் கொண்டு, படிக்க வைத்த மனைவிக்கு எம்பிஏ வும், சீட்டை மட்டுமே தேய்ப்பவனுக்கு நிறைய சம்பளம் கொடுக்கும் அரசிற்கு காரும் சமர்ப்பணம்.

இந்த வருடத்தில் நீலகண்டப் பறவையைத் தேடி – நாவலை வாசித்துவிட முடிந்தது. மிக வேகமாக வாசித்து முடித்து விட்டு சில பகுதிகளை மீண்டும் வாசித்தேன். மன எழுச்சி என்கிற பதத்தை படிக்க நேரிடும்போதெல்லாம் ஒரு சின்ன ஏளனப் புன்னகை தோன்றும். ஆனால் நீலகண்டப் பறவை தந்த உணர்வை வார்த்தையில் கடத்த தோற்றுப் போய் அதே மன எழுச்சியையே துணைக்கழைக்கிறேன். ஆம் இந்த நாவல் மிகுந்த மன எழுச்சியைத் தந்தது. முதல் வேலையாக எழுதிக் கொண்டிருந்த குறுநாவலை நிறுத்திவிட்டேன். என்ன மாதிரியான குப்பை இது? என என் எழுத்தின் மீது கோபம் வந்தது. ஒரு பெரும் மரத்தைத் தொட்டுப் பார்த்து இரண்டு வருடங்களாகப் போகின்றன, என்னால் எந்த மாதிரியான எழுத்தைத் தந்துவிட முடியும்? நான் ஏன் எழுத்து என்கிற பெயரில் குப்பையைச் சேர்க்கிறேன்? என அடுக்கடுக்காய் கேள்விகள் முளைத்த ஒரு இரவில் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு தூங்கப் போய்விட்டேன். கொஞ்சம் இந்திய க்ளாசிக்குகளை படிக்கலாம் என தூக்கத்தின் நடுவே நினைத்துக் கொண்டேன்.

பயல்களின் அனுமதி இல்லாமல் டிவி பார்க்க முடியாததால் சாகசப் படங்கள், குறிப்பாக அனிமேட்டட் படங்களாக பார்த்துத் தள்ளினோம். ஹேப்பி ஃபீட் வகையறாக்களோடு மியாசகி படங்களையும் கலந்து கட்டி இரு தரப்பும் திருப்தியடைந்து கொண்டோம். பயல்கள் தூங்கிய பின்பு நல்ல பிரிண்ட் கிடைத்த புதுத் தமிழ் படங்களையும் விடாமல் பார்த்தோம். டோனி காட்லிஃப் படங்களைக் குறித்து எழுத ஆரம்பித்து அதையும் இரண்டு பதிவுகளோடு நிறுத்திக் கொண்டேன். ஏனோ தெரியவில்லை தொடரமுடியவில்லை. சமீபமாய் கண்டறிந்த இன்னொரு இயக்குனர் Emir Kusturica. செர்பிய இயக்குனர். இவரின் Time of the Gypsies படம் பல அதிர்வுகளைத் தந்தது. இவரின் மற்ற படங்களையும் பார்த்து விட்டு எழுதவேண்டும். இப்படியாய் ஜிப்சி படங்களைப் பார்த்து, ஜிப்சி இசையைக் கேட்டு, வாழ்வு அனுமதித்தால் ரோமானிய தேசங்களில் சுற்றி அலைந்துவிட்டு, ஜிப்சிக்களைப்பற்றி ஒரு நூல் எழுத வேண்டும் என்கிற எண்ணத்தையும் இங்கே பதிந்து வைக்கிறேன். 

அகிரா வைக் குறித்தும் ஒரு நூல் எழுத வேண்டும். அல்லது கட்டுரைகளாவது எழுத வேண்டும். ஆனால் உலகின் பெரும்பாலானவர்களால் எழுதி,பேசி, சலிக்கப்பட்டுவிட்டவர் அகிரா. புதிதாக அவரை எந்த கோணத்தில் எழுதி விட முடியும்? என்கிற சலிப்பும் கூடவே எழுகிறதுதான். ஆனால் எழுத்து இரண்டாம் பட்சம் முதலில் சற்று விழிப்பாய் மீண்டும்அகிரா படங்களைப் பார்ப்போமே என ஆரம்பித்து விட்டேன். செவன் சாமுராய், yojimbo, The bad sleeps well ஆகிய மூன்று படங்களை  கடந்த இரண்டு நாளில் பார்த்தேன். செவன் சாமுராயை என்னுடன் பார்த்த மனைவி “கொள்ளைக்காரர்களுக்கு பதிலாய் யானையைப் போட்டால் அப்படியே கும்கி படம். இப்படியா அட்ட காப்பி அடிப்பாங்க? “ என அங்கலாய்த்தபடியே சாமுராய் அல்லாத ஒருவனுக்கும் கிராமத்துப் பெண்ணுக்கும் ஏற்படும் காதல் அப்படியே  கும்கியில் சுடப் பட்டிருப்பதையும் சொன்னாள். மேலும் “அடிக்கிறது அட்ட காப்பி ஆனா டிவில வந்து உட்கார்ந்துட்டு, கால்மேல கால் போட்டுட்டு நானே ஜிந்திச்சேன்னு பேட்டி கொடுக்கறத பாத்தாதான் பத்திட்டு வருது” என பொரிந்து தள்ளினாள். அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு ஒரு பிரபல ப்ளாக்கர் ஆவதற்கான எல்லாத் தன்மைகளும் உன்னிடம் இருக்கின்றன எனச் சொன்னேன் “ஏ! பே” எனச் சொல்லிக்கொண்டே எழுந்து போய்விட்டாள்.



திரைப்படக் கழக துவக்க விழா- திருவண்ணாமலை

$
0
0










நண்பர்களுக்கு நாளையும் நாளை மறுநாளும் நடக்க இருக்கும் நிகழ்விற்கு அழைக்கிறேன்



Bava's 19 DM Saron Book release at Tiruvannamalai


கடைசி நாளில் மழை பெய்தது - 1

$
0
0
விடுமுறைக்குப் போவதற்கு முன்பு உற்சாகம் தரக் கூடியதாய் இருந்த எண்ணங்களில் முதலாவது மழை. இருக்கப்போகும் நாற்பது நாட்களில் எப்படியும் நான்கைந்து நாட்களாவது மழை இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் கடைசி நாளில் கிளம்புவதற்கு ஆறு மணிநேரங்களுக்கு முன்புதான் மழையை தரிசிக்க முடிந்தது. பயல்களாகிய நாங்கள் பெரியவர்களின் பாதுகாப்பு வேலிகளை உடைத்து மழையில் நனைந்து குதூகலித்தோம். திருவண்ணாமலையிலிருந்த

கடைசி நாளில் மழை... 2

$
0
0
திருச்சூரிலிருந்து குருவாயூர் செல்லும் சாலையில் 13 ஆம் கிமீ யில் விலகி உள்நுழைந்த வாகனம் அடர்ந்த இருளில் ஒற்றைப் பாதையில் முண்டூர் கிராமத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. கேரளம் எட்டுமணிக்கெல்லாம் தூங்கிவிடுகிறது. பத்துமணிக்கு சாலையில் ஒன்றும் இல்லை. அந்த சாலை இருப்பதே கூட காலையில்தான் தெரிந்துகொள்ள முடிகிறது. பல வளைவுகளுக்குப் பிறகு ஒரு பெரிய தோப்பை வந்தடைந்தோம். உயர்ந்து வளர்ந்திருந்த

நான் கடவுள்

$
0
0
என் அப்பாவிற்கு கடவுளர்கள் குறித்துப் பெரிதாய் புகார் கிடையாது ஆகவே வீட்டில் பக்தியின் தாக்கங்களான பூஜை, வழிபாடு,விசேஷங்கள் என எதுவும் இருந்தது கிடையாது. ஆனால் நான் பதினைந்து வயது வரை பக்திப் பழமாகத்தான் வளர்ந்தேன். பதின்மத்திற்குப் பிறகு சாமியார் பித்தும் சேர்ந்துகொண்டது. போன மாதம் கூட ஒரு வளரும் சித்தரைப் பார்த்துப் பேசிவிட்டுத்தான் வந்தேன். இப்பித்திற்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது என்

கடைசி நாளில்....3

$
0
0
மேடைப் பேச்சில் பள்ளிக் காலங்களில் சிறந்து விளங்கினேன். டிபன் பாக்ஸ், எவர்சில்வர் தட்டு, எவர் சில்வர் பூக்கூடை, தம்மாதூண்டு பித்தளை கப், பிளாஸ்க் என நான் வாங்கி குவித்திருந்த பரிசுகளின் எண்ணிக்கை அதிகம்தான். இது போக சான்றிதழ்கள். நான்கு வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலை வீட்டில் பழைய குப்பைகளை கிளறிக் கொண்டிருக்கும்போது இச்சான்றிதழ்கள் அடங்கிய ஃபைல் கைக்குக் கிடைத்தது. சுவாரசியமாய் எடுத்துப்

சிவப்புச் சாராயம்

$
0
0


வெள்ளந்தித்துணிச்சலன் குதிரைக் கண் நெடுநெடன் சகிதமாய் சாராயம் குடிக்கப் போனான் இருக்கைகளில்அமர்ந்ததும் வெளியே மழை பிடித்துக் கொண்டது நிறைய நிறையக் குடித்திருந்த அனுமதிச்சீட்டில்லாத அல்பேனிய தேவதை தளும்பியபடி எழுந்து உயர்குதிகால் செருப்புச்சப்தமதிரமழை இசையின் லயத்திற்கு ஆட ஆரம்பித்தாள் சாராய விடுதியில் இழந்துபோயிருந்தஇளமையின் துக்கம்படிந்திருந்த முதிர் பெண்ணொருத்தி குதிரைக்கண்ணனிடம் என்னவேண்டுமெனக் கேட்டாள் துணிச்சலன்முந்திக் கொண்டு ஆடும்பெண்ணின் இடுப்புத்துணி வேண்டுமென்றான் முதிர்பெண்பின்புறம் திரும்பி தன்துணிவிலக்கி தொங்கியபுட்டங்களைக் காண்பித்தாள் கோபங்கொண்டகுதிரைக்கண்ணன் துணிச்சலன்முகத்தில் குத்தினான் இருக்கைசகிதமாய்கூரைபார்த்து விழுந்து கிடந்தவனை ஆட்டத்தைநிறுத்திவிட்டு அல்பேனியதேவதைவந்து தூக்கினாள் முதிர்பெண்மூன்று குவளைகளில் சிவப்புச்சாராயம் வார்த்துத் தந்தாள்.

·      *  சில வருடங்களுக்கு முன்பு பார்த்த ஏதோ ஒரு ஃபிரெஞ்ச் பட பாதிப்பில் எழுதியது. முன்பு இவ்வார்த்தைகளை ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதியிருந்தேன். பெண்மை போற்றதும். சற்றுத் தாமதமாய் மகளிர் தின வாழ்த்துகள்

பாரதிக்குப் பிறகு..

$
0
0

பாரதிக்குப் பிறகு மனுஷ்யபுத்ரன்தான் 
சாரு சொன்னார். இனியும் ஸொல்வாரா எனத் தெரியாது
பாரதிக்குப் பிறகு தேவதேவன்தான் 
ஜெமோ சொன்னார்.இனியும் ஸொல்வார்
பாரதிக்குப் பிறகு நீதான் மச்சி
நாக்குழறலாய் நண்பன் சொன்னது
அடுத்த குடியிலும் நிச்சயம் ஸொல்வான்
பாரதிக்குப் பிறகு நீதாண்டி 
நாக்குழறாமல் நானும் ஒரு 
கவிஞரிடம் ஸொன்ன நினைவு
அடுத்த முறையும் ஸொல்ல  தயார்தான்
அவள்தான் கேட்க விரும்பாமல் போய்விட்டாள்.                                                                        


·         இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு ஜாலி' யான மூடில் எழுதியது. சீரியசான மூடில் படித்தாலும் சரியாக இருப்பதுபோல் தோன்றியதால் இங்கே


கனாத் தழுவல்

$
0
0

மாலைச் சூரிய கிரணம் போல்
தகதகத்த
இரட்டை ஆண்மகவுகளை
ஈன்றெடுத்தேன்
இப் பாலையின் சாலையோரம்
திடீரென முளைக்கும்
ஏற்கனவே பூத்த மரங்களைப் போல்
கண் விழித்ததும்
எழுந்துநின்றுகுதித்துதாவிஓடிஆடி
நொடிக்கு நொடி பூப்பூவாய் விரிந்தனர்
நிலாத் தேய்ந்த இரவுகளில்
எதையோ மீட்டெடுக்க வேண்டி
வற்றிய நதியின் மணற் புதைவுகளெங்கும்
அலைந்துவிட்டு திரும்புபவனின்
அரவம் கேட்டு
வாயிலுக்கு ஓடிவருகிறார்கள்*
தொய்வடைந்த அவன் உடல் மீது
தாவுகிறார்கள்
கருவடைந்து குழிவிழுந்த அவன் முகத்தை
பூவிரல்களில் ஏந்தி முத்தமிடுகிறார்கள்
சோர்ந்து விழுந்து
உறங்கிப்போனவனின் உடலைத்
தம் பிஞ்சு மடியில் கிடத்தித்
தலைக் கோதுகிறார்கள்
அலைகளற்ற சமுத்திரத்தில்
உருவான பேரலையொன்று
அவன் கால் நனைத்துப் போனதை
அறியாமலே உறங்கிப் போனான்
காலையில் சற்றுத் தாமதமாய்
அவனும் நானும்
ஒரு தங்க மணற் துகளும்
விழித்தெழுந்தோம்

* ஓடிவருகிறார்கள் பதம் ராசு அண்ணன் தந்தது

முழுமை

$
0
0

உன் புன்னகைகளுக்குப் பின் இருந்தவை புன்னகைகளே இல்லை
உன் கோபங்களுக்குப் பின் இருந்தவையும்
உன் மெளனங்களிற்குப் பின் இருந்தவையும்
உன் வெறுப்புகளுக்குப் பின் இருந்தவையும்
ஆனால்
அந்நிலவொளியில்
மணற்திடலில்
மடிப்புதைவில்
உடல் திமிர்வில்
மினுங்கிய
முலைகளின் 
முழுமைகாண 
இன்றே வாய்த்தது
என் கண்ணே
இவை 
பின்னும்
மின்னும்
அதே
சுத்த முலைகள்

இயற்கையின் மீது வரையப்பட்ட சித்திரம் : நீலகண்டப் பறவையைத் தேடி நாவலை முன் வைத்து..

$
0
0






இந்நாவலை வாசித்திருக்கக் கூடாதுதான். வாசித்துதான் முடித்துவிட்டோமே எனக் கடந்து போயிருக்கவேண்டும். இரண்டுமே நடந்திருந்தால் நான் எழுத ஆரம்பித்திருந்த மூன்று குறுநாவல்களை முடித்திருப்பேன். ஆனால் இம்மூன்றுமே நிகழவில்லை. இந்நாவல் முழுமையாக என்னுடைய ஆறு மாதத்தைத் தின்றது. ஏன், இதை எழுதிவிட வேண்டும் என்ற எண்ணம் உதித்த பிறகு கூடமேலோட்டமாக வாசிக்க ஆரம்பித்ததுதான்.. ஒரு வார்த்தை கூட எழுதாமல் மீண்டும் நாவலில் மூழ்கிப் போனேன். வேறெதிலேயும் கவனத்தைக் குவிக்காது திரும்பத் திரும்ப இந்த நாவலின் வெவ்வேறு பக்கங்களில் ஆரம்பித்து, அந்நாளின் என் கைக்குள் இருக்கும் நேரத்தின் கடைசி நிமிடம் வரை கதை நிகழும் காலத்திற்குள்ளும் பிரதேசத்திற்குள்ளும் தொலைந்து போகிறேன்.

இக்கதைப் பரப்பிற்குள் அலைவதை நிறுத்தவே முடியவில்லை. சமீபமாய் என்னை சந்தித்த நெருக்கமானவர்களிடம் இந்நாவல் குறித்து சதா பேசிக்கொண்டேயிருந்தேன். எது என்னை இப்படி பைத்தியமாக்கியது? இந்த நாவலின் எந்த தன்மையில் நான் கிறங்கிப் போனேன்? என்பதை மிகச்சரியாக என்னால் சொல்லிவிட முடியாது. ஆனால் இந்த நாவல் தந்திருக்கும் பிரம்மிப்பிலிருந்து ஓரளவிற்கு நிதானமாகி இதன் பிரம்மாண்டங்களைக் குறித்து பேசிவிடவேண்டுமென்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

அதீன் பந்த்யோபாத்யாய வினால் 1971 இல் எழுதப்பட்ட நாவலிது. அதீன் கிழக்கு வங்காளம் டாக்கா மாவட்டத்திலிருக்கும் ராயினாதீக் என்ற சிற்றூரில் பிறந்தவர். நாவல் நிகழும் களமும் கிழக்கு வங்கம்தான் என்பதால் அதீனின் இளமைக்கால நினைவுகள் இந்நாவல் செழுமையாகவும் துல்லியமாகவும் வடிவம் பெற உதவியிருக்கலாம். எந்த ஒரு படைப்பாளிக்கும் தான் பிறந்துவளர்ந்த சூழலும் இளம்பிராயத்து நினைவுகளை பொதிந்து கொண்டுள்ள பின்னணியும் படைப்புருவாக்கத்திற்கு மிகவும் இலகுவானதாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை.

இந்திய சுதந்திரத்திற்கு முன்பான காலகட்டத்தில் டாக்கா மாவட்டத்திலிருக்கும் ஸோனாலி பாலி ஆற்றின் கரையோரத்திலிருக்கும் கிராமங்களில் நிகழும் கதை. பிரிவினைக்கான துவக்கப்புள்ளிகள் தென்பட ஆரம்பிக்கும் காலகட்டத்தில் இந்நாவல் மகிழ்ச்சியாய் தளும்பி, மெல்ல லீக் மற்றும் இந்துத்வ அமைப்புகள் முள் விட்டுச் செழித்து கலவரங்கள் வெடிக்கும் காலகட்டத்தில் பதபதைப்புடன் முடிந்து போகிறது.
சாமான்யர்களின் வாழ்வைத் தலைகீழாக்கும் அரசியல் மற்றும் மத நிலைப்பாடுகளின் சிறுமைகளோடு, மனிதத்தின் உச்சத்திற்கும் வீழ்ச்சிக்குமிடையில் ஊசலாய் இந்நாவல் பயணிக்கிறது. ஸோனாலிபாலி ஆற்றின் ஒரு பக்கம் இந்துக்களும் இன்னொரு பக்கம் முஸ்லீம்களும் வாழ்கிறார்கள். இந்துக்களான டாகுர்கள் செல்வ செழிப்பு மிகுந்தவர்கள். நில உரிமையாளர்கள். ஆசாரம் மிக்கவர்கள். முஸ்லீம்களோ ஏழைகள். நிலமற்றோர். செழிப்பு மிகுந்த பகுதியில் வறுமையில் வாடுவோர். தீண்டாமை மிக உக்கிரமாக இருந்தது. முஸ்லீம்கள் தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டனர். இவ்விரு குடியிருப்பில் வாழும் மனிதர்களின் யதார்த்த வாழ்வு, மனச்சிக்கல்கள், நிலவும் அரசியல், மதம் உருவாக்கும் நெருக்கடி, தனி மனிதக் கொண்டாட்டம், மனங்களின் சிதைவு, அதைத் தொடர்ந்து நிகழும் அவலம் என மனித வாழ்வின் எந்த ஒரு உணர்வையும் / நிகழ்வையும் விட்டுவிடாமல், துளி கூட பிசகாமல் ஒட்டு மொத்த தோற்றத்தையும் இந்நாவல் நம் கண் முன் கொண்டு வருகிறது.

வரலாறும், மதமும் எழுத்தாளருக்கு மிக நெருக்கடியான மனநிலையை உருவாக்கும் தளங்கள். எழுத்தாளரின் சார்பு அல்லது நிழல் படைப்பின் மீது விழுந்துவிடுவதற்கு எல்லா சாத்தியங்களுமுள்ள களங்கள். என்னதான் படைப்பாளியாக இருந்தாலுமே கூட எல்லாவற்றையும் முழுமையாக அனுகிப் பார்க்கும் மனப்பான்மையைப் பெறுவது கடினம். அதீன் இதை முழுமையாகக் கடந்திருக்கிறார். முழுக்க முழுக்க படைப்பவனின் மனநிலையில் இயங்கியிருக்கிறார். நாவல் வாசிப்பின் இன்னொரு வகையான அரசியல் வாசிப்பு கொண்டிருப்போருக்கும் இந்நாவல் பெரும் ஆச்சரியத்தையோ அல்லது ஏமாற்றத்தையோ தரலாம். என்னுடைய முதல் வியப்பு இந்நாவல் எவ்வித சார்புத் தன்மையுமில்லாமல் முழுப்படைப்பாக பரிணமித்திருப்பிலிருந்து துவங்குகிறது.

இரண்டாவதும் மிகப் பிரம்மாண்டமானதாகவும் நான் நினைக்கும் அம்சம் இந்நாவலில் பின்னிப் பினைந்திருக்கும் இயற்கையின் இருப்பு. முன்னுரையில் நிகிலேஷ் குஹா குறிப்பிட்டிருப்பது போல இந்தியக் கலையின் சிறப்பு அது இயற்கையுடன் கொண்டுள்ள உறவாகத்தான் இருக்கிறது. நீலகண்டப்பறவையைத் தேடி இயற்கையின் மீது வரையப்பட்ட சித்திரமாகத்தான் வடிவம் பெற்றிருக்கிறது. இந் நாவலில் இடம்பெறும் பூக்கள், மரங்கள், பறவைகள், பெயர்களை தனியே எழுதி வைத்துக் கொண்டு அவற்றை புகைப்படங்களாய், இயன்றால் நேரில் பார்த்துவிட விருப்பம் கொண்டேன். முதலில் நீலகண்டப் பறவையையே நான் பார்த்ததில்லை. நண்பர்களின் உதவியுடன் இணையப்பக்கங்களில் தேடி அச்சிறுபறவையின் கம்பீர அழகை புகைப்படமாகக் கண்டேன்.


இந்நாவலில் இடம்பெற்றிருக்கும் ஹாட்கிலாப் பறவை, செங்கடம்பு மரம், கட்டாரி மரம்/பழம், பிரம்புக் கொழுந்து, கிரெளஞ்சப் பட்சி, மட்கிலாக் காடு, தர்மூஜ் பழம்/ வயல், எண்ணற்ற மீன் வகைகள் (சேலா,டார்க்கீனா,பூண்ட்டி), ஆமைகள், அரசமரம், ஆலமரம்,கல்யாண முருங்கை, வெள்ளைக் கொக்கு, மைனா, இலவமரம், அல்லி/அல்லிக்கிழங்கு, மின்மினிக் கூட்டம், மஞ்சத்தி மரம், பலிசப்பழம், மகிழ்மரம், பாக்குத் தோப்பு, சடுயிமரக்காடு, மரங்கொத்தி, பூனையவரைக்க்கொடி, வெற்றிலைக்கொடி, கள்ளிச்செடி, போன்னா மரங்கள், பிறப்பம்பழம், சாத்பாயி-சம்ப பறவைகள், காகம், மைனா, முதலை, உடும்பு, பருந்து, கோரைப்புல்காடு, சீதாப்பழமரம், தாமரை, பவழமல்லிமரம் என இன்னும் இன்னும் பட்டியலிட பட்டியலிட வந்துகொண்டேயிருக்கின்றன. அதீன் இந்தப் பூமியில் வசிக்கும் அத்தனை இயற்கை அழகையையும் மொத்தமாய் வாரி சுருட்டி இந்நாவலில் பொதிந்து வைத்திருக்கிறார். பக்கங்கள் பிரிக்கப் பிரிக்க ஒவ்வொரு அழகும் தனக்கே தனக்கான அடையாளங்களோடு மிகத் துல்லியமாய் வெளிப்படுகின்றன.

பருவ காலங்கள், அக்காலங்களுக்கேற்ற இயற்கையின் காட்சி மாற்றம், மனிதர்களின் மனநிலை என இந்நாவல் இயற்கையின் ஆதாரத்திலிருந்து வேர் விட்டிருக்கிறது. சுற்றிலும் ஏரிகள், ஆறுகள், குளங்கள், மரங்கள், பட்சிகள், வயல்கள் என செழித்த பிரதேசமாக இருந்தாலும் ஒரு பகுதி மக்கள் பசியால் வாடினர். மதமும் தீண்டாமையும் அத்தனைப் பசுமையிலும் மனிதர்களை வறிய நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. அதுவேகலகங்கள்ஏற்படஆதாரமாய்இருந்தது.

பைத்தியக்கார டாகுர் என்றும் பெரிய பாபு என்றும் அழைக்கப்படும் மணீந்திரநாத் நாவலின் தலைப்பிற்கான காரணமாய் அமைகிறார். பண்பாட்டைக் காரணம் காட்டி அவரது காதல் மறுக்கப்படுகிறது. அந்த ஏக்கம் அவரைப் பைத்தியமாக்குகிறது. காலம், அகாலம் என்றில்லாமல் அவர் சதா தன் காதலியைத் தேடி அந்நீர்சூழ் வெளியெங்கும் அலைகிறார். அவரது சகோதரர்கள் குடும்பத்தைக் கவனித்துக் கொள்கிறார்கள். அந்த ஊரின் மதிப்பும் செல்வாக்கும் வாய்ந்த குடும்பம். அக்குடும்ப மனிதர்கள் மீது சுற்று வட்டாரத்திலிருக்கும் எல்லா மனிதர்களுக்கும் தனி வாஞ்சையும் அன்பும் மிகுந்திருக்கிறது. குறிப்பாக மணீந்திரநாத் மீது அனைத்து தரப்பு மனிதர்களுக்கும் தனி அன்பும் அக்கறையும் உள்ளது.

மணீந்திரநாத்தின் சகோதரனான தனபாபு விற்கு ஸோனா பிறக்கிறான். அத்தகவலை வெளியூரில் வேலை பார்க்கும் தனபாபுவிற்கு சொல்ல ஈசம் செல்வதிலிருந்து நாவல் துவங்குகிறது. நாடோடிக் கதைகள், பேய்பிசாசு பயங்கள்,அழகியல் வர்ணிப்புகளோடு துவங்கும் ஆரம்ப அத்தியாயத்தில் விழுந்து விட்டால் திரும்ப மீள்வது கடினம்.

இன்னொரு பிரதான பாத்திரம் மாலதி. இளம் விதவை. டாக்காவில் நடந்த மதக்கலவரத்தில் அவளது புதுக்கணவன் கொல்லப்படுகிறான். வனப்பின் ஒப்பணை கலையாது கிராமம் திரும்பம் மாலதி எதிர்கொள்ளும் உடல்/மன சவால்கள் முழுக்கப் பெண் பார்வையில் சொல்லப்படுகின்றன (சுய இன்பம் உட்பட)

குழந்தை சோனா நாவலின் நாஸ்டால்ஜிக் பிம்பம். பால்யத்தின் அத்தனை அற்புதங்களும் சோனாவின் வழியாய் பதிவாகி இருக்கிறது. இந்நாவல் நான்கு தலைமுறை காலகட்டங்களை பதிவு செய்திருக்கிறது முறையே பெரியவர் மகேந்திரநாத், மணீந்திரநாத், மாலதி, சோனா ஆகியோர் வழியே காலத்தின் மாற்றங்களும் மக்களின் மன இயல்புகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

பண்பாடு, தத்துவம், தரிசனம், காதல், காமம், குழந்தமை,இளமை யாவும் இப்பாத்திரங்களின் வழியே – இந்துக் குடியிருப்பின் வழியே- இயற்கையின் பெரும் கருணையுடன் பதிவாகிவிட்டது. இதற்கு அப்படியே எதிரான வறுமை, பசி, துயரம், விளிம்பு வாழ்வின் கொண்டாட்டம், கலகம், மீறல், களிப்பு யாவும் முஸ்லீம் குடியிருப்பின் வழியாய் சாத்தியமாகி இருக்கிறது. டாகுர் குடும்ப வேலைக்காரன் ஈசம், சடுகுடு வீரன் பேலு, ஆன்னு, ஆபேத் அலி, ஜலாலி, ஜோட்டன், பக்கிரி சாயபு, ஹாஜி சாயபு அவர் மூன்று பீவிக்கள், இளைஞர்களான ஜப்பர், சம்சுதீன் போன்றோரின் வாழ்வு விலாவரியாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆக இதில் சொல்லப்படாத தன்மை எதுவுமே இல்லை. ஒரு முழுமையான நாவல் என்பதற்கான மிகச் சரியான உதாரணமாக நீலகண்டப்பறவையைத் தேடியை சொல்லலாம்

என்னை ஈர்த்த அடுத்த அடுத்த விஷயம் இந்த நாவலின் கட்டமைப்பு. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஒவ்வொரு தன்மையைக் கொண்டிருக்கின்றன. ஒரு சமூகத்திற்கான/பிரச்சினைக்கான அடையாளமாக ஒரு கதாபாத்திரத்தை முன் நிறுத்துவது. இப்படியாய் அனைத்து தரப்பையும் பிம்பங்களாக உருவாக்கிவிட்டபின் சம்பவங்களை நிகழ்த்துவது. பின்பு அதன் விளைவுகளை சொல்வது. இப்படியாய் காரணம் விளைவு மற்றும் இவ்விரண்டிற்குமான நியாயங்களை எந்த பிசகுமில்லாமல் பதிவு செய்வது. மிக முக்கியமாய் காலகட்டத்தை உருவாக்குவது. அக்காலகட்டத்தில் நிகழ்ந்தவற்றை வரலாற்றுப் பிசகில்லாமல் முடிந்தவரை நேர்மையாக சொல்வது இந்த மொத்த விஷயங்களும் சொல்லப்படும் சூழலை உருவாக்குவது. சூழலின் கண்ணாய் மாறி தென்படும் அத்தனையும் முழுமையாய் பதிவு செய்வது. இவை எல்லாமும் அடுக்கடுக்காய் நீலகண்டப்பறவையைத் தேடியில் சாத்தியமாகி இருக்கிறது

நாவலில் பல உணர்ச்சிகரமான நிகழ்வுகள்/ காட்சிகள் வருகின்றன. அவை அழகியலின் உச்சம் எனக் கொண்டாடத்தக்க மொழியில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. ஆபேத் அலி யின் மனைவி ஜலாலி ஒரு குளிர்காலத்தில் அல்லிக் கிழங்கு பறிக்க ஏரிக்குப் போகிறாள். உணவுக்கு மிகவும் தட்டுப்பாடான காலம் என்பதால் அல்லிக் கிழங்கும் கிடைக்காமல் போகிறது. பசியின் உந்துதலில் மிகவும் ஆழமான பகுதிக்கு நீந்திச் செல்பவள் ராட்சசக் காஜர் மீனால் கொல்லப்படுகிறாள். அந்தி சாய்ந்துவிட்ட பிறகு தனியே மிதக்கும் அவள் கூடையை வைத்துதான் அவளை ஏரி விழுங்கிவிட்டதை கிராமம் அறிகிறது. ஆபேத் அலியும் அவர்களின் மகன் ஜப்பாரும் ஊரில் இல்லை. அந்தக் காட்சி இப்படித் துவங்குகிறது

ஏரியில் மிதக்கும் கூடை அசையாமல் நின்றது. காற்று அடங்கிவிட்டது.தாமரை இலைகள் அந்தக் கூடையைத் தடுத்து நிறுத்திவிட்டன. அஸ்தமிக்கும் சூரியனின் ஒளியால் தண்ணீர் ரத்தம் போல, பிறகு வெளிர் சிவப்பாக, பிறகு கொஞ்சங் கொஞ்சமாக சிவப்பு நிறம் மங்கி நீலமாகிவிட்டது. பிறகு பசுமை நிறம்,பிறகு கறுப்பாகிவிட்டது. தண்ணீர் சலனமற்று இருந்தது. அதில் குமிழி கூட எழவில்லை. குளிர் காரணமாக மீன்களுக்குக் கூட அசைய துணிவு பிறக்கவில்லை.

பைத்தியக்கார டாகுர் சொன்னார். “கேத்சோரத்சாலா

ஜலாலியைத் தேடி தோடர்பாக் இளைஞர்கள் நீரில் அங்கும் இங்குமாக ஆனால் பத்திரமாக மூழ்கி எழுகின்றனர். இரவு,சடலம் குறித்தான பயம் அவர்களிடையே இருக்கிறது. பைத்தியக்கார டாகுர் துர்கா பூஜைக்கு காவு கொடுக்கப்பட்ட எருமை மாட்டின் தலையுடன் பேசிக் கொண்டிருக்கிறார். எருமை மாட்டின் தலை கடவுள், மதங்கள், சம்பிரதாயங்கள் பெயரால் பலி மாதிரியான அக்கிரமங்கள் நிகழ்வதை உக்கிரமாய் அவருடன் விவாதிக்கிறது. அத்தலை ஒரு வெளவாலாய் மாறி ஏரியின் மீது பறக்கிறது. அத்தலைக்கு சிறகுகள் முளைக்கின்றன. டாகுர் அதனுடன் பேசுவதை நிறுத்திவிட்டு  ஏரியில் ஒரு மனிதர் மூழ்கிவிட்டதை உணர்ந்துகொண்டு ஏரியில் பாய்கிறார். ஜலாலியின் சடலத்தோடு மேலேழுபவருக்கு காட்சிகள் மாறிப்போகின்றன. தோளில் இருக்கும் சடலத்தை தன்னுடைய காதலி பாலின் என நினைத்துக் கொள்கிறார். எதிரே விரிந்திருக்கும் சூனிய வெளியை போர்ட் வில்லியசம்சாகவும் ஆங்கிலேய சிப்பாய் கூட்டம் பாலினை அவரிடமிருந்து பிரித்துக் கூட்டிக் கொண்டு போக வருவதாகவும் நினைத்துக் கொண்டு ஓடத் துவங்குகிறார். அவர்கள் மதப்படி ஜலாலியின் உடலை இந்நிலையில் அவளது கணவன் கூட பார்க்கக் கூடாது. ஆனால் இவர் தோளில் தூக்கிக் கொண்டு ஓடுகிறார். மொத்த கூட்டமும் திகைத்து அவரை வளைத்து நெருங்குகிறது. சாமு அவரிடம் போய் சின்னம்மாவை கொடுங்க எனக் கேட்கிறான். டாகுர் மிக சாதுவாய் சடலத்தை ஒப்படைக்கிறார்.

நாவலில் வரும் மிக உணர்ச்சிகரமான காட்சிகளில் இந்தப் பகுதி முதலாவது.

அடுக்கடுக்காய் ஏராளமான சம்பவங்கள். திருவிழாக் கலகம் விவரிக்கப்படும் முறை இன்னொரு உச்சம். சிறுவன் சோனாவைத் தவறவிட்ட ஈசமின் பதபதைப்பும் பயமும் நம்மையும் தொற்றிக் கொள்ளும். கலகங்களுக்கு முன்பு - லீக் மற்றும் ஆர் எஸ் எஸ் தேவைகளுக்கு முன்பு- மக்களிடையே ஒரு இணக்கம் இருந்தது. பைத்தியக்கார டாகுரை பத்திரமாய் பார்த்துக் கொள்வதை தங்களது கடமையாகவே மொத்த முஸ்லீம் குடியிருப்பும் உணர்கிறது. மாலதி யின் இளம் பிராயத்து தோழர்களான சாமுவும் ரஞ்சித்தும் முறையே லீக் மற்றும் இந்துத்வ பிடிகளில் விழுகின்றனர். சாமு கிராமம் முழுக்க போஸ்டர் ஒட்டுகிறான். மக்களைத் திரட்டி கூட்டம் போட்டு அவர்களின் வறிய நிலைக்கான காரணம் இந்துக்களே என கற்பிக்கிறான். அதன் வழியாய் இந்துக்கள் மீது வன்மம் எல்லோருக்கும் முளைவிட காரணமாகிறான். ரஞ்சித் ஏற்கனவே தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறான். அதன் நீட்சியாய் சில காலம் கிராமத்தில் வந்து தங்கியிருக்கிறான். முஸ்லீம்களிடமிருந்து காத்துக் கொள்ள பெண்கள் சிறுவர் உட்பட அனைவருக்கும் இரவில் ரகசியமாய் கத்திப் பயிற்சி மற்றும் சண்டைகளை கற்றுத் தருகிறான். இந்தத் தீவிரங்களை நீக்க சோனாவின் பால்யம் இடையிடையே மிக விஸ்தாரமாய் சொல்லப்படுகிறது. இந்துச் சிறுவர்கள் மனதில் ஆழமாய் தீண்டாமையை நுழைப்பதை சோனாவின் வழியாய் டாகுர் குடும்பப் பெண்கள் வழியாய் சொல்லப்படுகிறது

நாவலின் இன்னொரு சுவாரசியப் பாத்திரம் ஜோட்டன். மூன்று கல்யாணம். பதினாறு குழந்தைகள் ஆனாலும் உடம்பிற்கு வரி கொடுக்க ஏங்கும் நாற்பது வயதுப் பெண். நான்காவதாய் பக்கிரி சாயபு வந்து அழைத்துப் போவார் எனக் காத்திருக்கிறாள். ஓர் இரவில் டாகுர் வீட்டில் வெகுநாட்களுக்குப் பிறகு நல்ல சாப்பாடு சாப்பிட்டுவிட்டு நீரில் நீந்தித் திரும்ப வருபவள் வழியில் அவளின் சம வயது மன்சூரைப் படகில் வைத்து சந்திக்கிறாள். கேலியும் கிண்டலுமான பேச்சு கலவியில் முடிகிறது. ஒருநாள் பக்கிரி சாயபு வந்தே விடுகிறார். அவருடன் ஜோட்டன் கிளம்பிப் போய் தொலை தூரம் நடந்து ஒரு இடுகாட்டில் வசிக்கிறாள். மனம் முழுக்க காதலுக்காகவும் நல் உணவிற்காகவும் ஏங்கும் தூய ஆத்மா ஜோட்டன். கதையில் நிகழும் பயங்கரங்களில் ஒன்றான மாலதி சிதைக்கப்படும் தருவாயில் அவளை ஜோட்டன் தான் மீட்கிறாள். இறுதியாய் ரஞ்சித்தோடு வெளியேறும் மாலதி அவனோடு தொடர்ந்து போக முடியாத நிலை வரும்போது ஜோட்டனிடம் கொண்டு போய் தன்னை விடச் சொல்வதோடு நாவல் முடிந்துபோகிறது.

மாலதியைக் காப்பாற்றி அவளது வீட்டாரிடம் பக்கிரி சாயபு ஒப்படைக்கும் காட்சியும் ஜலாலியை டாகுர் மீட்டெடுக்கும் காட்சியும் மனித நேயத்தின் ஆழமான தரிசனங்கள். இந்த நேயம் ஆதாரமாக, நாவலின் மைய்யமாக எல்லாப் பக்கங்களிலும் படர்ந்திருக்கிறது. சம்பவங்களின் விநோதக் குழம்பலே பல திரிபுகளுக்கான காரணங்களாக அமைந்துவிடுகின்றன. டாகுர் குடும்ப உறவுகள், திருவிழாக்கள், படோபகங்கள், சோனாவின் உறவுக்கார சிறார்கள் அவர்களிடையே நிலவும் சம்பாஷனைகள், போன்றவை மிக விஸ்தாரமாக சொல்லப்பட்டிருக்கும் பகுதி மட்டுமே சற்று அலுப்பாக இருக்கிறது. ஆனால் பைத்தியக்கார டாகுர் பாத்திரம் இந்த அலுப்பை சமன் செய்துவிடுகிறது.

ஒரு மழை கொட்டும் மாலையில் இரண்டு நாட்களாக வயிற்றில் உணவு விழாத ஜலாலி, மாலதி வளர்க்கும் வாத்துகளில் ஒன்றைத் திருடி வறுக்க வழியில்லாமல் சுட்டுத் தின்னும் பகுதி, முஸ்லீம் குடியிருப்பிற்கு பைத்தியக்கார டாகுர் வந்து எல்லாரையும் பார்த்துவிட்டு போவதும் அவருக்கு ஊரே தங்களிடமிருப்பதைக் கொடுத்து அனுப்பும் பகுதி, சோனாவும் பாத்திமாவும் தொலைந்து போகும் பகுதி, யானை மீதேறி டாகுர் தொலைந்து போகும் பகுதி, என எழுத் எழுத நினைவிலிருந்து அற்புதமான காட்சிகள் வந்து கொண்டே இருக்கின்றன.

இந்நாவலின் முதல் பதினெட்டு அத்தியாயங்கள் பதினெட்டு தனித் தனி சிறுகதைகளாக எழுதப்பட்டனவாம். பின்பு முழு நாவல் வடிவமாக வந்திருக்கிறது. அதீன் இந்த நாவலை எழுத பத்துவருடங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார். 1961 லிருந்து 1971 வரைக்குமான காலகட்டத்தை இந்நாவலுக்காக செலவிட்டிருக்கிறார்.
இந்நாவல் வாசித்துக் கொண்டிருக்கும்போதே திடீரென முடிந்து போனது. எல்லாமே அந்தரத்தில் நின்றுவிட்டதைப் போன்ற தோற்றம் நாவலை வாசித்து முடித்த இரண்டு நாட்களுக்கு இருந்து கொண்டிருந்தது. பின்பு இணையத்தில் தேடிப்பார்த்ததில் நீலகண்டப்பறவையைத்தேடிஇவர்எழுதியTrilogy யானNilkantha Pakhir Khonje, Aloukik Jalajan and Ishwarer Baganயின்முதல்பாகம்மட்டுமேதான்எனத்தெரியவந்தது. மற்றஇரண்டுநாவல்களும்தமிழில்மட்டுமல்லஆங்கிலத்திலும்மொழிபெயர்க்கப்படவில்லை. இவரைப்பற்றியவிக்கிபக்கமும்ஏனோதானோவென்றுஇருக்கிறதுPanchashati Galpo என்கிறசிறுகதைத்தொகுப்பிற்காக 2001 இல்சாகித்யஅகடாமிவிருதைப்பெற்றிருக்கிறார். இந்நாவலைமொழிபெயர்த்திருப்பவர்எஸ்.கிருஷ்ணமூர்த்தி. வாசிப்பிற்குத்தடையில்லாதசிறப்பானமொழிபெயர்ப்பு.

இரவுக் காட்சியை விவரிக்கும் பகுதியில் இந்த வரி வரும் “உலகம் முழுதும் நிலவில் முழுகிக் குளிக்கும்போது ஆழமான நீரில் முழுகிச் சாக ஆசை யாருக்குத்தான் ஏற்படாது?” இதைவாசிக்கும்போது உதட்டில் சிரிப்பு வந்து ஒட்டிக் கொண்டது. நீரில் மூழ்கிச் சாவதைப் பற்றி நானும் எழுதியிருக்கிறேன். காலம், பிரதேசம், பேதங்கள் எல்லாம் தாண்டிய பொது பைத்தியம்மட்டும்தான். இந்தப் பைத்தியத்தன்மையின் சாரம் ஒன்றே ஒன்றுதான் அது சகலத்திலும் ஆழத்தைத் தேடும், இதில்லை இதில்லை எனக் கதறியபடி உச்சம் நோக்கி ஓடும். இந்நாவலை எழுதியவரின் பெயரைக்கூட என்னால் சரியாக உச்சரித்துவிட முடியாது. இவர் காட்சிப்படுத்தியிருக்கும் உலகத்தை கற்பனையில் கூட கண்டதில்லை. ஆனால் நானும் இவரும் ஒரே பைத்தியக் குழாமாகத்தான் இருக்க முடியும். இந்த எண்ணம் உதித்த நிமிடம் பயங்கர இறுமாப்பாக இருந்தது. நாவலின் தலைப்பாக இடம்பெற்றிருக்கும் நீலகண்டப்பறவை நாவலில் ஒரு இடத்தில் கூட வரவில்லை. நாவலிலேயே இடம்பெறாத பறவை ஏன் தலைப்பில் வந்தது? என யோசித்துக் கொண்டிருந்தேன். பிறகு மெதுவாய் பைத்தியங்கள் என அறியப்படுவோர் தேடுவது, எப்போதும் எளிதில் தட்டுப்படாதவற்றைத்தானே என மன சமாதானம் செய்து கொண்டேன்.

திரும்புதல்

$
0
0

உன்னிடமேவந்துவிட்டேன்.

இதோஇந்தக்கோடைக்கும்,நம்நகரத்திற்குசிவப்புமலர்கள்வந்துவிட்டன. நெருப்புமலர். நெருப்புபூத்தமலர். மலர்த்தீயில்உன்னைமலர்த்திமுத்தமிட்டநாளும்நினைவிற்குவருகிறது. ஐயோ, நினைவின்குரல்வளையைக்கடித்துதுப்பிவிடலாம்போலிருக்கிறது. சரிஇக்கோடையில்மலர்ந்ததீமலரில்நாம்வேறுவிதம்மலர்வோம்.

அவநம்பிக்கைமிளிரும்உன்கண்களிலிருந்துஇதுஇன்னுமோர்உச்சத்திற்கானவேட்கைஇன்னொருவேட்டைக்கானபசப்புஇன்னும்ஒரு, இன்னும்ஒரேஒருநரம்பதிர்விற்கானகுயுக்திஎன்பதாய்உணர்ந்துகீழ்மையடைகிறேன். என்சிறுமைகளைகளைந்துவிட்டுவந்தேன். உன்னிருவிழியுயர்வில்அத்தனையும்உயிர்த்துவிட்டன. உன்கருணைமொத்தமும்ஒளிரும்விழிகளினால் என்னைச்சகலத்திலிருந்தும்தப்புவி.

உன்னைவிடச்சிறந்தஇன்னொன்றைக்கண்டடையமுடியாமல்உன்னிடமேதிரும்பிவருகிறேன். கண்டிருந்தால்அப்படியேபோயிருப்பேன்தான். என்னிலும்சிறந்தஇன்னொன்றைநீதேடிப்போகவில்லைஎன்பதறிவேன். உன்னுடனிருக்கும்போதேநான்சிறந்தவனில்லைஎன்பதையும்அறிந்திருந்தேன். உன்அலகிலாக்கருணைஎன்னையும்சேர்த்தணைத்துக்கொண்டது. அக்கருணையின்மீதிருக்கும்நம்பிக்கையிலேயேதிரும்பிவந்தேன்.

இம்முறைசற்றுத்தெளிந்து, மலர்ந்து, கனிந்திருக்கிறேன். இந்நிதானம்ஒருபோதும்என்னைப்பிறழச்செய்யாதெனநம்பிக்கையுறுகிறேன். பரவசமோசிலிர்ப்போபிறழ்வின்றியறியாஎன்னின்பழகியநான்திகைத்துப்போகலாம்தான். இதுநாள்வரைஅதன்கால்தடம்தடவித்தொடர்ந்துபரவசசிலிர்ப்படைந்தகுருட்டுவெளவால், திசைகளற்றவெளியில்தோன்றியதிறப்பையும்கைவிட்டுஅந்தரத்தில்தலைகீழாய்தொங்கும்தான். கைவிடப்படுவேன்தான். ஆனாலும்என்கண்ணே, என்னின்பழையஅறிதல்சிலிர்ப்பின்கசடாய்சலிப்பைத்தந்தது. ஒருகட்டத்தில்சிலிர்ப்படங்கிசலிப்புமட்டுமேமிகுந்திருந்தது. போதும்.கருணையே,சகலத்திலிருந்தும்என்னைத்தப்புவி.

என்னில்நாமைஉணர்ந்தகணம்நான்கரைந்தமுத்தநொடிசகலமும்கரைந்தஉடற்தழுவல் - பிறழ்வைத்தடம்பிடித்தபரவசமுதற்கணம்- எல்லாமும்தொலைத்து வந்திருக்கிறேன். சிலிர்ப்பின்மறைமுள்என்தொண்டையைத்தைத்ததுஉட்பட. உன்னை புத்தம் புதிதாய் அறிவதிலிருந்து என்னைப் புதுப்பிப்பேன்.

நான்உன்னிடமேவந்துவிட்டேன். என்னைத்தப்புவி

ஓநாய் முயல் மற்றும் நரி

$
0
0

1.

பனித் துண்டங்கள் சூறைக் காற்றில் அலைந்து கொண்டிருந்த அகாலத்தில்சாலையோர மரவீட்டின் கதவு தட்டப்பட்டது. ஓநாய் தோலாடையணிந்தவள் கதவைத் திறந்து இடுங்கிய கண்களால் உற்றுப் பார்க்கிறாள். பனி பூத்திருந்த பூட்ஸ் கால்களோடும் மூச்சிழுப்புகளோடும்கரடித் தோலணிந்த ஒருவன் நடுங்கிச் சிரிக்கிறான். தலையசைப்பிற்குப் பின் உள்ளே வருகிறான். அறை நடுவில் எரிந்து கொண்டிருந்த தீயின் தணல் கூடுகிறது. வோட்கா புட்டி அவன் தொண்டைக்குள் சரிகிறது. கரையும் பனி நிமிடங்களுக்கிடையில் மிகலேவிச் என் பெயர் என்றபடி மஞ்சள் பற்களால் சிரிக்கிறான். அவள் திடுக்கிடுகிறாள். அவனை உற்றுப் பார்க்கிறாள்.பின் ஆடைக்குள் வைத்திருந்த குறுவாளினை அவனறியாமல் எடுத்து கைகளுக்குப் பின்னால் மறைத்துப் பிடித்துக் கொள்கிறாள். இப்போது இரவை நகர்த்தவும் அவளைக் கிளர்த்தவும் வரிசையாய் சாகஸக் கதைகளைச் சொல்லத் துவங்கியவனை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

அவன் மீண்டும் புட்டியை தொண்டைக்குள் சரிக்கும் நொடி

அவளுக்கானது.


- Inspired from coen brother’s ‘A serious Man’



2.

ஒவ்வொரு இதழ் முத்தத்திற்கும்
சின்னச் சிணுங்கலோடு
கண்ணாடி வளையல்
குலுங்க
உதடுகளை அழுந்தத்
துடைத்துக் கொள்வாள்
துடைக்கத் துடைக்க
என்னிலிருந்து
முத்தம் சுரந்து கொண்டிருக்கும்
நேற்று 
தன் சின்னஞ்சிறு முன்னங்கால்களால்
முகத்தை சதா துடைத்தபடியிருந்த
வெண்முயல் ஒன்றை
கண்ணாடியறைக்குப் பின்னாலிருந்து
பார்த்தேன்
முயல்களுக்கு
கொம்புகளோ, றெக்கைகளோ
முளைக்காதென்பதும்
முயல்கள் ஒருபோதும் 
நரிகளாகாதென்பதும்
நியதியாயிருப்பது
நிம்மதியைத் தந்தது
ஒரு கணம்
ஒரே ஒரு கணம்
விலங்குப் பண்ணையிலிருந்து
நரியொன்று வெளியேறியதை
கண்ணாடியும் நானும் பார்த்தோம்

ஓரிதழ் பூ - அத்தியாயம் ஒன்று

$
0
0
ஒரு மட்டமான மதுவிடுதியில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தேன். மட்டம் என்பது நாகரீக உச்சரிப்பு. படு கேவலமான பார் என்பது சரியாக இருக்கலாம். பார் என இதைச் சொல்லலாமா? என்று கூடத் தெரியவில்லை. தகரக் கூரை வேய்ந்த குட்டிச் சுவர் என்பது சரியாக இருக்கலாம். ஒரு மூலையிலிருந்து மூத்திர நாற்றம் கசிந்து வந்து கொண்டிருந்தது. கூட்டமாய் கூரைக்குள் குடித்து விட்டு கூரைக்கு வெளியே போய் அந்த மூலைக்குப் பின்னால்தான் ஒன்றுக்கடிப்பார்கள். இன்னொரு மூலையில் மஞ்சளாய் வாந்தி ஈ மொய்த்துக் கொண்டிருந்தது. நின்றபடியே சரக்கை வாயில் ஊத்திக் கொள்ள ஏதுவாய் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் சுவரில் எப்படியோ அரையடிப் பலகையை நீளத்திற்கும் அடித்து வைத்திருந்தார்கள்.

அறை நடுவில் கால் உடைந்த ப்ளாஸ்டிக் மேசை ஒன்றும், எதிரெதிராய் இரண்டு பிளாஸ்டிக் ஸ்டூல்களும் போடப்பட்டிருந்தன. மூலைகளுக்கு முதுகு காட்டியபடி அமர்ந்திருக்கிறேன். அரைப் புட்டி கருப்பு ரம் பாதி தீர்ந்திருந்தது. மேசை மீது சின்னதாய் பல்லால் கடித்து துளையிட்ட ஒரு வாட்டர் பாக்கெட். உள்ளங்கை அகல எவர்சில்வர்வர் தட்டில் சுண்டல். அடுத்த பாதி புட்டி வயிற்றுக்குள் போவதற்கு முன்பு ஒரு சிகரெட் வேண்டும். கையில் சிகரெட் இல்லை. வாங்க காசும் இல்லை. வாசலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். யாராவது வருவார்கள். வரவேண்டும்.

 நண்பகல் பதினோரு மணி இருக்கலாம். வெயில் மெதுவாய் உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தது. யாரும் வரக்காணோம். கடைப் பையனிடம் கேட்கலாம். சிகரெட்தானே. நாளைக்கு காசு தருவதாய் சொல்லலாம் என்றபடியே ”தம்பீ” எனக் குரல் கொடுத்தேன். சற்று நேரம் கழித்து காக்கி டவுசர் அணிந்த ஒரு சிறுவன் உள்ளே வந்தான். இந்தக் கடைக்கு பல முறை வந்திருக்கிறேன். ஒரு முறை கூட இந்த சிறுவனை சரியாய் பார்த்ததில்லை. பிஞ்சு முகம். பனிரெண்டு வயதிற்கும் குறைவாய்தான் இருக்க வேண்டும்.

 “இன்னா வோணும்னா?” மூக்கை உறிஞ்சிக் கொண்டான்.

அவனிடம் கடன் கேட்க கூசியது.

 “ஒண்ணுமில்லபா அப்றமா கூப்டுறென்” என்றேன்.

 அவன் திரும்பிய நொடியில் ஒரு காவிச் சட்டை உள்ளே நுழைந்தது. பாரை ஒரு முறை நோட்டம் விட்டு முகத்தை லேசாய் சுளித்தது. எனக்கு எதிரிலிருந்த ஸ்டூலை எடுத்து மேசைக்கு பக்கவாட்டில் போட்டு அமர்ந்து கொண்டு என்னைப் பார்த்துச் சிரித்தது.

 “சாமிங்க கூட குடிக்க ஆரம்பிச்சிருச்சா?” என சிரித்தேன்.

 சாமி எதுவும் சொல்லாமல் மெதுவாய் புன்னகைத்தார். கடைப் பையனிடம் பணத்தைக் கொடுத்தார். நான் குடிக்கும் அதே கருப்பு ரம்மைக் கேட்டார். ஜோபியில் கைவிட்டு ஒரு சாதா சிகரெட்டை வெளியில் எடுத்து மேசையில் லேசாய் தட்டி வாயில் வைத்தார்.

 “எனக்கொண்ணு கிடைக்குமா?” என்றேன் 

“இத உன்னால அடிக்க முடியாதே”

 “ஏன்?”

 “இது கஞ்சா”

 “அதனால என்ன கொடுங்க ஒரு இழுப்பு இழுக்கிறேன்”

 “பழக்கம் இருக்கா?”

 “இல்ல”

 “அப்ப வேணாம் ஏற்கனவே குடிச்சிருக்க. சுத்தி கடாசிரும்”

 “அட கொடு சாமி. கஞ்சாவா நானான்னு பாத்துடலாம்”

 சாமி இன்னொரு சிகரெட்டை ஜோபிக்குள் கைவிட்டுத் துழாவி வெளியில் எடுத்தார். எனக்காய் நீட்டினார். வேகமாய் வாங்கிப் பற்ற வைத்து இழுத்தேன். நாசியில் விநோத மணம். துவரஞ்செடி பற்றி எறிவதுபோல ஒரு வாசம். இழுத்து வெளியே விட்டால் ஊதுபத்தி புகைபோல மெல்லிசாய் வெளியேறியது.

 “இன்னா சாமி கிக்கே இல்ல. சாதா சிகெரெட்ட விட மட்டமா கீது” என சிரித்தேன்

 சாமி புன்னகைத்தார்.

 அடுத்தடுத்த நான்கைந்து இழுப்புகள். விர்ரென தலை சுற்ற ஆரம்பித்தது. புது விதமான போதை. எல்லாமே நழுவி நழுவிப் போவது போல இருந்தது. நொடிகள் கரையக் கரைய சாமியும் நானும் செங்குத்தாய் தரையில் விழுவது போல இருந்தது. போதையை வெளிக்காட்டிக் கொள்ளாதிருக்க பயங்கரமாய் மெனக்கெட்டேன். ஸ்டூலில் அமர்ந்திருந்த உடல் வளைந்தது. சாமி என்னைக் கவனிக்காதவராய் பையன் கொண்டுவந்த கால்புட்டி ரம்மை நிதானமாய் குடித்து முடித்தார். மேசை மீது குடிக்காமல் இருந்த என்னுடையதைப் பார்த்தார். என்னால் உடலை அசைக்க முடியவில்லை. ஏதோ சொல்ல வாயெடுத்தேன் நாக்கு வளைந்து குழறியது. என்னைச் சுற்றி நடப்பதை மங்கலாய் பார்க்க முடிந்தது ஆனால் என்னால் பார்க்க மட்டும்தான் முடிந்தது. சாமி எழுந்து நின்றார் என்னுடைய மீதி ரம்மை மூடி திருகி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வெளியேறினார். உடல் ஸ்டூலில் உட்கார முடியாமல் தொம்மென கீழே விழுந்தது. யாரோ இழுத்துக் கொண்டுபோய் மூத்திர மூலையில் கிடத்தினார்கள்.

 கண் விழித்தபோது சாலையோரத்தில் கிடந்தேன். சுற்றிலும் இருள் அடர்த்தியாய் சூழ்ந்திருந்தது. சாலையில் ஆள் நடமாட்டமே இல்லை. சற்று நேரம் ஒன்றும் புரியாமல் இருந்தது. எழுந்து நிற்க முயன்று விழுந்தேன். உடல் கிடுகிடுவென ஆடியது. மெதுவாய் மதிய வாக்கில் நிகழ்ந்த சம்பவங்கள் நினைவில் வந்தன. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்கலாம். கிட்டத்தட்ட பனிரெண்டு மணிநேரம் சுயநினைவில்லாது கிடந்திருக்கிறேன். பயங்கரமாய் பசித்தது. தாகம் நாக்கை வறட்டியது. எழுந்து நிற்க முடியவில்லை. தலை தூக்க முடியாமல் கீழே கிடந்தது. சற்று நேரத்தில் யாரோ நடந்து வரும் ஓசை கேட்டது. கால் செருப்பு சப்தம் அந்த நள்ளிரவில் சீரான லயத்துடன் காதில் விழுந்தது. யாரோ என்னைத் தூக்கி நிறுத்தினார்கள். தண்ணீரை முகத்தில் அடித்தார்கள். கண் திறந்தால் மதியம் கஞ்சா கொடுத்த சாமி. கையில் வாட்டர் பாட்டிலோடு நின்றுகொண்டிருந்தார்.

 அவரிடமிருந்து பாட்டிலை கிட்டத்தட்ட பிடுங்கி தொண்டையில் சரித்துக் கொண்டேன். பாட்டிலின் கடைசித் துளி நீரையும் குடித்த பின்னர் சற்று தெம்பு வந்தார் போலிருந்தது. சாமி பாட்டிலை என் கையிலிருந்து வாங்கியபடி 

“வீட்டுக்கு போ” என்றார்

 அவரை சோர்வாய் பார்த்தேன்

 “வீடு இருக்கில்ல”

 “இருக்கு. ஆனா போனாலும் ஒண்ணுதான் போவலனாலும் ஒண்ணுதான்” வார்த்தைகள் சன்னமாய் வந்து விழுந்தன

 சாமி என்ன ஒரு நொடி ஆழமாய் பார்த்தார்.

"சரி வா என்னோட" என்றபடி முன்னால் நடந்தார்.

 - மேலும்

 புகைப்படம் : பினு பாஸ்கர்
Viewing all 133 articles
Browse latest View live